ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஸ்ரீகாந்த், தனது மனைவி பூஜா ஜாவேரியுடன் வாழ்ந்து வருகிறார். திடீரென்று சில அமானுஷ்ய சம்பவங்களால் நிம்மதி இல்லாமல் தவிக்கும் ஸ்ரீகாந்தின், மாற்றத்தைக் கண்டு கோபமடையும் பூஜா ஜாவேரி அவரை விட்டு பிரிந்து செல்கிறார். தனக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்காக, அறிவியல் பூர்வமாக அமானுஷ்ய சக்திகளை கட்டுப்படுத்தும் நிபுணரான ஆசிஷ் வித்தியார்த்தியிடம் ஸ்ரீகாந்த் உதவி கேட்கிறார். அப்போது அவருக்கு நடந்தது பற்றி ஆசிஷ் வித்தியார்த்தி விசாரிக்கும் போது, தனக்கு நடப்பவை அனைத்தும் தனது முதல் மனைவிக்கு நடந்திருக்கிறது, என்று ஸ்ரீகாந்த் சொல்கிறார். அவரது முதல் மனைவி யார்? அவருக்கும், தற்போது ஸ்ரீகாந்த் எதிர்கொள்ளும் பிரச்சனைக்கும் என்ன தொடர்பு? என்பதை சொல்வது தான் ‘எக்கோ’ படத்தின் மீதிக்கதை.
நம்மிலிருந்து புறப்படும் ஒலிகள் சில நேரம் சென்று தேங்கவோ, பதுங்கவோ, கரைந்து போகவோ வழியின்றி வெற்றிடத்தில் பட்டு மீண்டும் நம்மிடமே திரும்பி வரும். அந்த எதிரொலியை ஆங்கிலத்தில் எக்கோ என்கிறோம். முதல் வாக்கியத்தில் இருக்கும் ஒலிகள் என்கின்ற வார்த்தையை எடுத்துவிட்டு வினைகள் என்று வார்த்தையை நிரப்பி அதே வாக்கியத்தை மீண்டும் ஒரு முறை படித்தால் அது தான் இந்த எக்கோ படத்தின் ஒன்லைன்.
புதுமணத் தம்பதியாக தங்கள் மணவாழ்க்கையைத் துவங்கவிருக்கும் ஸ்ரீகாந்த், பூஜா ஜாவேரி இணைக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. ஸ்ரீகாந்திற்கு விசித்திரமான சத்தங்கள் காதைக் கிழிப்பது போல் கேட்கத் துவங்குகிறது. அது போல் துணி தொங்கும் இடத்தில் நகக்கீறல்கள், கால் பாதத்தில் படிந்து அடுத்த நொடி காணாமல் போன இரத்தம், திரைச்சீலை அவரின் கழுத்தை நெரித்துக் கொல்ல முயல்வது போன்ற பல அசம்பாவிதங்கள் நடக்க, அவரின் வேலைத் திறன் பாதிக்கப்படுகிறது. தன் மாமனாரின் நிறுவனத்தில் இருந்து தூக்கி எறியப்படுகிறார்.
இதே பிரச்சனையால் கணவன், மனைவி இடையே மனமுறிவு ஏற்படுகிறது. இதிலிருந்து மீள்வதற்கு ஸ்ரீகாந்த் ப்ளாக் மேஜிக் நிபுணரான ஆஷிஷ் வித்யார்த்தியைச் சந்திக்கிறார். அதைத் தொடர்ந்து நிகழ்ந்தது என்ன, ஏன் அந்த அமானுஷ்யம் ஸ்ரீகாந்த் கண்ணிற்கு மட்டும் தெரிகிறது, அதை ஏன் தன் மனைவி மற்றும் மாமனாரிடம் சொல்லாமல் ஸ்ரீகாந்த் மறைக்கிறார், அந்த அமானுஷ்யத்திற்கும் அவருக்கும் என்ன தொடர்பு, அதிலிருந்து அவர் தப்பிப் பிழைத்து வந்தாரா போன்ற கேள்விகளுக்கு விடை சொல்லுகிறது எக்கோ திரைப்படத்தின் திரைக்கதை.
பேய்களையே காட்டாமல் வெறும் விசித்திரமான சத்தங்கள் அமானுஷ்ய உருவங்கள், டிவியில் தானாக ஓடும் பேய்த் திரைப்படங்கள், இவற்றை மட்டும் வைத்துக் கொண்டே பேய்ப் படத்திற்கான திகிலைக் கொண்டு வர முயற்சி செய்திருப்பது வரவேற்கத்தக்க வித்தியாசமான முயற்சி தான்.
ஸ்ரீகாந்தின் அம்மா கதாபாத்திரத்தில் வரும் ராஜா ராணி சிவகாமியான பிரவீனாவிற்கு, ஊரை நினைத்தும், மகனை நினைத்தும், துயர் கொள்ளும் கதாபாத்திரம். அவரின் திருமணத்தால் தான் ஊரில் இவ்வளவு பிரச்சனைகள் நடந்தது, கோயில் பாழடைந்து போனது என்று ஒன்றுக்கு இரண்டு முறை சொல்கிறார்கள். ஆனால் அந்தப் பின்கதை படத்தில் மருந்துக்குக் கூட சொல்லப்படவே இல்லை. அந்த ஊராரின் பழிச் சொல்லை மறக்கச் செய்யவே வித்யா பிரதீப்பிற்கும் ஸ்ரீகாந்திற்கும் திருமணம் நடக்கிறது . சிறந்த நடிகர்களான டெல்லி கணேஷ், காளி வெங்கட் போன்றோர் ஒரு சில காட்சிகளில் மட்டும் தலைகாட்டிவிட்டு போகின்றனர்.
நரேன் பாலகுமாரின் இசையும் சிறப்பு சத்தமும் சேர்ந்து படத்துக்கு வலு சேர்க்கிறது
