பேட்டைக்காளி வெப் சீரிஸ் விமர்சனம்
வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் பேட்டை காளி. இது ஒரு வெப் சீரிஸ் ராஜ்குமார் இந்த வெப் சீரிசை இயக்கியிருக்கிறார். மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார். கலையரசன், கிஷோர், வேலராமமூர்த்தி, ஷீலா உட்பட பல நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இந்த வெப் சீரிஸ் உருவாகி இருக்கிறது. இந்த வெப் சீரிஸ்க்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இந்த வெப் சீரிஸ் இரண்டு எபிசோடுகள் வெளியாகியிருக்கிறது.
தென் தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கையில் நடைபெறுவதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மறைந்திருந்து சமயம் பார்த்து சிலரை தாக்கிவிட்டு தப்பியோடும் கதாபாத்திரம்தான் நமக்கு கதையை அறிமுகப்படுத்துகிறது.பாண்டிய மன்னன் படையில் தங்களது முன்னோர்கள் படை வீரர்களாக இருந்ததாகவும், தொடர்ந்து அவர்கள் விவசாய கூலிகளாக மாற்றப்பட்டு, சொந்தமாக நிலம் இல்லாமல் வாழ்ந்துவந்ததாகவும் கூறப்படுகிறது. இதை முக்கியப்புள்ளியாக நாம் பார்க்க வேண்டும்.
விவசாய கூலிகள் பண்ணையாரை எதிர்த்ததால் உண்டான சாதிய கலரவம், அவர்களுக்கு வேலையிழப்பை உண்டாக்குகிறது. தொடர்ந்து அவர்கள் வேறு இடத்திற்கு செல்கிறார்கள். பின்பு தங்களை எப்படி மேம்படுத்திக்கொண்டார்கள் என்பதை கதை அதன் போக்கில் விளக்குகிறது.கிஷோர் மலைகாட்டில் வசிக்கும் அவர்களுக்கு காட்டு மாடுகளின் தலைவன் மாடு கிடைக்கிறது. அதை கட்டிப் போடும் போது, அதை தேடி வரும் மாட்டுக் கூட்டத்தை வைத்து தங்கள் தொழிலை தொடங்குகிறார்கள் விவசாய கூலிகள்.
முலையூரின் முக்கிய முடிவுகளை எடுக்கும் நபராக இருப்பவர்தான் முத்தையா(கிஷோர்). அவர்தான் மறைந்திருந்து தாக்கிவிட்டு ஓடி வரும் வழியில் தனது ஊரின் கதையை சொல்கிறார். தாமிரை குளத்தின் சேர்மனாக வரும் செல்வ சேகரப் பண்ணையார் ( வேல ராமமூர்த்தி). இவரது மாடுக்குதான் எல்லா போட்டிகளிலும் முதல் மரியாதை தரப்படுகிறது. மேலும் அடுத்தாக நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டில் இவரது மாட்டைப் பிடிக்ககூடாது என முலையூர்காரர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது,இதை மீறி முத்தையாவின் அண்ணன் மகனாக இருக்கும் பாண்டி (கலையரசன்) அந்த மாட்டை பிடித்துவிடுகிறார். இதனால் கோவமடையும் செல்வ சேகரப் பண்ணையார் (வேல ராமமூர்த்தி) அவனை பழி தீர்க்க வேண்டும் என்று நினைக்கிறார். இத்தோடு முதல் எபிசோட் முடிகிறது.
இங்கே ஜல்லிகட்டு அனைவருக்குமான விளையாட்டு என்ற ஒரு பொதுப்பார்வை இருக்கிறது. ஆனால் இது குறிப்பிட்ட சாதிகள் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியும் என்றும் ஒட்டுக்கப்பட்டவர்கள் தங்கள் சாதி மாடுகளை பிடிக்கக் கூடாது என்று கட்டளையிடும் வழக்கம் இருப்பதை மையமாக வைத்தும் இக்கதை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படத்தில் தாமிரை குளத்து மாடுகளை முலையூர்காரர்கள் பிடிக்கக் கூடாது என்று தண்டோரா போடப்படுகிறது. இந்த காட்சிகள் நமக்கு எதார்த்த களநிலவரத்தை எடுத்துக்காட்டுகிறது.

இரண்டாம் எபிசோடில் மனிப்பு கேட்க செல்லும் பாண்டி ( கலையரசன்) கொலை செய்யப்பட்டு காட்டில் கிடக்கிறார். இதைத் தொடர்ந்து என்ன நடக்கும் என்பதையும் அடுத்த எபிசோடில் இருந்துதான் பார்க்க முடியும். ஜல்லிகட்டை வெறும் தமிழரின் வீர விளையாட்டு என்று அணுகாமல், அதோடு பிணைந்திருக்கும் சாதிய அரசியலை இந்த சீரிஸ் கதையாக அணுகியிருக்கிறது. இது காலத்தின் தேவை என்றே நாம் பார்க்க வேண்டும்.
மேலும் இங்கே வீரம் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணத்திற்கு எதிராக இந்த சீரிஸ் கேள்வி எழுப்புகிறது. பெண்களை நடத்தும் விதம், அதிகாரம், சாதிப் பகை உருவாகும் காரணம் என்று சில முக்கிய புள்ளிகளை தொட்டிருக்கிறது.