சென்னையில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத தமிழக அரசை கண்டித்து தயாநிதி மாறன் எம்.பி பேசியதாவது

சென்னை:
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத தமிழக அரசை கண்டித்து பாரிமுனையில் நேற்று திமுகவினர் ஆர்ப்பாட்டம், பேரணியில் ஈடுபட்டனர். இதில் எம்.பி.,க்கள் தயாநிதி மாறன், கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத தமிழக அரசை கண்டித்து சென்னை கிழக்கு மாவட்ட திமுக மற்றும் மாவட்ட மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், பிராட்வே டான்போஸ்கோ பள்ளி ஜீல்ஸ் தெருவில் நேற்று நடந்தது. திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி தலைமை வகித்தார். திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் தயாநிதி மாறன் எம்.பி முன்னிலை வகித்தார். தொடர்ந்து, எம்.பி.,க்கள் தயாநிதி மாறன், கனிமொழி, மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ ஆகியோர் ஆகியோர் தலைமையில் பேரணி நடந்தது. இதில் எம்எல்ஏக்கள் ரங்கநாதன், தாயகம் கவி, கே.எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பாரிமுனை பிரகாசம் சாலையில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து பதாகைகளுடன் புறப்பட்ட பேரணி, முக்கிய சாலை வழியாக சென்று முத்தியால்பேட்டை காவல் நிலையத்தை அடைந்தது. அங்கு, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து திமுகவினர் கோஷம் எழுப்பினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற தயாநிதி மாறன் எம்.பி பேசியதாவது:கடந்த 8 ஆண்டுகளாக தூங்கிவிட்டு தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடும்போது, தமிழக முதல்வர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர 3 ஆண்டுகள் ஆகும். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது போல் இருக்கிறது முதல்வரின் செயல்பாடு. இன்றைக்கு, சாராயம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு 3 கோடி லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. அந்த தண்ணீரை மக்களுக்கு கொடுக்கலாம். இதை எல்லாம் செய்யமாட்டார்கள். ஏன் என்றால் டாஸ்மாக் மூலம் கோடிக்கணக்கில் அவர்கள் லாபம் பார்க்கிறார்கள். மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். இதனால் தான் நாங்கள் நாடாளுமன்றத்திலும் குரல் கொடுக்கிறோம். எடப்பாடி அரசு வீட்டுக்கு போக வேண்டும். மக்களுக்கு நல்லது செய்கிற மு.க.ஸ்டாலின் ஆட்சி தமிழகத்ததில் மலரட்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கனிமொழி எம்.பி பேசுகையில், ‘‘எந்த தெருவுக்குள் நுழைந்தாலும் ஆண்களும், பெண்களும் காலி குடங்களுடன் நிற்கும் அவல நிலை காணப்படுகிறது. காலிக்குடங்கள் தமிழகத்தின் குறியீடாக மாறிவிட்டது. தமிழகத்தை பின்னோக்கி கொண்டு செல்லும் இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது,’’ என்றார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *