அதிக மார்க் வாங்கித் தருகிறேன்!’- சிவகங்கை பா.ஜ.க பிரமுகரால் நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடுமை

அதிக மார்க் வாங்கித் தருகிறேன்!'- சிவகங்கை பா.ஜ.க பிரமுகரால் நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடுமை

.

சிவகங்கை மாவட்டம், பில்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவி. (பெயர் மாற்றம்) 20 வயதான இவருக்கும் சென்னை துரைப்பாக்கத்தை அடுத்த கண்ணகி நகரைச் சேர்ந்த ஜெயராணி என்பவரின் மகனுக்கும் கடந்த 11-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து இளம் தம்பதியர் சென்னையில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், புதுமணப்பெண் தேவிக்குத் தொடர்ந்து வயிற்று வலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். தேவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் நான்கு மாத கர்ப்பமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து ஸ்கேன் செய்து பார்த்ததிலும் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தேவியிடம் கேட்டபோது, ` சிவகங்கையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்துபோது, கல்லூரி உரிமையாளரும் முதல்வருமான சிவகுரு துரைராஜ் கூடுதல் மதிப்பெண் வழங்கி தேர்ச்சி பெற வைப்பதாகக் கூறினார்.

இதற்காக அவர் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார். ஒப்புக்கொள்ளவில்லை என்றால் சான்றிதழ்களை கிழித்துவிடுவதாக மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்தார். இதை யாரிடமாவது கூறினால், கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டினார். அதனால்தான் யாரிடமும் கூறவில்லை’ என அழுதபடியே கூறியிருக்கிறார்.

பாலியல் புகார்பாலியல் புகார்
இதையடுத்து மாமியார் ஜெயராணி அந்தப் பெண்னை சிவகங்கை மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்றார். தேவி அளித்த புகாரின் பேரில் சிவகுரு துரைராஜ் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.

சிவகுரு துரைராஜ் பி.ஜே.பி-யின் சிவகங்கை மாவட்ட கலை, கலாசார பிரிவின் மாவட்டத் தலைவராக உள்ளார். இவர் நடத்திவரும் நர்சிங் கல்லூரியில் இதுபோல் மாணவிகள் பாதிக்கப்பட்டிருந்தால் புகார் தெரிவிக்கலாம். புகார்கள் ரகசியமாக வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என சிவகங்கை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

சிவகுருதுரைராஜ்சிவகுருதுரைராஜ்
பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமியார் ஜெயராணி செய்தியாளர்களிடம் கூறுகையில், “பெண்களுக்கு இதுபோன்று அனைத்து இடங்களிலும் கொடுமை நடக்கிறது. சில இடங்களில் தெரியவருகிறது. பல இடங்களில் தெரியாமலேயே போய் விடுகிறது. சிவகுரு துரைராஜ் செய்த குற்றத்தால் என் மகன், மருமகள் வாழ்க்கை தான் பாதித்துள்ளது. காவல்துறை கைது செய்த பின்னும் தான் குற்றம் செய்யாததுபோல் காவல்நிலையத்தில் சந்தோஷமாக வெற்றிலை போடுகிறார். இது போன்ற குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்றார் கொதிப்புடன்.

இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட பா.ஜ.க தலைவர் சொக்கலிங்கத்திடம் பேசினோம், ” சிவகுரு துரைராஜ் தற்போது எந்தப் பொறுப்பிலும் இல்லை. அவர் தொண்டராக மட்டுமே உள்ளார். பதவியைவிட்டு எடுத்து 6 மாதம் ஆகிவிட்டது. இதைப் பற்றி என்னிடம் கேட்டு யாரும் தொல்லை செய்ய வேண்டாம்” எனக் கோபமாகக் கூறி போனை துண்டித்தார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *