Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
தங்க பஸ்பம் தெரியும்... வெள்ளி பஸ்பம் பற்றி தெரியுமா

தங்க பஸ்பம் தெரியும்… வெள்ளி பஸ்பம் பற்றி தெரியுமா

Posted on September 8, 2019

தங்க பஸ்பம் தெரியும்… வெள்ளி பஸ்பம் பற்றி தெரியுமா?

உடம்பில் தாதுவைப் பலப்படுத்த பல மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட தங்க பஸ்பத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சித்த வைத்தியர் என்ற பெயரில் நடமாடும் பல போலி ஆசாமிகள் தங்கபஸ்பம் என்ற பெயரில் எதை எதையோ விற்று காசு பார்த்து வருகிறார்கள். ஆனால், எந்தச் செலவும் இல்லாமல் இயற்கையிலேயே இலவசமாக கிடைக்கிறது ஒரு மூலிகை. இதை இன்ஸ்டன்ட் காபி போல, இன்ஸ்டன்ட்டாக பயன்படுத்தலாம். இந்த மூலிகைக்குத் தாதுவை அதிகரிக்கும் தன்மை உண்டு. அதனால் இதை வெள்ளி பஸ்பம் என்கிறார்கள். நாம் தினமும் கடக்கும் சாலையோரங்கள், விவசாய நிலங்கள், வரப்புகள், வாய்க்கால் ஓரங்களில் சர்வசாதாரணமாக ஒரு களைச் செடியைப் போல் முளைத்து கிடக்கிறது அந்த மூலிகை. நாம் அதன் மகத்துவம் அறியாமல், காலில் போட்டு மிதித்துவிட்டு கடந்து கொண்டேயிருக்கிறோம். ஆனாலும் நம்மீது கோபம் கொள்ளமால், தனது விதைகள் மூலமாக, தனது சந்ததிகளை வளர்த்துக்கொண்டே இருக்கிறது அந்த மூலிகை. மனித குலத்துக்குத் தேவையான பல அரிய மருத்துவ குணங்களைக் கொண்ட அந்த மூலிகையின் பெயர்

#அம்மான்_பச்சரிசி.

அம்மான் பச்சரிசி

இப் ஃபோர்பியா ஹிர்டா(Euphorbia hirta) என்ற தாவரவியல் பெயர் கொண்ட அம்மான் பச்சரிசி இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. தீக்காயங்கள், சூட்டினால் ஏற்படும் கட்டிகள், வயிற்றுப்போக்கு, நமைச்சல் ஆகியற்றுக்கு இது அருமருந்து. இந்தச் செடியைப் பறித்து நிழலில் உலர்த்தி பொடி செய்துகொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் பொடியுடன் சமஅளவு கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து தினமும் இருவேளை குடித்து வந்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிக்கும். இந்தச் செடியின் எந்தப் பாகத்தை உடைத்தாலும் பால் வரும். அதனால் இதை, ‘சித்திரைபாலாடை’ எனவும் அழைக்கிறார்கள் சித்த மருத்துவர்கள். இந்தப் பால் மருத்துவ தன்மை வாய்ந்தது. உதடு, நாக்கு போன்ற பகுதிகளில் ஏற்படும் வெடிப்புகளை போக்கும் தன்மை இந்த பாலுக்கு உண்டு.

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கொடுப்பது தாய்ப்பால். ஆனால், நவீன உணவுப் பழக்கம் காரணமாக பல பெண்களுக்குப் பால் சுரப்பதேயில்லை. அதனால் ஆவின்பால் குடித்து வளர்கிறது வருங்கால இந்தியா. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியில்லாமல் ஐந்து வயதிலேயே கண்ணாடி அணிந்துக்கொள்கிறார்கள். இன்னும் சில நோய்தொற்றுக்கு ஆளாகிறார்கள். ஆரோக்கியமான குழந்தைகளை தாய்ப்பால் தான் உருவாக்க முடியும். சரி என்ன செய்ய அதான் இல்லியே என ஆதங்கப்படும் தாய்மார்களுக்கு உதவுவதற்காகவே காத்திருக்கிறது அம்மான் பச்சரிசி. இந்த மூலிகையின் பூக்களை சுத்தம் செய்து, பசும் பால் விட்டு அரைத்து, காலை, பசும்பாலில் கலந்து காலை, மாலை இருவேளையும் பருகி வந்தால் பால் நன்றாக சுரக்கும்.

உடம்பில் ஆங்காங்கே சின்னச் சின்னக் கட்டியாக தொங்கும் மரு, இன்றைக்கு பலபேருக்குத் தொல்லையாக இருக்கிறது. இந்த மருவை சுலபமாக அகற்ற உதவுகிறது அம்மான் பச்சரிசி. இதன் தண்டை உடைத்தால் பால் வரும். அந்தப் பாலை மருவின் வேர் பகுதியில் தடவி வர வேண்டும். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் மரு உதிர்ந்துவிடும். மருவின் தன்மைக்கு ஏற்ப மூன்று முதல் ஏழு நாள்களில் உதிர்ந்து விடும். மிகச் சுலபமாக மருவை அகற்ற இதைவிட சிறந்த வழியேதுமில்லை. அதனால்தான் இதை ‘மருஅகற்றி’ என அழைத்தனர் சித்தர் பெருமக்கள். அதேப் போல, சிலருக்கு காலில் ஆணி ஏற்படும். இதை அறுவைசிகிச்சை மூலமாக அகற்றுவார்கள். ஆனால், அது தேவையில்லாத ஒன்று. அம்மான் பச்சரிசி பாலை ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், வலி குறைந்து சிறிது நாளில் ஆணி மறைந்துவிடும்.

‘காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச்
சேர்ந்த தினவிவைகள் தேகம்விட்டுப்பேர்ந் தொன்றாய்
ஓடுமம்மான் பச்சரிசிக் குண்மை இனத்துடனே
கூடுமம்மா னொத்த கண்ணாய் கூறு!’ (அகத்தியர் குணபாடல்)

இதன் இலைச் சாறை பருகினால் உடல்மெலிவு, மலச்சிக்கல், படை, நமைச்சல் போகும் என்கிறது இந்த பாடல்.

வெள்ளைப்படுதல் பெண்களுக்குள்ள பெரிய பிரச்னை. அதற்கு அருமையான தீர்வு அம்மான் பச்சரியிடம் இருக்கிறது. இதன் இலையைப் பறித்து, கழுவி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தச் சாறுடன் மோர் கலந்து காலை, மாலை இருவேளையும் பருகி வந்தால் ஐந்தே நாளில் வெள்ளைப்படுதல் நின்றுபோகும் என்கிறது சித்த மருத்துவம்.

அதெல்லாம் சரி, அம்மான் பச்சரிசி எப்படி வெள்ளி பஸ்பமாகும்?

அம்மான் பச்சரிசி இலை, தூதுவேளை இலை ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து பாசிபருப்பு, உளுந்தம் பருப்பு, தேங்காய் துருவல் ஆகியவற்றுடன் சேர்த்து கூட்டு செய்து, நெய் சேர்த்து உண்டு வந்தால் உடம்பில் தாது பலப்படும். விந்தணுக்கள் அதிகரிக்கும். அதனால் தான் சித்த புருஷர்கள் இதை வெள்ளி பஸ்பம் என்கிறார்கள். இத்தனை சிறப்புகளை வைத்திருக்கும் அம்மான் பச்சரிசி மூலிகையை சின்னச் சின்னத் தொட்டிகள் வைத்து வீடுகளில் கூட வளர்க்கலாம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம் – யுவன் சங்கர் ராஜா இசையில் புதிய கமர்ஷியல் விருந்து!*
  • அங்கீகாரம் திரை விமர்சனம்
  • கான்செப்ட் திரை விமர்சனம்
  • தி ஹிடன் புரோடெக்டர் திரை விமர்சனம்
  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme