19th Convocation of SRM IST held, Ashwini Vaishnaw
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் 19 வது பட்டமளிப்பு விழாவில் 7683 மாணவ, மாணவியருக்கு பட்டங்களை மத்திய ரயில்வே, தொலைதொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழங்கினார்.பட்டம் பெற்றுள்ள நீங்கள் உங்களின் கவனம் கூர்மையான சிந்தனை, தெளிவான பார்வை, விடாமுயற்சி கொண்டதாக இருக்க வேண்டும் என்று பட்டதாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் )19 வது பட்டமளிப்பு விழா இன்று காலை எஸ்ஆர்எம் வளாகத்தில் அமைந்துள்ள டி. பி. கணேசன் கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு
எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணைவேந்தர்கள் முனைவர் ரவி பச்சமுத்து (நிர்வாகம்), முனைவர் பி. சத்யநாராயணன் (கல்வி), ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் சி. முத்தமிழ்ச்செல்வன் வரவேற்று நிறுவனத்தின் ஆண்டறிக்கையை வாசித்தார்.
பட்டமளிப்பு விழாவிற்கு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவன வேந்தரும்,பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் தலைமை வகித்து பேசுகையில் :
எஸ்ஆர்எம் பல்கலைக்கு ஜனாதிபதி, துணைஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள் வருகைதந்து மாணவர்களிடயே உரையாற்றி சென்றுள்ளனர். நமது பிரதமர் ஒவ்வொரு பகுதிக்கும் முக்கியத்தும் அளிக்கும் வகையிலும், திறமையின் அடிப்படையிலும் அமைச்சர்களை நியமித்துள்ளார்.நமது பிரதமர் தலைமையில் ஜி 20 மாநாடு நடக்கிறது. இது நமது நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவமாகும். உலகில் பொருளாதாரத்தில் நமது நாடு 5வது இடத்தில் உள்ளது பெருமைக்குறியது, இதற்கு மத்திய அரசில் உள்ள அமைச்சர்களின் சாதனையே ஆகும்.
எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் நாட்டில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், சட்ட கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளை கொண்ட நிறுவனமாக உள்ளதுடன் இங்கிருந்து பட்டம் பெற்று சென்றவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். உலக தரத்துடன் கல்வி வழங்குவது மட்டுமின்றி வேலை வாய்ப்பு பெற்று தருவதிலும் முன்னணியில் உள்ளது, கடந்தாண்டு இங்கு பயின்ற 12 ஆயிரம் மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஆண்டுக்கு ₹1கோடி அளவிற்கு ஊதியமும் பெறுகின்றனர்.
இந்த விழாவில் ரயில்வே அமைச்சர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உள்ளார்.நான் எம். பி.யாக உள்ள பெரம்பலூர் தொகுதி மிகவும் பின்தங்கிய தொகுதியாகும், இந்ததொகுதியில் ரயில்வே திட்டம் கொண்டுவரவேண்டும் என்று அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.
பட்டம் பெற்று செல்லும் நீங்கள் உங்கள் பெற்றோரை கவனித்து கொள்ளவேண்டும்.சமுதாய வளர்ச்சிக்கும், புத் தொழில் தொடங்கி நாட்டின் வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பு இருக்கவேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே, தொலைதொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 143 மாணவர்களுக்கு பி.எச்டி பட்டங்கள் உட்பட 7683 பேருக்கு பட்டங்கள் வழங்கியும்,தேர்வில் சிறப்பிடம் பெற்ற 103 மாணவ, மாணவியற்கு பதக்கங்கள் வழங்கியும் பட்டமளிப்பு உரை நிகழ்த்துகையில் :
நான் மூன்று கல்லூரிகளில் படித்துள்ளேன் அங்கு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது,முதன் முதலாக இங்கு மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.பட்டம் பெற்று செல்லும் உங்களுக்கு உலகில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன அதோடு சவால்களும் உள்ளன. உங்களுடைய கவனம் கூர்மையான சிந்தனை, தெளிவான பார்வை, விடாமுயற்சி கொண்டதாக இருக்க வேண்டும் அது உங்களுக்கு வெற்றியை தேடித்தரும்.
நமது நாடு 10 ஆண்டுகளுக்கு முன்பை விட அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது, நாட்டில் கட்டமைப்பு வசதி, ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை, தொலைதொடர்பு துறை, துறைமுகம் உள்ளிட்ட துறைகள் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளன. ரயில்வே துறையில் வந்தே பாரத் என்ற துரித வேகம் கொண்ட ரெயில்கள் வந்துள்ளன இது நமது பிரதமரின் திட்டமாகும்.நெடுஞ்சாலை துறை எடுத்து கொண்டால் 6 வழி பாதை,8வழி பாதை, மேம்பாலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் எளிதாக மக்களை சென்றடையும் வகையில் அமைந்துள்ளன. நமது பிரதமர் புத்தொழிலுக்கு முக்கியத்துவம் அழித்துள்ளார், அதற்காக ஏராளமான நிதியும் ஒதுக்கியுள்ளார். அதன் காரணமாக புத்தொழில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது,10ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் 400 புத்தொழில் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன,ஆனால் இப்போது நாட்டில் சுமார் 1லட்சம் நிறுவனங்கள் உருவாகி உள்ளது.
அதேபோன்று நாட்டில் தொலைதொடர்பு துறை மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது,தற்போது தொலை தொடர்பில் 5ஜி சேவை கொண்டுவரப்பட்டுள்ளது. நமது நாட்டில் கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் இந்த சேவை அமலுக்கு வந்தது நமக்கு முன்பாக அமெரிக்கா நாட்டில் கொண்டுவரப்பட்டது, அங்கு 1லட்சம் 5ஜி கதிர் வீச்சு சேவை மையங்கள் தான் உள்ளன. நமது நாட்டில் குறுகிய காலத்தில் 2.75 லட்சம் மையங்கள் உள்ளன.
எஸ்ஆர்எம் நிறுவனத்தில் மாணவர்கள், தொழில் நிறுவனங்களின் பயனுக்காக ஏராளமான ஆய்வகங்கள்,பெட்டகங்கள் அமைந்துள்ளன அதேபோன்று 5ஜி சேவை ஆராய்ச்சிக்கான ஆய்வகம் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளன.
மாணவர்கள் நல்ல உருவாக்குபவர்களாக மாறவேண்டும், உங்களின் சிந்திக்கும் திறன் முழுமையையும் பயன்படுத்தி புதியவைகள் உருவாக்கப்படவேண்டும். அதன் மூலம் புதிய தொழில்கள் வரவேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் சு.பொன்னுசாமி, மருத்துவம் மற்றும் உடல் ஆரோக்கியம் இணை துணைவேந்தர் லெப்டினெண்ட் கர்ணல் டாக்டர் ஏ. ரவிக்குமார், தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர் கே. குணசேகரன், டீன்கள் டாக்டர் ஏ. சுந்தரம், முனைவர் டி. வி. கோபால் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.