Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
தமிழக அரசின் முத்திரை தீர்வு உயர்வு வீடு வாங்குபவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்

தமிழக அரசின் முத்திரை தீர்வு உயர்வு வீடு வாங்குபவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் கிரெடாய் சென்னை தலைவர் சிவகுருநாதன்

Posted on July 19, 2023

சொத்து பதிவு கட்டண உயர்வு சாமானியர்களை வெகுவாக பாதிப்பதோடு,
சொத்து வாங்கும் ஆர்வத்தையும் குறைக்கும்: கிரெடாய் சென்னை தலைவர் சிவகுருநாதன்

சென்னை, ஜூலை 18– 2023:சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த முத்திரை தீர்வு, சொத்து பதிவு கட்டண உயர்வு ஆகியவை சாமானிய மக்களின் வீடு வாங்கும் எண்ணத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதோடு, அவர்களுக்கு கூடுதல் சுமையையும் ஏற்படுத்தி உள்ளது என்று கிரெடாய் சென்னை மண்டலத் தலைவர் சிவகுருநாதன் தெரிவித்தார்.கடந்த 8–ந்தேதி மாநில அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி சொத்தின் சந்தை மதிப்புக்கு ஏற்ப முத்திரைத் தீர்வை நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தில் இருந்து 1 சதவீதம் உயர்த்தியும், கட்டுமான ஒப்பந்தங்கள் மீதான பதிவு கட்டணத்தை 1 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாகவும் உயர்த்தியும் அதை உடனடியாக 10–ந்தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்தது.

இது குறித்து கிரெடாய் சென்னை மண்டலத் தலைவர் சிவகுருநாதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது கூறுகையில், இந்த உயர்வு என்பது ‘‘அனைவருக்கும் வீடு’’ என்ற மாநில அரசின் தொலைநோக்கு பார்வையை பாதிக்கும். இந்த திடீர் கட்டண உயர்வு வீடு வாங்குபவர்களுக்கு கணிசமான நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிகரித்த பதிவுக் கட்டணங்களுக்கு உடனடி ஆதரவை முன்னணி வங்கிகள் வழங்க தயாராக இல்லாத காரணத்தால், அதற்கான கூடுதல் தொகையை வீடு வாங்குபவர்கள் தங்கள் சொந்த பணத்தில் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால், சொத்துப் பதிவுகள் தாமதமாவதோடு, கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டி குடியேறத் தயாராக உள்ள குடியிருப்பு திட்டங்கள் ஆகிய இரண்டிலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை மாநிலத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறை 2030-ல் 1 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்றும், 2025-ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதம் பங்களிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
முத்திரைத் தீர்வு மற்றும் பதிவு கட்டண உயர்வு குறித்து நல்ல முடிவை மாநில அரசு எடுக்க வேண்டும் என்றும், இந்த பிரச்சினையை தமிழக அரசிடம் விளக்கிக் கூறவும் 6 சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளன.

இந்த பிரச்சினைகளை ஊடகங்கள், பத்திரிகைகளுக்கு கொண்டு செல்வதன் மூலம் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிடுவதும் எங்கள் நோக்கம் ஆகும். இதுபோன்ற முடிவுகளை அரசு நடைமுறைப்படுத்துவதற்கு முன் ஒரு முழுமையான அணுகுமுறை மற்றும் பொதுமக்களின் கருத்தை கேட்டிருக்க வேண்டும். மேலும் இந்த சூழலில் வீடு வாங்குவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வு காணவும், தமிழ்நாட்டில் உள்ள சாமானிய மக்கள் வீடு வாங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மாநில அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். இது குறித்து நாங்கள் தமிழக அரசிடம் முறையிட்டுள்ளோம். இது தொடர்பாக அரசு நல்லதொரு நடவடிக்கைகளை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

அரசிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்:–

•முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணங்கள் மீதான தற்போதைய உத்தரவை மறுபரிசீலனை செய்தல்.
•ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் எழுப்பும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு தற்போதைய கட்டணக் கட்டமைப்பை முழுமையாக மதிப்பாய்வு செய்தல்.
•தற்போதைய சந்தை நிலைமைகள் மற்றும் நியாயமான மதிப்பீடு ஆகியவற்றுடன் கட்டண சீரமைப்பை உறுதி செய்தல்.
•வீடு வாங்குபவர்களின் நிதிச் சுமையைத் குறைக்கும் வகையில் பதிவு கட்டணங்களை குறைத்தல்.
•சாதாரண மக்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை வழங்குவதன் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளை மறுவடிவமைக்க வசதிகளை செய்து தருதல்.
•புதிய வீடு வாங்குபவர்களை சொத்துக்களில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதன் மூலம் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளித்தல்.
•பொருளாதார வளர்ச்சிக்கு ரியல் எஸ்டேட் துறை முக்கிய பங்கு வகிக்கும் விதமாக அதற்கான உகந்த சூழலை உருவாக்கித் தருதல்.
என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து திரு எஸ் ஸ்ரீதரன், துணைத் தலைவர், கிரெடாய் தேசிய – தென் மண்டலம் கூறுகையில், தற்போதைய சந்தை நிலைமை மற்றும் நியாயமான மதிப்பீட்டிற்கு ஏற்ப கட்டண உயர்வை மறுசீலனை செய்வது அவசியம் ஆகும். கட்டணங்களை குறைப்பதன் மூலம், அது வீடு வாங்குபவர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும், மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் மற்றும் புதிய வீடு வாங்குபவர்களை சொத்துக்களில் முதலீடு செய்யவும் வழிவகை செய்யும். இதன் காரணமாக ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி அடைவதோடு, நமது பொருளாதாரத்திலும் நல்ல முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த பதிவு கட்டண உயர்வு காரணமாக, முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதோடு, இது அவர்களின் வாங்கும் திறன் மற்றும் சொந்த வீடு பற்றிய அவர்களின் கனவையும் பாதிக்கும். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை வாங்கும்போது, அவர் தற்போது கூடுதலாக 1 லட்ச ரூபாய் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. இது அவர்களின் வீடு வாங்கும் எண்ணத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

இந்த பதிவு கட்டண உயர்வு குறித்து இந்திய கட்டுமான சங்கத்தின் தலைவர் ஏ.என். பாலாஜி கூறுகையில், இந்த கட்டண உயர்வு காரணமாக ஏராளமான வீடுகளைக் கொண்டு மறுசீரமைப்பு செய்யப்படும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இதன் காரணமாக பவர் ஆப் அட்டர்னி அதிகாரம் வழங்கும் செலவும் கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் இது வீடு வாங்குபவர்களுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இதன் காரணமாக நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

இது குறித்து சென்னை தெற்கு கட்டுமானச் சங்கத் தலைவர் மோகன் கூறுகையில், குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு அசையாச் சொத்தை விற்பது தொடர்பான பவர் ஆப் அட்டர்னிக்கான கட்டணங்கள் கணிசமான உயர்ந்துள்ளது. இது தற்போது பரிவர்த்தனையின் சந்தை மதிப்பில் 1% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு என்பது சாமானிய மக்களுக்கு பெரியதொரு சுமையை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

சிங்காரச் சென்னை கட்டுமானச் சங்கத்தின் தலைவர் ஹனிபா கூறுகையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள், கோவிட்-19 பாதிப்பு மற்றும் வழிகாட்டி மதிப்பு உயர்வு போன்றவற்றின் காரணமாக ரியல் எஸ்டேட் துறை ஏற்கனவே பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது தமிழக அரசின் இந்த கட்டண உயர்வானது தற்போதுள்ள சிரமங்களை மேலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சொத்துக்களை வாங்குவோர் எண்ணிக்கை வெகுவாக குறைவதோடு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியிலும் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அம்பத்தூர் மற்றும் ஆவடி பிளாட் புரொமோட்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் திருமலை, சென்னை பிளாட் புரொமோட்டர்ஸ் அசோசியேஷன் வடக்கு மண்டலத் தலைவர் கிரிஸ்டின்பால் மற்றும் தெற்கு மண்டலத் தலைவர் ராபர்ட் லிவிங்ஸ்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.

  • டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில்திரு கிளாடி ஜெராடு அவர்கள் தயாரிப்பில், “உறவுகள்” என்ற தலைப்பில் “உயிரிணையே” இசைஆல்பம் வெளியீட்டு விழா
  • தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி….தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
  • திரைத்துறையினர் ஒன்று கூடிய பிரம்மாண்ட விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் பெயரில் புதிய விருது அறிவிப்பு!
  • Film Fraternity Comes Together for Event Introducing New Honour in Honorable Tamil Nadu CM Vijay’s Name*The 18th Annual Edison Film Awards 2026
  • சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள “இரட்டையர்” ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது!!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme