இந்திய ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது

இந்திய ராணுவத்தில், தகுதியான இளைஞர்கள் பல்வேறு சிறப்பு பயிற்சி நுழைவின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். நாட்டிற்கு சேவை செய்வதுடன், மக்கள் மத்தியில் நல்ல கவுரவத்தையும் உருவாக்கித் தரும் பணிகள் என்பதால் இளைஞர்களும் ராணுவப் பணிகளில் சேர்வதை பெருமையாக கருதுகிறார்கள். தற்போது 42-வது தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தில் (டி.இ.எஸ்-42, ஜன 2020) பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சேர்பவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். இந்த 42-வது நுழைவில் 90 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் சேர்வதற்கான தகுதிகளை இனி பார்க்கலாம்..

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 16½ வயது முதல் 19½ வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 1-7-2000 மற்றும் 1-7-2003 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே.

கல்வித் தகுதி:

பிளஸ்-2 (10+2 முறையில்) படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதவியல் ஆகிய பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்து இந்தப் பாடங்களில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இருநிலைகளில் தேர்வுகள் நடைபெறும். குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். தகுதி படைத்தவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளம் வழியாகவே இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்க முடியும். 8-6-2019-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிக்கவும், மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *