மாயாவதி லக்னோவில் ஆவேசம் பேச்சு பிரதமர் மோடியின் வெற்றியைவிட அவரது தோல்வி வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும்

லக்னோ:


1977-ம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி தோற்றது போல் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி தோற்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். நாட்டின் 17-வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்றது. கடந்த 12-ம் தேதியுடன் 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம், பீகாரில் 8, ஜார்க்கண்டில் 3, மத்தியப் பிரதேசத்தில் 8, பஞ்சாபில் 13, சண்டீகரில் 1, உத்தரப் பிரதேசத்தில் 13, இமாசல பிரதேசத்தில் 4, மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள் என மொத்தம் 59 தொகுதிகளுக்கு, 7-வது மற்றும் இறுதி கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிக்கும், 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் மேலும் காலியாக இருந்த சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று முடிந்தது. இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மாயாவதி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. அங்குள்ள மக்கள் அனைவரையும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், பிரதமர் நரேந்திர மோடியும் ஏமாற்றிவிட்டனர். கோரக்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் யோகி ஆதித்யநாத்தை மக்கள் நிராகரித்தனர். பிரதமர் மோடியின் வெற்றியைவிட அவரது தோல்வி வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும். 1977-ம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் நிகழ்ந்தது இப்போது வாரணாசிதொகுதியில் மீண்டும் நிகழுமா? என்று குறிப்பிட்டுள்ளார்.

குஜராத்தின் வளர்ச்சியைப் போல கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் வறுமை, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகளை நீக்கவில்லை. மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதை விடுத்து, வகுப்பு வாரியான வன்முறையையும், ஜாதி ரீதியான கலவரத்தையும் மத்திய, மாநில பா.ஜ.க. அரசுகள் தூண்டி விடுகின்றன. இது மிகவும் கவலையை ஏற்படுத்தி உள்ளது’ அவர் மாயாவதி பதிவிட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் 1977-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி போட்டியிட்டார். அவர் பாரதிய லோக் தளம் கட்சியைச் சேர்ந்த ராஜ் நாராயணன் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *