கிராமமொன்றில் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்குக் கல்வி கொடுக்க நினைக்கிறார் ஒருவர்.அது அவ்வூரில் இருக்கும் உயர்சாதியினருக்குப் பிடிக்கவில்லை.பல்வேறு இடையூறுகள் கொடுக்கிறார்கள்.தலைமுறைகள் தாண்டியும் தொடரும் இச்சிக்கல் மூன்றாம் தலைமுறையில் முடிவுக்கு வருகிறது.அது எப்படி? என்பதைச் சொல்லியிருப்பதுதான் சார் திரைப்படம்.
நாயகனாக நடித்திருக்கும் விமல்,துறு துறு இளைஞராகத் தொடங்கி பொறுப்பான ஆசிரியராக மாறும் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்.எல்லா நிலைகளிலும் பொருத்தமாக நடித்து தன்னை நிருபித்திருக்கிறார்.இறுதிக்காட்சியில் அவர் எடுக்கும் விஸ்வரூபம் அவருடைய நாயக பிம்பத்தைப் பன்மடங்கு உயர்த்தும் விதமாக அமைந்திருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் சாயாதேவியை படத்துக்கும் பாடல்களுக்கும் ஒரு நாயகி தேவை என்பதற்காக வைத்திருக்கிறார்கள் என்று எண்ணும் நேரத்தில் கதைக்குள்ளும் அவரைக் கொண்டுவந்துவிட்டார்கள்.அவரும் இயல்பாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
கறுப்புச்சட்டையோடு பள்ளி ஆசிரியராக வரும் சரவணன் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக்கத் துடிக்கிறார்.அவர் பேசும் வசனங்கள், நடத்தும் பாடங்கள்,மனநிலை தவறியவராக நடிக்கும் நடிப்பு ஆகியனவற்றில் சிறந்து நிற்கிறார்.
வ.ஐ.ச.ஜெயபாலன் மற்றும் தயாரிப்பாளர் சிராஜ் ஆகியோர் எதிர்மறை வேடமேற்றிருக்கிறார்கள்.முன்னவர் கண்களாலேயே உருட்டல் மிரட்டலை வெளிப்படுத்துகிறார்.எதிரியை அடுத்துக் கெடுக்கும் முயற்சியில் இறங்கும் சிராஜ் அதற்கேற்ற வகையில் நடித்து அந்தப் பாத்திரத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
ரமா,எலிசபெத்,சரவணசக்தி,கஜராஜ் உள்ளிட்ட பிற நடிகர்களும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
இனியன் ஒளிப்பதிவில் காட்சிகளில் தெளிவு,திரைக்கதைக்குப் பலம்.
சித்துகுமார் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம்.கதையின் கருத்துகளை பாடல்வரிகளிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.