ஐதராபாத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி செய்தியாளரை சந்தித்தார்

ஐதராபாத்,

நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. 19-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்ததும் இந்திய ஊடகங்கள் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டன. இதில் பா.ஜனதா கூட்டணி 300-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிப்பெற்று ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பா.ஜனதா தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். காங்கிரஸ் தொண்டர்கள் 23-ம் தேதி வரையில் காத்திருப்போம் என கூறிவருகிறார்கள்.

இந்தநிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் உள்நோக்கம் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மூலமாக பங்கு சந்தையை ஏற்றம் பெற வைக்கவும், முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. மேலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை குலைப்பதற்கான முயற்சியாக இருக்கும். உண்மையில் கள நிலவரத்தை இந்த கருத்துக் கணிப்புகள் எதிரொலிப்பதாக தெரியவில்லை.

கருத்துக் கணிப்புகளில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்ற தகவல் உள்நோக்கம் கொண்டது. இந்த கருத்துக் கணிப்புகள் பங்கு சந்தை வர்த்தகத்தை ஊக்கப்படுத்தி பலர் ரூ.4.5 லட்சம் கோடி முதல் ரூ.5 லட்சம் கோடி வரை முதலீட்டாளர்கள் பயன் பெறுவதற்கான வழிமுறையாகவே தெரிகிறது.

எதிர்க்கட்சியிலிருந்து பிரதமரை தேர்வு செய்வதில் பெரிய சிரமம் இருக்காது. காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், பிரதமர் பதவியை விட்டுத் தருமா என்ற கேள்விக்கு, தேர்தல் முடிவுக்கு பின்னர் அதுகுறித்து பார்க்கலாம் என்றும் தெரிவித்தார்.
இன்று டெல்லியில் 21 எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *