கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்!!!
தமிழகத்தையே தனது நடிப்பால் கட்டிப்போட்ட இவர் மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952 ஆம் ஆண்டு பிறந்தவர். அழகர்சாமி என்ற ரைஸ்மில் முதலாளியின் மகனான இவர் படிப்பில் ஆர்வம் காட்டாமல், தொடக்கம் முதலே திரையரங்குக்கு சென்று எம்.ஜி.ஆர் படங்களை பார்ப்பதையே வழக்கமாக கொண்டவர்.
அந்த ஆர்வம் அவரை சென்னைக்கு அழைத்து வந்தது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு வந்தவரை அவரது நிறத்தை காட்டி பல தயாரிப்பாளர்கள் கேலி செய்து அவரை வைத்து படம் தயாரிக்க முன்வரவில்லை. ஆனால் விக்ரமாதித்தன் போல தனது முயற்சியை கைவிடாத விஜயகாந்த் 1979- ம் ஆண்டு எம். ஏ. காஜாவின் இயக்கத்தில் வெளியான “இனிக்கும் இளமை” திரைப்படம் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.
விஜயராஜ் பெயர் பிடிக்காததால் “இனிக்கும் இளமை” பட இயக்குனர் விஜயகாந்த் என இவருக்கு பெயர் வைத்தாராம். விஜயகாந்த் சினிமாவுக்குள் நுழைந்த போது ரஜினிகாந்த் உச்சநடிகராக இருந்தாராம். அதனால் அவரது பெயரில் இருந்த காந்த்தை எடுத்து சேர்த்தாராம்.
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் இராம நாராயணன் ஆகிய இருவரும் தான் விஜயகாந்தை வைத்து அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களை இயக்கியுள்ளாகள். இதில் பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட்.
1999 ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவரானார் விஜயகாந்த். அவர் நடிகர் சங்கத் தலைவரானபோது, நடிகர் சங்கம் மோசமான நிலையில் இருந்தது. வெளி நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி கடனில் தத்தளித்த நடிகர் சங்கத்தை மீட்டார். அதோடு மட்டுமல்லாமல், நலிந்த கலைஞர்களுக்கு, உதவி செய்வதற்காக ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.
நடிகர் சங்கத்தலைவராக இருந்த விஜயகாந்த் 2005-ஆம் ஆண்டு, செப்டம்பர் 14-ஆம் தேதி மதுரையில் மாபெரும் மாநாட்டை நடத்தி, அதில், ”தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்” என்ற புதிய கட்சியை தொடங்கினார். அதனால் சினிமாவுக்கு குட்-பை சொல்லிவிட்டார்.
கேப்டன் விஜயகாந்த், நேற்று (டிசம்பர் 28) உடல் நலக்குறைவு காரணமாக தனது 71வது வயதில் காலமானார். இவரது மறைவினால் தமிழ் திரையுலகினரும், ரசிகர்களும், ஒட்டுமொத்த தமிழக மக்களுமே சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இவரது உடல், நேற்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து விஜயகாந்தின் உடல் இன்று காலை, மக்கள் மரியாதை செலுத்தும் வகையில் தீவுத்திடலுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. பல தமிழ் திரைப்பட கலைஞர்கள், விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடல், இன்று மாலை 4:40 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள அவரது தேமுதிக அலுவலக வலாகத்தில் இறுதி அஞ்சலி நடைபெற உள்ளது.
கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலம் தீவுத் திடலில் இருந்து மதியம் 2.30 மணிக்கு தொடங்க இருக்கிறது. மேலும் இறுதிச் சடங்கின்போது முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட 200 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தாமோ அன்பரசன் ஆகியோர் இந்த இறுதிச் சடங்கில் அரசு சார்பில் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.