பெற்றோர்கள் புகை பிடிப்பதால் மறைமுகமாக 40 சதவீதம் குழந்தைகள் பாதிப்பு அடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவில் 80 முதல் 90 சதவீதம் இளைஞர்கள் புகையிலை பழக்கத்திற்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. புகைப்பிடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று சிகரெட் பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள வாசகங்களை பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை. குழந்தைகளை பெற்றோர்கள் புகையிலை பொருட்களை கடைக்கு சென்று வாங்கி வர சொல்வதால் அவர்களும் புகையிலை பழக்கத்திற்கு தூண்டப்படுகின்றனர். தமிழகத்தை பொறுத்த வரை புகைப்பிடிக்கும் பழக்கம் 10 சதவீதம் குறைந்துள்ளது.
உண்மையிலேயே குழந்தைகள் மீது அன்பு செலுத்தும் பெற்றோர்கள் புகையிலை பழக்கத்தை அறவே விடவேண்டும் என்று சுகாதார இயக்குனர் குழந்தைசாமி அறிவுறுத்தியுள்ளார். உலக சுகாதார புள்ளி விவரத்தை படி, புகைப் பிடிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் பேர் உலக அளவில் உயிர் இழந்து வருவதாகவும், அவர்களில் 10 லட்சம் பேர் இந்தியர்கள் என்றும் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 25 லட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாக சமீபத்திய ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. வரும் 2035-ல் இந்தியாவில் புற்றுநோய் இறப்பு 12 லட்சமாக அதிகரித்துவிடும் என்று அந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரல், வாய், சிறுநீர்ப்பை, மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுகிறது.
இதுமட்டுமல்லாமல் மாரடைப்பு, பக்கவாதம், ஆஸ்துமா, காசநோய், மலட்டுத்தன்மை என மற்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள். உலகளவில் ஆண்கள் 47 சதவீதமும், பெண்கள் 12 சதவீதமும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாகவும், புகையிலை பொருட்களால் 40 சதவீதம் குழந்தைகள் பாதிப்பு அடைந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 53 சதவீத ஆண்களும் 3 சதவீத பெண்களும் புகைப்பழக்கத்திற்கு ஆளாகி உள்ளதாகவும், புகைப்பிடிப்பதால் நமக்கு மட்டுமல்லாமல் நம் அருகில் இருக்கும் ரத்த உறவுகள், நண்பர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதாகவும், புகைப்பழக்கம் நமக்கு மட்டுமின்றி நமது சந்ததி உயிருக்கும் பகை என்பதை அனைவரும் அறிய வேண்டிய தருணம் இது, என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.