Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
சியாட்டிக்கா பிரச்னை... ஏன், எதற்கு, எப்படி-indiastarsnow.com

சியாட்டிக்கா பிரச்னை… ஏன், எதற்கு, எப்படி?

Posted on April 11, 2021

சியாட்டிக்கா பிரச்னை... ஏன், எதற்கு, எப்படி-indiastarsnow.com

‘சியாட்டிக்கா’ (Sciatica) ஏற்படுத்தும் வலி வார்த்தையில் அடக்க முடியாதது. ‘கால் திடீர்னு மரத்துப்போகுது… தொடைப்பகுதியில இருந்து சுளீர்னு ஏதோ ஒண்ணு இழுக்குற மாதிரி வலி, பின்கால் வரைக்கும் நீளுது’ என்பார்கள் பாதிக்கப்பட்டவர்கள். 40 வயதைத் தாண்டிய பெண்கள்தான் இந்த சியாட்டிக்காவால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

சியாட்டிக்கா என்பது, முதுகில் ஆரம்பித்து, காலின் பின்பகுதியில் குதிகால் வரை நீளும் ஒரு நரம்பின் பெயர். உடலில் உள்ள நரம்புகளிலேயே, மிக நீளமான ஒற்றை நரம்பு சியாட்டிக்காதான். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால், கால் வலுவிழப்பது,

சோர்வு, உணர்வின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும். அண்மைக்காலமாக 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்தப் பிரச்னைக்கு ஆளாவது அதிகமாகியிருக்கிறது. கால் மரத்துப்போவது இதன் மிக முக்கியமான அறிகுறி. இந்தப் பிரச்னை இருப்பதை முதல் நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், எளிதாக குணப்படுத்தி விடலாம். பிரச்னையின் வீரியத்தைப் பொறுத்து, சிகிச்சை முறைகளும் மாறும்.  

சியாட்டிக்கா வருவதற்கான காரணங்கள்…

* முதுகெலும்பின் அசையும் மூட்டுகளில் வீக்கம் உண்டாவது.

* எலும்புகளுக்கு இடையே இருக்கும் ஜவ்வு விலகி பாதிப்படைவது.

* கருவுற்றிருக்கும் பெண்களின் கர்ப்பப்பை பலவீனமாக இருப்பது.

* வயது முதிர்வு காரணமாக ஏற்படும் டிஸ்க் ஸ்பாண்டிலோஸிஸ் (Disc spondylosis).

* எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பவர்கள்.

* தசைகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பவர்கள்

இந்தப் பிரச்னைகளில் ஏதோ ஒன்று ஒருவருக்கு ஏற்படும்போது தண்டுவடத்தை ஊடுறுவும் நரம்புகள் அழுத்தம் பெற்று சுருங்கத் தொடங்கும். ரத்த ஓட்டம் பாதிப்படையும். இதனால், நரம்பு வலுவிழந்து, தன் வேலையைச் செய்ய முடியாமல் திணறும். நாளாக ஆக, இந்த நரம்பில் வலி எடுக்கத் தொடங்கும்.

சியாட்டிக்கா ஏற்படுத்தும் வலி…

* ஏதோவொரு காலின் பின்பகுதியில் வலி, எரிச்சல் உணர்வு ஏற்படும். சில நேரங்களில், இரண்டு கால்களிலும் வலி ஏற்படலாம்.

*எழுந்திருப்பதற்கும் அமர்வதற்கும் மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும். நிற்கும் நேரத்தை விட, உட்கார்ந்திருக்கும் நேரத்தில் வலி அதிகமாக இருக்கும்.

* ஆரம்ப நாள்களில், முதுகின் கீழ்ப் பகுதியில் வலி எடுக்கும். பலரும் இதனைச் செரிமானக் கோளாறு எனவும், வாயுப் பிரச்னை எனவும் நினைத்துக் கடந்து விடுவார்கள். இந்தப் பிரச்னை தொடர்ந்தால், காலில் வலி அதிகமாக ஆரம்பிக்கும். நரம்பை இழுப்பது போன்ற உணர்வு மேலிருந்து கீழ்வரை இருக்கும். அப்போதும் கவனிக்காமல் விட்டுவிட்டால், தொடைப்பகுதி மரத்துப்போகும். பிரச்னை மோசமான நிலையை அடைந்து விட்டதற்கான அறிகுறி தான் இது. இவையெல்லாம் ஏதாவது ஒரு காலில் தான் ஏற்படும். சிலருக்கு, இரண்டு காலிலும் ஏற்படலாம்.

* முதுகு எலும்பு முடியும் இடத்திலும், கால்களின் பின்புறத்திலும் குத்துவது போன்ற உணர்வு இருக்கும்.

சிகிச்சைகள்…

பல காரணங்களால் இந்தப் பிரச்னை ஏற்படும் என்பதால், எம்.ஆர்.ஐ மற்றும் எக்ஸ்-ரே பரிசோதனை செய்வார்கள். அப்போது தான் உடலில் என்ன பிரச்னையால் இது ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறியலாம். பெரும்பாலும் ஃபிஸியோதெரபிதான் இதற்கான சிகிச்சையாகப் பரிந்துரைக்கப்படுகிறது. தீர்க்க முடியாத, குணப்படுத்த முடியாத பிரச்னையாக இது உருவெடுக்காது. உணவு, வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள் செய்வது, கைவைத்தியம் சில நேரங்களில் கைகொடுக்கும். உதாரணமாக, ஒத்தடம் தருவது; தேவையான அளவுக்கு ஓய்வு எடுப்பது; தினமும் உடற்பயிற்சி செய்வது முதலியவை இந்தப் பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்க உதவலாம். ஆனாலும், வலி குறைய வேண்டும் என்பதற்காக வெந்நீர் ஊற்றுவது, அதிகச் சூட்டில் ஒத்தடம் கொடுப்பது போன்ற சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்கக் கூடாது. வெகுநேரம் நின்றுக் கொண்டே வேலை செய்பவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கும். அவர்கள் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்திக்கொண்டால், இந்தப் பிரச்னையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நிவாரணம் பெறலாம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme