அசுரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ்

அசுரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் தனுஷ், விருது கிடைச்சதும் குதிச்சதும் கிடையாது. கிடைக்கலன்னு துடிச்சதும் கிடையாது என்று கூறியிருக்கிறார்.

தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அசுரன்’. வெற்றி மாறன் இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

தனுஷ் பேசும்போது, ‘அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கை தான் முக்கியமா இருக்கு. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது. நான் நடிப்பதற்கு வெற்றிமாறன் நிறைய கண்டெண்ட் கொடுப்பார்.

இந்தக் கதாப்பாத்திரம் என் 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய கொடுப்பனை. வேற எந்த நடிகருக்கும் அது கிடைக்குமா என்று தெரியவில்லை. இந்தப்படம் ஒரு முக்கியமான படமாக கண்டிப்பாக இருக்கும். மிகவும் மகிழ்ச்சியுடன் நான் நடித்த படம் இது. வெற்றிமாறனும் அவர் டீமும் எனக்கு நல்ல ப்ளாட்பார்ம் கொடுத்திருக்காங்க. மஞ்சுவாரியாரின் டேலண்ட் எனக்குப் பிடிக்கும். அவரோடு நடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசையாக இருந்தது.

கென்னுக்கு கான்பிடண்ட் அதிகம். டி.ஜே பாடியே நம்மை கரெக்ட் பண்ணிருவான். இப்ப இருக்குற இளைஞர்களிடம் நிறைய திறமை இருக்கிறது. ஜிவி பிரகாஷோடு வேலை பார்ப்பது ஜாலியா இருக்கும். மண் சார்ந்த இசை இப்படத்திற்கு கொடுத்திருக்கிறார்.
வடசென்னை படம் தான் வெற்றிமாறனின் பெஸ்ட் என்று நினைத்தேன். ஆனால் அசுரன் தான் அவரின் பெஸ்ட்டாக இருக்கும். வடசென்னைக்கு தேசியவிருது கிடைக்கவில்லை என்று மக்கள் வருத்தப்படுகிறார்கள். அதுதான் பெரியது. விருது கிடைச்சதும் குதிச்சதும் கிடையாது. கிடைக்கலன்னு துடிச்சதும் கிடையாது” என்றார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *