Meendum Oru Mariyath
எழுத்தாளரான பாரதிராஜா லண்டனில் வசிக்கும் மகனால் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுகிறார். அங்கு அவருடன் பழகி இறந்த நண்பரின் கடைசி ஆசையை நிறைவேற்ற ஒரு பயணத்தை தொடங்குகிறார். அப்போது அக்கா கணவரின் கொடுமையில் இருந்து தப்பித்த நட்சத்திராவை சந்திக்கிறார். தற்கொலை முடிவில் இருக்கும் நட்சத்திரா மனதை மாற்றிக்காட்டுவதாக உறுதி தருகிறார். 
நாட்களில் மாற்ற முடியாவிட்டாலே தன் கையாலேயே கொன்றுவிடுவதாக சவால் விடுகிறார். அந்த 10 நாட்கள் பயணத்தில் நட்சத்திராவுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தை புரியவைத்தாரா? பாரதிராஜா எடுத்துக்கொண்ட கடமை என்ன ஆனது? பாரதிராஜா, நட்சத்திரா இருவருக்கும் இடையே உண்டாகும் உறவு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
பாரதிராஜா தனக்கான கச்சிதமான கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் அனுபவ நடிப்பை காட்டி இருக்கிறார். அவர் பேசும் சில வசனங்கள் அழுத்தமானதாக இருக்கின்றன.
ராசி நட்சத்திரா தனது துறுதுறு நடிப்பால் கவர்கிறார். பாரதிராஜாவிடம் அவர் குறும்பு செய்யும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. மவுனிகா, ஜோ.மல்லூரி இருவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
தற்கொலையோ, கொலையோ ஒரு உயிரை எடுக்கும் உரிமை நமக்கு இல்லை என்பதை படம் உணர்த்துகிறது. கதையில் இருந்த வலுவை திரைக்கதை, வசனங்களிலும் கொண்டு வந்திருந்தால் இந்த மரியாதையும் காலம் கடந்து பேசப்பட்டு இருக்கும்.
லண்டன் அழகை சாலை சகாதேவனின் கேமரா அப்படியே கொண்டு வந்துள்ளது. ரகுநந்தனின் பின்னணி இசை படத்துடன் ஒன்ற வைக்கிறது. பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.