ஒரே இரவில் நிகழ்கின்றன இப்பிரச்னைகளில் யார் குற்றவாளி, யார் நிரபராதி, யார் பாதிக்கப்பட்டவர் என்பதை ஒரு பரபரப்பான திரைக்கதையில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் விஜய் ஸ்ரீ.
மகனின் படிப்பிற்காக அல்லாடும் தந்தையாக இப்படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீயே நடித்திருக்கிறார். ஓரளவிற்கு அக்கதாபாத்திரத்திற்கும் நியாயம் செய்திருக்கிறார். ஆனால், தான் செய்யாத குற்றத்திற்காக காவல்துறையால் துரத்தப்படும் காட்சிகளிலும், மனைவியிடம் அவமானப்பட்டு நிற்கும் இடத்திலும், மகன் முன்பு தன் இயலாமையைக் காட்டும் இடத்திலும் இன்னும் கொஞ்சம் தன் நடிப்பு திறனை வெளிப்படுத்தியிருந்தால், அக்காட்சிகளின் அழுத்தம் கூடியிருக்கும்.
திருடர்களாக வரும் ஆதவன் மற்றும் அவரின் கூட்டாளியின் காமெடிகள் சில இடங்களில் மட்டுமே ஒர்க் அவுட் ஆகின்றன. மற்ற காட்சிகள் அனைத்தும் அலுப்பைத் தருவதோடு, திரைக்கதையின் வேகத்தைக் குறைக்கவே பயன்பட்டிருக்கிறது. மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி என யாரும் காமெடிக்குக் கைகொடுக்கவில்லை. விறுவிறுப்பான திரைக்கதையில், இதுபோன்ற தேவையில்லாத காமெடி காட்சிகள் ஒரு டஜன் இருக்கின்றன.
முழு படமும் இரவிலேயே நடப்பதால், ராஜா பாண்டியின் கேமராவிற்கு நல்ல தீனி. ஒரே இரவில் நடக்கும் வெவ்வேறு கதைகளை இணைத்து சஸ்பென்ஸ் த்ரில்லராக மாற்றியதில், படத்தொகுப்பாளரின் பங்கு பெரியது. இரண்டு பாடல்களிலும் கவனம் பெறுகிறார் இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டி. தொய்வான இடங்களில் கூட திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கும் பின்னணி இசைக்காக அவரைப் பாராட்டலாம்.
