Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறைச் செயலர் ஆய்வு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறைச் செயலர் ஆய்வு

Posted on October 22, 2019

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறைச் செயலர் ஆய்வு

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் குடும்ப நலத் துறை மற்றும் சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் பிரிவு, காய்ச்சல் பிரிவு உள்ளிட்ட இடங்களையும் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்களையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ், மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்களிடம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் கூறியது:

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவு, காய்ச்சல் பிரிவு உள்ளிட்ட வார்டுகளில் சிகிச்சை பெற்று வருவோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், புதிதாகக் கட்டப்பட்டு வரும் தாய்சேய் நல மையக் கட்டடமும் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில், தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 16 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று பாதுகாப்பான நிலையில் உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 256 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கு 2 ஆயிரத்து 30 பணியாளர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடுவீடாகச்சென்று டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

பள்ளிகளிலும் டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவர்கள் மூலமாக விழிப்புணர்வுப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

மாவட்டக் கல்வி அலுவலர்கள் அனைத்துப் பள்ளிகளிலும் குடிநீர், கழிப்பறை, வகுப்பறைகளை ஆய்வு செய்து வருகின்றனர். பருவமழை முன்னேற்பாடாக போதிய மருந்துகளை இருப்பு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரசவப் பிரிவில் 59 படுக்கைகளே உள்ளன. நாளொன்றுக்கு 110 பேருக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது. அதனால் 50 படுக்கைகளை அதிகரித்துள்ளோம். விரைவில் தாய்சேய் நலக் கட்டடம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, மருத்துவமனை முதல்வர் ஜி.அரிஹரன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு , சுகாதார இயக்குநர் குழந்தைசாமி, துணை முதல்வர் அனிதா, சுகாதார துணை இயக்குநர்கள் பழனி, செந்தில்குமார், மருத்துமனை நிலைய அலுவலர் அனுபாமா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme