சத்திய சோதனை திரை விமர்சனம்
அருப்புக்கோட்டையில் உள்ள சங்குப்பட்டி கிராமத்தில் பன மரங்கள் நிறைந்த காட்டில் நான்கு பேர் துரத்திச் சென்று ஒருவரை கொலை செய்கின்றனர். அந்த வழியே வரும் (பிரதீப்)பிரேம்ஜி அமரன் இறந்த உடலை இழுத்து ஒரு பனை மரத்தின் நிழலில் விட்டு விட்டு அந்த உடலில் இருக்கும் வாட்ச், செல்போன் மற்றும் ஒரு தங்க செயினை எடுத்துக் கொண்டு சங்குப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கச் செல்கிறார். செல்லும் வழியில் ஒரு பாட்டி நடந்து போய் கொண்டிருக்க, அவரையும் பத்திரமாக அழைத்துச் சென்று காவல் நிலைய வாசலில் இறக்கி விட்டு செல்கிறார். சங்குப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க செல்லும் பிரேம்ஜிக்கு பல பிரச்சனைகள் உருவாகிறது. இதனிடையே திடீர்திருப்பமாக கொலையாளிகள் நான்கு பேரும் சரணடைகின்றனர்.
கொலை செய்யப்பட்டவரின் உடாலில் நிறைய நகைகள் இருந்ததாகவும் கொலையாளிகள் சொல்ல போலீசிற்கு சந்தேகம் வலுக்கிறது. சங்குப்பட்டியில் புகார் அளிக்க வந்த (பிரதீப்) பிரேம்ஜியை நன்றாக விசாரித்தால் நகையை மீட்கலாம் என்ற தோரணையில் விசாரணை திசை மாறுகிறது.இரு கிராம காவல் நிலையத்திற்கிடையே நடக்கும் ஒரு கொலை, நேர்மையாக நடந்து கொள்ளும் இளைஞர், காணாமல் போகும் நகை, அதை தேடிக் கண்டு பிடித்து ஏமாற்ற நினைக்கும் போலீஸ் அதிகாரிகள், அவர்களை பேசியே வெறுப்பேற்றும் பாட்டி, சரியாக நடந்து கொள்ள பாடம் நடத்தும் நீதிபதி என்று படம் முழுவதும் சுவாரஸ்யம் குறையாமல் நகைச்சுவை மட்டுமே பிரதானமாக வைத்து லாஜிக் இல்லாமல் மெஜிக் செய்து படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளார் இயக்குனர் சுரேஷ் சங்கையா.
பிரேம்ஜி அமரன் படிப்பறிவில்லாத அப்பாவி இளைஞனாக, நல்லது செய்யப்போய் இக்கட்டில் மாட்டிக் கொண்டு முழிக்கும் கதாபாத்திரம். காதலி, குடும்பம் என்று அனைவரும் கேள்விகளால் துளைத்து எடுக்கும் நேரத்திலும் அமைதியாக பதில் சொல்லும் நேர்த்தியிலும், போலீசாரிடம் அடி வாங்கி புலம்பும் இடத்திலும் சிறப்பாக செய்துள்ளார்.நீதிபதியாக ஞானசம்பந்தம், நீதிமன்றத்தில் அனைவருக்கும் அறிவுரை வழங்கி விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்குள் ஏற்படும் பல சிக்கல்களை யதார்த்தமாகவும் அதை சமயம் சிந்தனையை தூண்டும் வகையிலும் பேசி கவனம் ஈர்க்கிறார்.
காவலர்களாக நடித்திருக்கும் சித்தன் மோகன் மற்றும் செல்வ முருகன் இருவரும் படத்தின் மற்றொரு ஹீரோக்களாக படத்தை தாங்கி பிடித்திருக்கிறார்கள். இவர்களுடைய முட்டாள்தனத்தால் காவல்துறை படும்பாடு சிரிப்பு சரவெடியாக வெடிக்கிறது. குறிப்பாக இவர்களின் வசன உச்சரிப்பு மற்றும் இயல்பான நடிப்பு கதைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.நீதிபதியாக நடித்திருக்கும் கு.ஞானசம்பந்தம், உண்மையான குற்றவாளிகளை பிடிக்காமல், தவறே செய்யாதவர்களை பிடித்து அவர்களிடம் வசூல் செய்யும் காவலர்களை கலாய்க்கும் விதமாக நடித்து அசத்தியிருக்கிறார்.பிரேம் ஜி-யின் அக்காவாக நடித்திருக்கும் ரேஷ்மா, மாமாவாக நடித்திருக்கும் கர்ணராஜ், பெண் போலீஸாக நடித்திருக்கும் ஹரிதா, போலீஸ் இன்பார்மராக நடித்திருக்கும் ராஜேந்திரன், நீதிபதிக்கே உத்தரவு போடும் பாட்டி என அனைத்து நடிகர்களும் மிக எதார்த்தமாக நடித்து கவனம் பெறுகிறார்கள்.கதைக்கு ஏற்ப பயணித்திருக்கும் ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.ரகுராம்.எம்-ன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருப்பதோடு, பாடல் வரிகள் புரியும்படியும் இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.