சென்னை :
மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்காதது அமைச்சரவையில் இனி தமிழகத்திற்கு வாய்ப்பு இல்லை என்பதை காட்டுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார். தமிழகத்திற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இடம் ஒதுக்காதது ஏமாற்றம் அளிப்பதாக கமல்ஹாசன் கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் தமிழக மக்களின் குரல் ஒலிக்க வேண்டும் என்பது தான் மக்கள் நீதி மய்யத்தின்
கோரிக்கை என்று கமல் கூறினார்.
மேலும் அமைச்சரவைப் பட்டியலில் தமிழகத்திற்கு இடம் கிடைக்கும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியது தேர்தல் வாக்குறுதியை போல் தான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடியின் ஆட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதே ஒரு இந்தியனாக தான் ஆசைப்படுவதாக கமல் கூறினார். இதைத் தொடர்ந்து இந்தி திணிப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்றும் விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என்றார். இதனிடையே கோட்சே குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கில் பிற்பகல் 3 மணிக்கு கரூர் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். நேரில் ஆஜராகி முன்ஜாமின் பெறுகிறார்.
Leave a Reply