Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • இயக்குநர் ஷங்கர் வழங்கும் வசந்த பாலனின் ‘அநீதி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

இயக்குநர் ஷங்கர் வழங்கும் வசந்த பாலனின் ‘அநீதி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

admin July 11, 2023
இயக்குநர் ஷங்கர் வழங்கும் வசந்த பாலனின் 'அநீதி' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

இயக்குநர் ஷங்கர் வழங்கும் வசந்த பாலனின் 'அநீதி' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பிற்கு ‘பிளட் அண்டு சாக்லேட்’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் ஜூலை 21 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ‘அநீதி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா கூறியதாவது…

“இயக்குநர் வசந்தபாலன் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நா. முத்துக்குமார் அவர்கள் வசந்தபாலன் பற்றி நிறைய சொல்லுவார். நா. முத்துக்குமாரின் நீட்சியாகத்தான் இந்த திரைப்படத்தில் நான் இரண்டு பாடல்களை எழுதி உள்ளேன். ஒன்று காதல் பாடலாகவும் மற்றொன்று நீதி, அநீதி பற்றி விவரிக்கும் பாடலாகவும் அமைந்துள்ளது. ஜி வி பிரகாஷ் மிகவும் பிரமாதமாக இசையமைத்துள்ளார்.”

இத்திரைப்படத்தின் வசனகர்த்தா ’இயக்குநர்’ எஸ்.கே.ஜீவா பேசியதாவது…

“‘புதுமைப்பித்தன்’ மற்றும் ‘லவ்லி’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள நான் ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் எழுத்தாளராக பணியாற்றினேன். இடைப்பட்ட காலத்தில் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டிருந்தேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுடைய ‘ஜெயில்’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தை இயக்குநர் வசந்த பாலன் எனக்கு வழங்கினார். ஒரு நாள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர், ‘அநீதி’ திரைப்படத்திற்கு வசனம் எழுதுமாறு கேட்டுக் கொண்டார். எனக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது, ஏனென்றால் வசந்த பாலன் அவர்களே மிகச் சிறந்த எழுத்தாளர். அது மட்டும் இல்லாது தமிழ் இலக்கிய உலகின் முன்னணி எழுத்தாளர்கள் அனைவருடனும் அவர் நெருங்கிய தொடர்பில் உள்ளார். அப்படி இருக்கும்போது என்னை நம்பி படத்தின் வசனப் பொறுப்பை அவர் ஒப்படைத்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இப்படத்தின் தயாரிப்பாளர்கள் குழுவினருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மனமுவந்து செய்து கொடுத்தார்கள். நடிகர்கள் முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அனைவரும் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார்கள். நடிகவேள் எம் ஆர் ராதா மற்றும் கலைஞர் ஆகியோருக்கு பிறகு தனித்துவமான குரலை அர்ஜுன் தாஸ் கொண்டிருக்கிறார். இந்த ‘அநீதி’ நீதிக்கானது. அனைவரும் ஆதரவளிக்குமாறு வேண்டுகிறேன், நன்றி.”

நடிகர் பரணி பேசியதாவது…

“இயக்குநர் வசந்த பாலனோடு பணியாற்ற வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் ஆசை இப்படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது. சமூக பொறுப்பு மிகவும் கொண்ட படைப்பாளி அவர். ‘அநீதி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டுமென்று நான் வணங்கும் முருகனிடம் மனமார வேண்டுகிறேன். நன்றி.”

நடிகர் அர்ஜுன் சிதம்பரம் பேசியதாவது…

“‘அநீதி’ திரைப்படத்தில் நடிப்பதற்காக என்னை வசந்த பாலன் அவர்கள் அழைத்த போது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்படத்திற்காக முடியை மிகவும் நீளமாக வளர்த்து வைத்திருந்தேன். பெருந்தன்மையுடன் அதே தோற்றத்தில் என்னை இப்படத்தில் நடிக்க அனுமதித்ததற்காக வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. ‘அநீதி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள்.”

ஒளிப்பதிவாளர் எட்வின் சகாய் பேசியதாவது…

“‘எந்திரன்’ திரைப்படத்தில் மேக்கிங் கேமராமேனாக எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு மிக்க நன்றி. ‘அநீதி’ திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற வசந்த பாலன் அவர்கள் என்னை அழைத்த போது கொஞ்சம் பதட்டமாக இருந்தது. ஆனால் முதல் சந்திப்பிலேயே அவர் மிகவும் நட்பாக பேசி திரைப்படம் குறித்து விவரித்தார். அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.”

எடிட்டர் ரவிக்குமார் பேசியதாவது…

“இந்த திரைப்படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்ததற்காக இயக்குநர் வசந்த பாலன் அவர்களுக்கு இதுவரை நான் நன்றி தெரிவிக்கவில்லை. இந்த மேடையில் அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சிறந்த படத்திற்கு நல்லதொரு டீம் தானாக அமைந்து விடும் என்பார்கள், அது ‘அநீதி’ திரைப்படத்திற்கு நடந்துள்ளது.”

நடிகை வனிதா விஜயகுமார் பேசியதாவது…

“இத்திரைப்படத்தின் மூலம் ஒரு இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரை உலகில் நான் மீண்டும் பிரவேசிக்கிறேன். இது ஒரு மிகவும் அருமையான திரைப்படம். இதில் அதி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் ஒன்றை எனக்கு அளித்த வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. திரைத்துறையின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருந்தும் வசந்த பாலனிடம் துளி அளவு கர்வம் கூட இல்லை. அத்தனை எளிமையாக அனைவரிடமும் பழகுகிறார். அர்ஜுன் தாசை தமிழ் திரை உலகின் ஷாருக்கான் என்று கூறலாம். மிகைப்படுத்துவதற்காக நான் இதை கூறவில்லை. ‘அநீதி’ படம் திரைக்கு வரும் போது நீங்கள் இதை உணர்வீர்கள். துஷரா விஜயன் மிகவும் திறமையான நடிகை. இப்படத்தில் பணியாற்றி உள்ள அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள். ‘அநீதி’ திரைப்படம் பெரிய வெற்றியை பெறும்.”

‘அநீதி’ திரைப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடும் எல்மா பிக்சர்ஸ் எத்தில் ராஜ் பேசியதாவது…

“இதுவரை விநியோகஸ்தராக இருந்த நான் ஒரு படத்தை தமிழகமெங்கும் வெளியிடுவது இதுவே முதல் முறை. இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த ‘அநீதி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நன்றி.”

தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் பேசியதாவது…

“இயக்குநர் வசந்த பாலன் மற்றும் அவரது நண்பர்களின் முதல் தயாரிப்பு ‘அநீதி’ திரைப்படம். தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக இது இருக்கும். இதில் எனக்கும் ஒரு கதாபாத்திரத்தை வழங்கியுள்ள வசந்த பாலன் அவர்களுக்கு நன்றி. அவரது எதிர்பார்ப்பை எவ்வாறு பூர்த்தி செய்யப் போகிறேன் என்று நினைத்தேன், ஆனால் எனது வேலையை அவர் மிகவும் சுலபமாக்கினார். ஒரு குடும்பம் போல ஒட்டுமொத்த குழுவினரையும் அவர் அழகாக வழிநடத்தி சென்றார். அர்ஜுன் தாஸ் மிகவும் திறமை வாய்ந்தவர், நடிப்பு மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இப்படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.”

அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எம். கிருஷ்ணகுமார் பேசியதாவது…

“வசந்த பாலன் உள்ளிட்ட இப்படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரை ஒன்றாக படித்தோம். பின்னர் வெவ்வேறு துறைகளுக்கு நாங்கள் சென்று விட்டோம். வசந்த பாலன் மட்டும் பள்ளி காலம் முதலே கலை மற்றும் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார். இப்படத்தின் மூலம் நாங்கள் இணைவது மிகுந்த மகிழ்ச்சி. இப்படத்தை நாங்கள் உற்சாகத்துடன் தயாரித்துள்ளோம், உங்கள் அனைவரது ஆதரவையும் வேண்டுகிறோம்.”

அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முருகன் ஞானவேல் பேசியதாவது…

“வசந்த பாலனும் நாங்களும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். அவர் வெற்றி பெற்றால் நான் மகிழ்ச்சி அடைவேன், அவரது படங்கள் தோல்வி அடைந்தால் நான் துவண்டு போவேன். அர்பன் பாய்ஸ் நிறுவனத்தை நண்பர்கள் நாங்கள் இணைந்து விளையாட்டாக ஆரம்பித்தோம். ஆனால் இன்று மிகவும் சிறந்த ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளோம் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு ரசிகனாக சொல்கிறேன், ‘அநீதி’ திரைப்படம் உங்களை கதைக்குள் ஈர்த்து விடும். ஒவ்வொரு நடிகரும் தொழில்நுட்ப கலைஞரும் மிகச் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார்கள், அனைவருக்கும் நன்றி.”

நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி பேசியதாவது…

“வசந்தபாலன் ஒரு துருவ நட்சத்திரம் போன்றவர். ஆஸ்திரேலியாவில் நான் வசித்த காலத்தில் அவரது படங்களை தொடர்ந்து பார்த்து ரசிப்பேன். அவரது இயக்கத்தில் நான் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி. இப்படத்தில் நடித்த பின்னர் அர்ஜுன் தாசின் ரசிகனாக நான் மாறி விட்டேன், சிறு வயதிலேயே மிகுந்த திறமையோடு அவர் திகழ்கிறார். ‘அநீதி’ திரைப்படம் மிகவும் செம்மையாக உருவெடுத்துள்ளது, பத்திரிகையாளர்கள் அனைவரும் இப்படத்திற்கு ஆதரவளித்து மாபெரும் வெற்றி அடைய செய்ய வேண்டும், நன்றி.”

அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான வரதராஜன் மாணிக்கம் பேசியதாவது…

“ஒரு திரைப்பட நிறுவனம் ஆரம்பித்து படங்களை தயாரிக்க வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கனவு, அது ‘அநீதி’ மூலம் நிறைவேறி உள்ளது. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கு ஆதரவளிக்குமாறு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்.”

நடிகை துஷாரா விஜயன் பேசியதாவது…

“இயக்குநர் வசந்த பாலன் மிகுந்த அர்ப்பணிப்பு மிக்கவர், அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். இப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்ததற்காக அவருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. ஒப்பனை இல்லாமலேயே இப்படத்தில் என்னை மிகவும் அழகாக காட்டிய ஒளிப்பதிவாளருக்கு நன்றி. அர்ஜுன் தாசுடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது, அவர் ஒரு சிறந்த நடிகர். இப்படத்திற்கு ஆதரவளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.”

நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது…

“இயக்குநர் வசந்தபாலன் என்னை சந்திக்க வேண்டும் என்று கூறிய போது வில்லன் பாத்திரத்தில் நடிக்க தான் கூப்பிடுகிறார் என்று எண்ணினேன். ஆனால் அவர் சுமார் 3:30 மணி நேரம் எனக்கு கதையை பொறுமையாக விவரித்ததுடன் மட்டுமில்லாமல் இதில் நாயகனாக நடிக்க வேண்டும் என்று கூறி என்னை மகிழ்ச்சியில் ஆற்றினார். அடுத்த நாளே இந்த படத்தில் நடிக்க நான் ஒப்பந்தமானேன். அவருடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம், மீண்டும் ஒருமுறை அவரது படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். இப்படத்தில் அனுபவமிக்க பல நடிகர்களுடன் நடித்தது நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. ‘அநீதி’ படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.”

நிர்வாகத் தயாரிப்பாளர் பிரபாகர் பேசியதாவது…

“இயக்குநர் வசந்த பாலன் அவர்களுக்கும் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘அநீதி’ திரைப்படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. அர்ஜுன் தாஸ், துஷாரா, வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். வசந்த பாலன் ஒரு தலைசிறந்த இயக்குநர், தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி மிகச்சிறந்த மனிதராகத் திகழ்கிறார். இது அவரை இன்னும் உயரங்களுக்கு இட்டு செல்லும். ‘அநீதி’ திரைப்படத்திற்கு உங்களது முழு ஆதரவை வழங்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.”

இயக்குநர் வசந்த பாலன் பேசியதாவது…

“வல்லான் வகுத்ததே நீதி, எளியோருக்கு இங்கு அநீதி என்ற இந்த காலகட்டத்தில் நீதியை உரக்கச் சொல்ல இந்த ‘அநீதி’ திரைப்படம் வருகிறது. நீதி கிடைக்காதவர்கள் குரலாக இப்படம் ஒலிக்கும். எளிமையான மனிதர்களின் வாழ்க்கையை இது பிரதிபலிக்கும். மொத்த உலகமும் சிறு அன்பை எதிர்பார்த்தே சுழல்கிறது. அதை இப்படத்தின் மூலம் சொல்ல முயற்சித்துள்ளோம். நண்பர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இப்படத்தை தயாரித்துள்ளோம். இயக்குநர் ஷங்கர் சார் ‘வெயில்’ படத்தை தயாரித்து எனக்கு வாய்ப்பளித்தார். நான் தயாரிப்பாளராக மாறி உள்ள ‘அநீதி’ படம் குறித்து அவருக்கு தெரிவித்த போது, தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் அதை வழங்குவதற்கு வழி முன் வந்தார். அவருக்கு மிக்க நன்றி. இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் தங்களது மிகச்சிறந்த பங்களிப்பை அர்ப்பணிப்புடன் வழங்கி உள்ளார்கள். இவர்களை எல்லாம் ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி. அர்ஜுன் தாஸ் ஷாருக்கான் போன்று வருவார் என்று இங்கு கூறினார்கள். உண்மையிலேயே அவருக்கு அதற்கான திறமை இருக்கிறது. இந்த படத்தை எந்தவித சமரசமும் இல்லாமல் உருவாக்கி இருக்கிறோம், அனைவருக்கும் நன்றி.”

அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான, வசந்த பாலனின் படைப்பான ‘அநீதி’, இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் சார்பாக தமிழ் மற்றும் தெலுங்கு (‘பிளட் அண்டு சாக்லேட்’) மொழிகளில் ஜூலை 21 அன்று வெளியாகவுள்ளது.

அநீதி – குழுவினர்

நடிகர்கள்: அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், ’நாடோடிகள்’ பரணி, பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவி புகழ் ’அறந்தாங்கி’ நிஷா, காளி வெங்கட், சாரா, அர்ஜூன் சிதம்பரம், இயக்குநர் எஸ்.கே. ஜீவா, இயக்குநர் அருண் வைத்தியநாதன், இயக்குநர் சுப்பிரமணிய சிவா, நாட்டிய கலைஞர் பத்மஸ்ரீ சாந்தா தனஞ்செயன், தயாரிப்பாளர் J.சதீஷ்குமார் மற்றும் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா

பட நிறுவனம்: அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்

எழுத்து & இயக்கம்: வசந்த பாலன்

தயாரிப்பு: எம். கிருஷ்ணகுமார் முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், G. வசந்த பாலன்

ஒளிப்பதிவு: எட்வின் சகாய்

கலை இயக்கம்: சுரேஷ் கல்லேரி

படத்தொகுப்பு: M.ரவிக்குமார்

வசனம்: ’இயக்குநர்’ எஸ்.கே.ஜீவா

நிர்வாகத் தயாரிப்பு: J.பிரபாகர்

சண்டை வடிவம்: ‘டான்’ அசோக்-’பீனிக்ஸ்’ பிரபு

ஒலிக்கலவை: M.R.ராஜாகிருஷ்ணன்

ஸ்டில்ஸ்: R.S.ராஜா

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

Post navigation

Previous Trailer and audio launch event highlights of Vasantha Balan’s ‘Aneethi’ to be released by director Shankar
Next Press Meet of Vasantha Balan’s ‘Aneethi’ to be released by director Shankar

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.