நாயகன் துல்கர் சல்மானும், நாயகி அதிதி ராவ்வும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் துல்கர் சல்மானின் குணம், அதிதியின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைப் பாதிக்கிறது. இதனால், சைக்காலஜிஸ்ட்டான காஜல் அகர்வாலிடம், தனது கணவரை காதலிப்பது போல நடிக்கச் சொல்லி உதவி கேட்கிறார் அதிதி ராவ்.
துல்கர் காதலில் விழுந்தால் அதை காரணமாக வைத்து அவரைப் பிரிந்துவிட நினைக்கிறார் அதிதி. முதலில் தயங்கும் காஜல் அகர்வால், துல்கர் சல்மானை நெருங்க ஆரம்பிக்கிறார். இறுதியில், துல்கர் சல்மானை அதிதி ராவ் பிரிந்தாரா? காஜல் அகர்வால் துல்கர் சல்மானை காதலித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் துல்கர் சல்மான், பேசிக்கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தில் பேசியே ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பேசுவது மட்டுமில்லாமல் கணவராக நடித்து இளம் பெண்களை ஏங்க வைத்திருக்கிறார்.
காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களில் நடித்த அதிதி ராவ், இந்த படத்தில் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஒருசில பெண்களின் குணத்தை அப்படியே பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரம். அதை உணர்ந்து சரியாக நடித்து இருக்கிறார். சைக்காலஜிஸ்ட்டாக வரும் காஜல் அகர்வால், வழக்கம் போல் தன்னுடைய அழகால் ரசிகர்களை தன் வசப்படுத்தி இருக்கிறார்.
