விடாது பஞ்சமி நிலம்… முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே? ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி?

விடாது பஞ்சமி நிலம்... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே? ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி?

சென்னை: பஞ்சமி நில விவகாரத்தில் திமுகவின் முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் அந்த நில உரிமையாளரிடமே இல்லையா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அசுரன் திரைப்படத்தை பார்த்து பாராட்டி இருந்தார் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த டாக்டர் ராமதாஸ், பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல… பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – ஆஹா…. அற்புதம்… அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்! என பதிவிட்டிருந்தார்.
ஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ… அதிமுகவில் தொடரும் குழப்பம்.

பஞ்சமி நிலமே அல்ல
இதனைத் தொடர்ந்து அனல் பறக்க விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ராமதாஸுக்கு பதில் தரும் வகையில் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில், மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி ” இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.! அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை” என குறிப்பிட்டு அந்த பட்டா நகலையும் வெளியிட்டிருந்தார்.

ராமதாஸுக்கு ஸ்டாலின் சவால்
மேலும் நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். தற்போது ஸ்டாலினுக்கு ட்விட்டர் பக்கத்தில் ராமதாஸ் பதில் அளித்துள்ளார். அந்த பதில்கள்:

மூல ஆவணம் இல்லையா?
முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?

எப்ப வாங்குனீங்க?
முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது? அவற்றை விடுத்து 1985-ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன?
உண்மை விளம்பிக்கு தெரியுமா?

உண்மை விளம்பிக்கு தெரியுமா?
முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி ஸ்டாலினுக்கு தெரியுமா? முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்கு சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது?
அறிவாலய விவகாரம்

அறிவாலய விவகாரம்
நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே? அனாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004-ல் அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை 2007-ல் திமுக ஆட்சியில் தங்களுக்குத் தாங்களே ரத்து செய்து கொண்ட நியாயவான்கள் தானே திமுக தலைமை! இவ்வாறு ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *