
கருப்பு வெள்ளை, மோனோ, ஸ்டீரியோ, சினிமாஸ்கோப், அவிட், டிஜிட்டல் என காலம்தோறும் பல தொழில்நுட்ப மாற்றங்களின் வழியாக வளர்ந்தது சினிமா. அதன் அத்தனை மாற்றங்களிலும் பெரும்பங்களிப்பாற்றிய ஆளுமை, பிரசாத் ஃபிலிம் லேப்பின் தொழில்நுட்பத் தலைவரான எஸ். சிவராமன் மறைந்து விட்டார்.
பிராசஸிங் மற்றும் கலர் கரெக்ஷன், ஒலித் தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்தவர். சினிமா சார்ந்த பல தொழில்நுட்பங்கள் இந்தியாவில் நடைமுறைக்கு வர காரணமானவர்.
ஃபிலிம் சுருளில் இருந்து திரைப்படங்கள் டிஜிட்டலுக்கு மாறியபோது சக கலைஞர்களுக்குத் தேவையான பயிற்சிகளை அளித்தார். பல முன்னணி ஒளிப்பதிவாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் தொழில்நுட்ப வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அந்த வகையில் தன் வாழ்நாளில் ஒவ்வோர் ஆண்டும் தோராயமாக 500 படங்களையேனும் ஒலியே இல்லாமல் பார்த்திருப்பார். அது அத்தனை சுலபமான வேலை அல்ல.
தென்னிந்திய சினிமா தனது தூண்களுள் ஒன்றை இழந்திருக்கிறது. சாதாரணத் தூண் அல்ல. கல் தூண். மிகப்பெரிய இழப்பையும் வெற்றிடத்தையும் உணர்கிறேன்.