Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!

Posted on August 28, 2026

Anthony’s Atelier நிறுவனம் சார்பில் எழுதி, இயக்கி, தயாரித்து, டி. ஆண்டனி, கதாநாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் “ஏன் என்னை ஏதோ செய்தாய்”.

மனதை வருடும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” படம் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, இப்படத்தின் கதைக்களம் மற்றும் தனித்துவமான தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்

கதாநாயகி மதுமிதா தாஸ் பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். இது என்னுடைய முதல் திரைப்படம். என்னுடைய அறிமுகப் படம் என்பதால் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். முதலில், இந்தக் கதாபாத்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து, அதை என்னால் செய்ய முடியும் என்று நம்பி இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநரும் தயாரிப்பாளருமான டி. ஆண்டனி சாருக்கு நன்றி. பொதுவாக அதிகம் பேசப்படாத ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து நடித்திருப்பது எனக்கு மிகவும் சவாலான மற்றும் சிறப்பான அனுபவமாக இருந்தது. டீசரில் அந்தக் கதாபாத்திரத்தின் பெங்காலி பின்னணியும், அதற்கான எஸ்சென்ஸும் அழகாக வெளிப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது.

சிறப்பான பாடல் வரிகளை வழங்கிய கார்த்திக் நேத்தா சாருக்கும், இசையமைப்பாளர்கள் அசோக் ஸ்ரீதரன் மற்றும் ஜெய்கார் ஹரிநாத் அவர்களுக்கும் நன்றி. ஜீவா ரவி சார், நவ்யா சுஜி, ஆலம் ஷா உள்ளிட்ட படக்குழுவினரின் ஆதரவும் எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. இந்தப் படத்திற்காக நிறைய உழைப்பையும், உணர்வுகளையும் கொடுத்திருக்கிறோம். படம் எப்படி ரசிகர்களிடம் சென்றடைகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்த ஜேனட்டுக்கும், எங்களை வாழ்த்த வந்த தனஞ்செயன் சாருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. நன்றி.”

இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் டி. ஆண்டனி பேசியதாவது..,

“அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். இந்தப் படத்தை உருவாக்கும் பயணத்தில் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னைக்கு வந்த புதிதில் சி.வி. குமார் சார் மூலம் ஹரிஷ், சந்தோஷ் ஆகியோர் அறிமுகமாகி, தயாரிப்பு பணிகளில் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள். தயாரிப்பு மேலாளர் விஜய் அண்ணாவும் படப்பிடிப்பு தொடக்கம் முதல் முடியும் வரை சிறப்பாக பணியாற்றினார்.

கதாநாயகி மதுமிதா இந்தப் படத்திற்காக 18 நாட்கள் வொர்க்ஷாப் செய்து, வேறு நகரம், வேறு மொழி என்றாலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். ஜீவா ரவி சார் எனக்கு தந்தை போன்ற ஆதரவை வழங்கினார். ஆலம் ஷா, நவ்யா, ராஜேந்திரன் சிங், மாதங்கி உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. கலை இயக்குநர் சுரேந்தரன் அண்ணா கதாபாத்திரங்களின் குணத்தை வெளிப்படுத்தும் வகையில் அறைகள் உள்ளிட்டவற்றை மிகச் சிறப்பாக வடிவமைத்தார். ஜெய்கார் ஹரிநாத் இசையமைப்பாளராக மட்டுமின்றி, லைவ் சவுண்ட் பணியிலும் மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். அசோக் ஸ்ரீதரன் இந்தப் படத்தின் இசைக்கு மிகச் சிறப்பான அடித்தளத்தை அமைத்ததுடன், கார்த்திக் நேத்தா உள்ளிட்ட பல திறமையான கலைஞர்களை இந்தப் படத்துடன் இணைக்க உதவினார்.

படத்திற்கான தலைப்பை நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்தபோது, ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ என்ற தலைப்பை கார்த்திக் நேத்தா சார் கொடுத்தார். முதல் வரியிலேயே அந்த மேஜிக் நடந்தது. பலரும் தலைப்பு மிகவும் கவித்துவமாக இருப்பதாக பாராட்டினர். அவருடைய வாழ்த்துகளும் தொடர்ந்து எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கின்றன. என்னுடைய இணை இயக்குநர் ஜேனட் ஆரம்பம் முதல் இன்று வரை எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்துள்ளார். படத்தொகுப்பிலும் என்னுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மார்க்கெட்டிங் பணிகளில் விவேக் அமிர்தலிங்கமும், சதீஷ் அண்ணாவும் எனக்கு மிகுந்த உதவி செய்தார்கள்.

குறிப்பாக தனஞ்செயன் சார் செய்த உதவியை மறக்க முடியாது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை படம் வெளியாகுமா என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை. விநியோகம் தொடர்பான பிரச்சனையை அவரிடம் சொன்னதும், உடனடியாக உதவி செய்து அதை சரி செய்தார். அவருடைய உதவி இல்லையென்றால் இந்த நிகழ்வே நடந்திருக்காது. சினிமா குறித்து அவர் பகிரும் வீடியோக்கள் மூலம் ஒரு புதுமுகமாக நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். இந்தப் பயணம் மிகவும் கடினமானதாகவும், பல விஷயங்களை கற்றுக்கொடுத்ததாகவும் இருந்தது. இன்று இந்தப் படத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப் பயணத்தில் எனக்கு துணையாக இருந்த என் குடும்பத்தினர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.”

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..,

“அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். சில வாரங்களுக்கு முன்பு ஆண்டனியின் படத்தின் போஸ்டரை பார்த்து, படத்தை பார்க்க வேண்டும் என்று அவரை தொடர்புகொண்டேன். உடனடியாக பிரிவியூ ஏற்பாடு செய்து படத்தை பார்க்க வைத்தார். குறுகிய காலத்தில் உருவாகியிருந்தாலும், ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ ஒரு அழகான, கவித்துவமான காதல் கதையாக உருவாகியுள்ளது.

ஆண்டனி, மதுமிதா தாஸ் இருவரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. ஆலம் ஷா, நவ்யா சுஜி, ஜீவா ரவி உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். கார்த்திக் நேத்தாவின் பாடல் வரிகள், அசோக் ஸ்ரீதரன் மற்றும் ஜெய்கார் ஹரிநாத்தின் இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. குறிப்பாக சிங்க் சவுண்டில், டப்பிங் இல்லாமல் படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. இவ்வளவு குறுகிய காலத்தில் தரமான படத்தை உருவாக்கியதற்கு சிறப்பான முன்தயாரிப்பே காரணம். சிறு படங்களுக்கு ஊடகங்களின் ஆதரவு மிகவும் அவசியம். பெரிய படங்களுக்கு மட்டுமல்லாமல், இதுபோன்ற சிறு படங்களுக்கும் ஊடக நண்பர்கள் ஆதரவு தர வேண்டும்.

தற்போது செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய படங்களின் படப்பிடிப்பு மற்றும் வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நாளை அனைத்து தயாரிப்பாளர்களுடனும் ஆலோசனை நடைபெறுகிறது. வெளியாகி 8 வாரங்கள் ஆன படத்தை ஓடிடி வாங்குவதில்லை, அது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசும் பிரச்சனையை கவனத்தில் கொண்டு, அனைவரும் கலந்தாலோசித்து தொழில்துறையை பாதிக்காத வகையில் முடிவு எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. எனவே நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம். ஆண்டனி விரும்புவது போல இந்தப்படம் செப்டம்பர் 4ஆம் தேதி படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”

Anthony’s Atelier நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள இப்படம், காதல், தனிமை மற்றும் வாழ்க்கையின் வலி ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தாயை இழந்து சிறு வயதிலிருந்தே தனிமையில் வளர்ந்த இளைஞன் ஒருவன், மதுவுக்கு அடிமையாகி இருளான வாழ்க்கைக்குள் சிக்கித் தவிக்கிறான். அவனது வாழ்க்கையில் காதல் நுழைந்த பிறகு ஏற்படும் மாற்றங்களும், அந்தக் காதல் அவனை இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி எவ்வாறு அழைத்துச் செல்கிறது என்பதுமே படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது.

நடிகர் ஜீவா ரவி பேசியதாவது..,

“பத்திரிகை குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் என்னுடைய மாலை வணக்கம். நீங்கள் இல்லையென்றால் நாங்கள் இல்லை என்பதுதான் உண்மை. இந்தப் படத்திற்காக அனைவரும் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

யங் கிரியேட்டர், யங் ஹீரோ, யங் புரொடியூசராக இருக்கும் ஆண்டனியை உங்கள் சார்பாக வரவேற்கிறேன். அதேபோல், புதிய முகமாக அறிமுகமாகும் மதுமிதாவுக்கும் வாழ்த்துகள். நல்ல கிரியேட்டர்களும் தயாரிப்பாளர்களும் வரும்போது கலைஞர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான விஷயம். இந்தப் படத்தில் வழக்கமான அப்பா கதாபாத்திரத்தைவிட வித்தியாசமான, உணர்வுப்பூர்வமான அப்பாவாக நடித்திருக்கிறேன். அந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த ஆண்டனிக்கு நன்றி. கவிஞர் கார்த்திக் நேத்தாவின் பாடல் வரிகள் மிகவும் அழகாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இருக்கின்றன. இரண்டு இசையமைப்பாளர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் பியட்ரோ வில்லானி படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். ஆதம் நாசர், நவ்யா சுஜி உள்ளிட்ட திறமையான கலைஞர்கள் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்தப் படம் சரியான இடத்திற்கும், சரியான ரசிகர்களிடமும் சென்று சேரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என நம்புகிறேன். நன்றி.”

கலை இயக்குநர் கே.கே. சுரேந்தரன் பேசியதாவது..,

“அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். இந்தப் படத்தில் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறேன். இது எனக்கு நான்காவது படம். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஆண்டனி அவர்களுக்கு மிகுந்த நன்றி. ஒரு அழகான காதல் டிராமாவை மிகவும் கவித்துவமான முறையில் சிறப்பாக உருவாக்கியிருக்கிறோம். என்னுடன் பணியாற்றிய அனைத்து கலைத்துறை நண்பர்களுக்கும், இந்த வாய்ப்பை வழங்கிய சந்தோஷ், ஹரிஷ் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.”

நடிகர் ஆலம் ஷா பேசியதாவது..,

“இங்கு வந்திருக்கும் அனைத்து மீடியா மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் வணக்கம். நான் BOFTA Film Institute-ல் நடிப்பு பயிற்சி பெற்றவன். இந்தத் தொழிலை சரியான முறையில் கற்றுக்கொடுத்த என்னுடைய வழிகாட்டியும், ஆசிரியருமான தனஞ்செயன் சாருக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஆண்டனி அவர்களுக்கும், என்னுடன் நடித்த ஜீவா ரவி சார், நவ்யா சுஜி, கதாநாயகி உள்ளிட்ட படக்குழுவினருக்கும் நன்றி. இது மிகவும் ஆரோக்கியமான ஒரு குழுவாக இருந்தது. நான் இதற்கு முன்பு பல படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடித்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பொதுவாக படப்பிடிப்பு தளங்களில் இருக்கும் பரபரப்பு இங்கு இல்லை. முதலில் வசனங்களை கொடுத்து, நன்றாக ரிகர்சல் செய்த பிறகே டேக் சென்றோம். இயக்குநர் ஆண்டனி எங்களுக்கு தேவையான சுதந்திரத்தையும் கொடுத்தார். ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நாங்கள் இம்ப்ரோவைஸ் செய்ய, அதிலிருந்து அவரும் தனது பங்களிப்பைச் சேர்த்தார். அதனால் திரையில் எங்களுடைய கெமிஸ்ட்ரி மிகவும் இயல்பாகவும் சிறப்பாகவும் வந்திருக்கிறது. மேலும், படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அன்றைய நாளுக்கான சம்பளம் உடனடியாக எங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதுபோன்ற விஷயங்களை மிகவும் பாராட்ட வேண்டும். அதற்காக தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி. செப்டம்பர் 4ஆம் தேதி அனைவரும் திரையரங்கிற்கு வந்து இந்தப் படத்தைப் பாருங்கள். இது ஒரு நல்ல ஃபீல்-குட் படமாக இருக்கும். நன்றி.”

நடிகை நவ்யா சுஜி பேசியதாவது..,

“வந்திருக்கிற அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். மேடையில் பேசுவது இதுதான் முதல் முறை என்பதால் கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஆண்டனி சாருக்கு நன்றி. நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் நடிக்கும் படம் இது. இதில் ரேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். 18 நாட்களில் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள். வலுவான முன்தயாரிப்புடன் மிகவும் தொழில்முறையாக பணியாற்றிய இந்தப் புதிய குழுவுடன் வேலை செய்தது நல்ல அனுபவமாக இருந்தது.

காதல் கதை என்றாலும், அதை சொல்லியிருக்கும் விதம் வித்தியாசமாக இருக்கும். குறிப்பாக ஒளிப்பதிவு படத்தின் முக்கியமான சிறப்பம்சமாக இருக்கும். ஒரு பெண் எஸ்கார்ட்டுக்கும், மதுவுக்கு அடிமையான ஒருவருக்கும் இடையிலான வித்தியாசமான காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. செப்டம்பர் 4ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும். புதிய குழுவினருக்கு உங்கள் ஆதரவு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும். நன்றி.”

இசையமைப்பாளர் ஜெய்கார் ஹரிநாத்

“அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறேன். ஆரம்பத்தில் ஒரு பாடலுக்காகத்தான் இயக்குநர் ஆண்டனி சாருடன் பயணம் தொடங்கியது. ஆனால், பாடல் பாடலாக அடுத்தடுத்து உருவாகி, ரீரெக்கார்டிங் வரை இந்தப் பயணம் தொடர்ந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கு நன்றி.

ஸ்கிரிப்டிங் முதல் மிக்சிங் வரை படத்தின் உருவாக்கத்தை நேரடியாக பார்த்திருக்கிறேன். படப்பிடிப்பு தளமே மிகவும் அமைதியாகவும், சர்வதேச தரத்தில் மிகவும் தொழில்முறையாகவும் இருந்தது. அந்த சூழலில் உருவான இந்த ரொமான்டிக் டிராமா மிகவும் அழகாக வந்திருக்கிறது. இந்தப் படத்தின் முக்கியமான சிறப்பம்சம் முழுவதும் லைவ் சவுண்டில் உருவாகியிருப்பது. இதனால் பார்வையாளர்களுக்கு கதாபாத்திரங்களுடன் இன்னும் நெருக்கமான, அற்புதமான அனுபவம் கிடைக்கும். என்னுடைய முதல் பாடலுக்கு கார்த்திக் நேத்தா போன்ற ஒரு சிறந்த பாடலாசிரியர் வரிகள் எழுதுவார் என்று எதிர்பார்க்கவில்லை. நாங்கள் வெஸ்டர்ன் பாணியில் திட்டமிட்டிருந்த பாடலை, அவரது அழகான தமிழ் வரிகளால் வேறு ஒரு உயரத்திற்கு கொண்டு சென்றுவிட்டார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. மற்றொரு இசையமைப்பாளரும் இந்தப் படத்தில் மூன்று பாடல்களை உருவாக்கியிருக்கிறார். எங்களுக்குள் எந்த போட்டியும் இல்லை; வெவ்வேறு சூழல்களுக்கு ஏற்ற வகையில் இருவருடைய இசையும் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்தப் படம் ஒரு சிறந்த இசை அனுபவமாக இருக்கும். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஆண்டனி, அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.”

இசையமைப்பாளர் அசோக் ஸ்ரீதரன் பேசியதாவது..,

“இயக்குநர் ஆண்டனி சார் கதையை மிகவும் ஆர்வத்துடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் என்னிடம் விவரித்தார். முதலில் நான் பின்னணி இசைக்காகத்தான் அழைக்கப்பட்டிருக்கிறேன் என்று நினைத்தேன். ஆனால், கதையை கேட்ட பிறகுதான் ஒரு முக்கியமான பாடலை உருவாக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தது தெரிந்தது.

அப்படித்தான் ‘உருகாதே உயிரே’ பாடல் உருவானது. இந்தப் பாடல் தீவிரமான உணர்வுடன் இருக்க வேண்டும் என்பதால் பெரிய இசைக்கோவை, குறிப்பாக ஸ்ட்ரிங்ஸ் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தோம். பாடலுக்கு மேலும் வலு சேர்க்க சிறந்த பாடலாசிரியர் தேவைப்பட்டதால் கார்த்திக் நேத்தா சாரை நான் பரிந்துரைத்தேன். சென்னை ஸ்ட்ரிங்ஸ் ஆர்கெஸ்ட்ராவை வைத்து பாடலை பதிவு செய்தது இன்னும் அழகை கூட்டியது. ‘உருகாதே உயிரே’ பாடலுக்கு இரண்டு வெர்ஷன்கள் உள்ளன. தற்போது கேட்பது ஆண் குரல் வெர்ஷன். படத்தின் முக்கியமான கட்டத்தில் பெண் கதாபாத்திரத்தின் பார்வையில் மற்றொரு வெர்ஷன் இடம்பெறும். ஒரே மெட்டில், வேறுபட்ட உணர்வுகளுடன் இந்தப் பாடலை உருவாக்கியிருப்பது இயக்குநரின் அழகான யோசனை.

அதேபோல் ‘ஒரு கண்ணில் தூரம்’ பாடலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்களுக்கிடையே எந்தப் போட்டியும் இல்லை. வெவ்வேறு சூழல்களுக்கு ஏற்ற இசையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பணியாற்றினோம். இன்றைய சூழலில் மெலடி பாடல்களுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த ரசிகர்களுக்கான நல்ல இசை அனுபவத்தை இந்தப் படம் வழங்கும் என்று நம்புகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். நன்றி.”

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். இயக்குநரும் கதாநாயகனுமான டி. ஆண்டனிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். மதுமிதா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள். இந்தப் படத்திற்கான பாடல்களை எழுதும்போது, இயக்குநர் ஆண்டனி கதையை விவரித்த விதம் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. குறிப்பாக, ஒரு தனிமனிதன் போதையை நோக்கி செல்வதற்கான உளவியல் காரணங்களை இப்படம் மிகவும் தெளிவாக பேசுகிறது என்று நினைக்கிறேன்.

இந்தப் படத்தில் மதுவை ஒரு போதையாக மட்டுமே பார்க்காமல், நம்முடைய வாழ்க்கையில் நம்மை மயக்கத்திற்குள் தள்ளும் பல்வேறு விஷயங்களைப் பற்றியும் பேசுகிறது. இன்றைய வாழ்க்கையில் சமூக வலைதளங்கள் தொடங்கி பல விஷயங்கள் நம்மை அறியாமலேயே ஒரு விதமான போதைக்குள் வைத்திருக்கின்றன. இந்தப் படத்தில் ‘கார்த்திக்’ என்ற கதாபாத்திரத்துக்கு ‘மது’ என்ற கதாபாத்திரம் தெளிவைக் கொடுப்பது எனக்கு மிகவும் கவித்துவமான விஷயமாக இருந்தது. அந்த உணர்வுதான் பாடல்களிலும் பிரதிபலித்திருக்கிறது. குறிப்பாக ‘உருகாதே உயிரே’ பாடல் எனக்கு மிகவும் நெருக்கமானது. இசையமைப்பாளர்கள் இருவரும் பாடல்களை மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள்.

அன்றாட வாழ்க்கையில் இருக்கும் உளவியல் சிக்கல்கள் குறித்து இன்னும் நிறைய திரைப்படங்கள் வர வேண்டும். அந்த வகையில், ஆண்டனி ஒரு முக்கியமான விஷயத்தை அழகான கதை சொல்லல் மூலம் இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறார். ஒரு கலைஞனாகவும், சினிமா ரசிகனாகவும், தனிமனிதனாகவும் இந்தப் படம் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறேன். அனைவரும் இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்க வேண்டும். படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.”

பழைய காதல் கதைகளின் உணர்வுப்பூர்வமான அழகை தக்கவைத்துக் கொண்டு, இன்றைய ஜென்-ஜி மற்றும் மில்லேனியல் ரசிகர்களை கவரும் வகையில் நவீன திரைக்கதையுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் டி. ஆண்டனி, மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், ஆலம் ஷா, நவ்யா சுஜி, மாதங்கி சதீஷ், ரியா மனோஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டி. ஆண்டனி கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் படத்தொகுப்பை கவனித்துள்ளார். பியட்ரோ வில்லானி ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களுக்கு ஜெய்கார் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் இசையமைத்துள்ளனர். ஜோயி ரிடா பின்னணி இசையமைத்துள்ளார். கார்த்திக் நேத்தா மற்றும் தமிழ்மணி பாடல்களை எழுதியுள்ளனர்.

ஒலிப்பதிவு பணிகளை ஜெய்கார் ஹரிநாத் மேற்கொள்ள, சவுண்ட் மிக்சிங்கை ஆனந்த் ராமச்சந்திரன் கவனித்துள்ளார். கலை இயக்கத்தை கே.கே. சுரேந்தரன் மேற்கொண்டுள்ளார். நிர்வாகத் தயாரிப்பாளர்களாக ஹரிஹரன் மற்றும் சந்தோஷ் பணியாற்றியுள்ளனர்.

வரும் செப்டம்பர் 4ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  • ஒன்ஸ் மோர் திரை விமர்சனம்
  • அட்டாக்கர்’ (Attacker) படத்தில் அதிரடியான கதாபாத்திரத்தில் வருண்.
  • VARUN IN A POWER-PACKED ROLE IN ATTACKER
  • Tigerians Roar’ Sets the Screen Ablaze: Hridhu Haroon’s Electrifying Presence Wins Massive Response!
  • டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘டைகரியன் ரோர்’ பாடலில் ஹிருது ஹரூனின் எனர்ஜியும் கண்கவர் நடனமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme