
காவேரி மருத்துவமனையின் சாதனை பழுதடைந்த பெருந்தமனி மற்றும் நுரையீரல் தமனி வால்வுகளுக்கு உலகிலேயே முதல்முறையாக கதீட்டர் வழி சிகிச்சை~ ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் ‘ஹைபிரிட் கேத் லேபில்’, 58 வயது நபருக்கு அறுவை சிகிச்சை இன்றி வெற்றிகரமான “போஸ்ட் ராஸ் டபுள் வால்வ் ரெஸ்க்யூ” சிகிச்சை ~* சென்னை, ஜூலை 10, 2026: ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை, பழுதடைந்த இரண்டு இதய வால்வுகளுக்கு மீண்டும் ஒரு திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை இன்றி வெற்றிகரமாக சிகிச்சையளித்து சாதனை படைத்துள்ளது. பெருந்தமனி வால்வு நோய்க்காக செய்யப்பட்ட திறந்தநிலை அறுவை சிகிச்சைக்குப் பிறகு, உலகிலேயே முதல்முறையாக முழுமையாக கதீட்டர் வழியில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை இதுவெனக் கருதப்படுகிறது.ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்பு சிக்கலான இதய வால்வு அறுவை சிகிச்சை செய்துகொண்ட 58 வயது நபருக்கு இந்த நவீன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நோயாளியின் சொந்த நுரையீரல் தமனி வால்வை (Pulmonary valve) எடுத்து, பழுதடைந்த பெருந்தமனி வால்வுக்குப் (Aortic autograft) பதிலாகப் பொருத்தும் சிகிச்சையே ‘ராஸ்’ (Ross) செயல்முறை என அழைக்கப்படுகிறது. அதேசமயம், எடுக்கப்பட்ட நுரையீரல் தமனி வால்வுக்குப் பதிலாக தானமாகப் பெறப்பட்ட மனித வால்வு பொருத்தப்படும். ராஸ் சிகிச்சை நீண்டகாலத்திற்குச் சிறந்த பலன்களை அளித்தாலும், நாளடைவில் இரண்டு வால்வுகளும் தேய்மானம் அடைந்து, பிற்காலத்தில் மாற்று சிகிச்சை தேவைப்படலாம்.நோயாளியின் பின்னணி மற்றும் சவால்கள்இந்நோயாளிக்கு கடுமையான அயோர்டிக் பின்னொழுக்கு, மிதமான நுரையீரல் சுருக்கத்துடன் கூடிய கடுமையான நுரையீரல் பின்னொழுக்கு, தீவிர நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் மற்றும் மிதமான மிட்ரல் பின்னொழுக்கு ஆகிய பாதிப்புகள் இருந்தன. கால்கள் மற்றும் வயிற்றில் கடுமையான வீக்கம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டில் குறைபாடு, தீவிர மூச்சுத்திணறல் உள்ளிட்ட இதயச் செயலிழப்புப் பிரச்சனைகளால் அவர் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரால் நிம்மதியாக உறங்க முடியாத நிலை இருந்தது. மேலும், நியூயார்க் ஹார்ட் அசோசியேஷன் (NYHA) அளவுகோலின்படி, இதயச் செயலிழப்பில் மிகத் தீவிரமான III-IV நிலையில் அவர் இருந்தார்.அவர் பல்வேறு மருத்துவமனைகளை அணுகியபோதும், இரண்டாவது முறையாக திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை செய்வது மிகச் சிக்கலானது மற்றும் அதிக ஆபத்து நிறைந்தது எனத் தெரிவிக்கப்பட்டது. கதீட்டர் அடிப்படையிலான சிகிச்சையை மேற்கொள்வது கூட சவாலானது என்றே மருத்துவ நிபுணர்களால் கருதப்பட்டது.காவேரி மருத்துவமனையின் நவீன சிகிச்சை முறைகாவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட்டின் பன்முக மருத்துவ நிபுணர் குழு, முப்பரிமாண எக்கோ கார்டியோகிராபி மற்றும் கார்டியாக் சிடி ஸ்கேன் மூலம் நோயாளியின் நிலையை விரிவாக ஆய்வு செய்தது. அதன் முடிவில், மீண்டும் ஒரு திறந்தநிலை அறுவை சிகிச்சை இன்றி, முழுமையாகக் கதீட்டர் மூலமாகவே பழுதடைந்த இரண்டு வால்வுகளுக்கும் சிகிச்சையளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டன. மருத்துவத் துறையில் இதுவரை இதுபோன்றதொரு சிகிச்சை பதிவு செய்யப்படாததால், சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பு, ட்ரான்ஸ்கதீட்டர் ஹார்ட் வால்வ் தெரபிஸ் பிரிவின் இயக்குநர் டாக்டர் ராஜாராம் அனந்தராமன் தலைமையிலான மருத்துவக் குழுவும், சர்வதேச வல்லுநர்கள் குழுவும் இச்சிகிச்சை முறையை விரிவாக ஆய்வு செய்தன.முதலில் பல்மனரி ஹோமோகிராஃப்ட் பகுதியில் கவர்டு ஸ்டெண்டுகள் மற்றும் பலூன் விரிவாக்கம் மூலம் தயார்படுத்தப்பட்டு, பின்னர் மெட்ரானிக் மெலடி ட்ரான்ஸ்கதீட்டர் பல்மனரி வால்வு பொருத்தப்பட்டது. அதன்பின் பழுதடைந்த அயோர்டிக் ஆட்டோகிராஃப்டில் (Aortic autograft), எட்வர்ட்ஸ் சேபியன் 3 அல்ட்ரா ரெசிலியா பலூன்-விரிவாக்கக்கூடிய வால்வு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. புதிய வால்வை நிலைநிறுத்த உதவுவதற்கு வால்வில் கால்சியப் படிமங்கள் இல்லாததால், இச்சிகிச்சைக்கு மிக நுணுக்கமான திட்டமிடலும், துல்லியமான செயல்பாடும் தேவைப்பட்டது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப உதவியுடன் ‘விர்ச்சுவல் வால்வ் இம்ப்ளான்ட்’ கணிப்பு மாதிரிகள் பயன்படுத்தப்பட்டன. முழு மயக்கவியலின் கீழ், உணவுக்குழாய் வழியாக தொடர்ச்சியான எக்கோ கார்டியோகிராபி வழிகாட்டுதலுடன் ஹைபிரிட் அறுவை சிகிச்சை அரங்கில் இச்சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.முழுமையாக குணமடைந்த நோயாளிதீவிர சிகிச்சைப் பிரிவில் சில நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி, எவ்விதச் சிக்கலுமின்றி குணமடைந்து வீடு திரும்பினார். இரண்டு வாரங்களுக்குப் பிறகான பரிசோதனையில் அவரது உடல்நிலையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. வீக்கம் முழுமையாகக் குறைந்து, NYHA Class I இயல்பு நிலைக்கு அவர் திரும்பியிருந்தார். தற்போது அவரால் நிம்மதியாக உறங்க முடிவதுடன், எவ்விதச் சிரமமுமின்றி தினமும் 20-30 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சியும் மேற்கொள்ள முடிகிறது.டாக்டர் ராஜாராம் அனந்தராமன் (இயக்குநர் – ட்ரான்ஸ்கதீட்டர் ஹார்ட் வால்வ் தெரபிஸ், காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட், ஆழ்வார்பேட்டை) கூறியதாவது:”ராஸ் சிகிச்சைக்குப் பிறகு அயோர்டிக் மற்றும் பல்மனரி ஆகிய இரண்டு வால்வுகளும் பழுதடைந்தால், அதற்கான சிகிச்சைத் தேர்வுகள் மிகவும் குறைவு. ஏனெனில், மீண்டும் ஒரு திறந்தநிலை அறுவை சிகிச்சை செய்வது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். துல்லியமான ஸ்கேனிங், மிகச் சரியான திட்டமிடல் மற்றும் பல்வேறு மருத்துவப் பிரிவுகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலமாகவே, மார்பைத் திறக்காமல் கதீட்டர் முறையிலேயே பழுதடைந்த இரண்டு வால்வுகளையும் எங்களால் வெற்றிகரமாக மாற்ற முடிந்தது. எங்கள் அறிவுக்கு எட்டியவரை, உலக மருத்துவ வரலாற்றில் முழுமையாக கதீட்டர் மூலம் ‘டபுள் ட்ரான்ஸ்கதீட்டர் ராஸ் ரெஸ்க்யூ’ சிகிச்சை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். வேறு வழியின்றி தவிக்கும் அதிக ஆபத்துள்ள நோயாளிகளை கவனமாகத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மாற்று வழியில் மறுவாழ்வு அளிக்கும் சாத்தியக்கூறுகளை இந்த வெற்றிகரமான சிகிச்சை வெளிப்படுத்தியிருக்கிறது.”காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனரும் மற்றும் செயல் இயக்குநருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில், “இதயக் கட்டமைப்பு சார்ந்த நவீன சிகிச்சை முறைகள், சிக்கலான வால்வு நோய்களுக்கான சிகிச்சைகளை முற்றிலும் மாற்றி வருகின்றன. இவ்வளவு சிக்கலான ஒரு சிகிச்சையை மேற்கொள்வதற்கு அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழு, அதிநவீன ஸ்கேனிங் வசதிகள், ஹைபிரிட் அறுவை சிகிச்சை அரங்கு மற்றும் பல்வேறு மருத்துவப் பிரிவுகளின் தடையற்ற ஒருங்கிணைப்பு ஆகியவை அவசியம். இந்தச் சாதனை, காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட்டில் உள்ள உயர்தர மருத்துவ நிபுணத்துவம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைப் பிரதிபலிக்கிறது. மேலும், இந்தியாவில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவ ஆதாரங்களின் அடிப்படையிலான அதிநவீன சிகிச்சைகளை வழங்குவதில் உள்ள எங்களது தொடர் அர்ப்பணிப்பையும் இது எடுத்துரைக்கிறது.”
