டிடி ரிட்டன்ஸ் திரை விமர்சனம்
சந்தானத்தின் நகைச்சுவை கலந்த நடிப்பு திரையில் காமெடியில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்தியிருக்கும் சந்தானம், பேசும் டைமிங் வசனங்கள் அனைத்துமே நகைச்சுவை விருந்தாக திரையில் 2h 4m ரசிக்கவைத்துள்ளனர் ’டிடி ரிட்டன்ஸ் குழு என்றல் மிகையாகாது.
1965-ம் காலக்கட்டத்தில் பாண்டிச்சேரியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் பங்களாவில் ஒரு குடும்பம் மனிதர்களை வைத்து ஒரு விளையாட்டை நடத்தி வருகிறது. அதில் வென்றால் கட்டிய பணத்திற்கு இணையாக பல மடங்கு பரிசு, தோற்றால் மரணம். இப்படி ஒரு பயங்கரமான விளையாட்டை நடத்தும் அந்த குடும்பத்தை ஊர் மக்கள் அடித்து கொன்று விடுகிறார்கள்.
தற்போதைய காலக்கட்டத்தில், அதே பாண்டிச்சேரியில் பெரும் புள்ளியாக இருக்கும் பெப்சி விஜயனிடம் இருக்கும் பணத்தை பிபின் மற்றும் முனீஷ்காந்த் டீம் கொள்ளையடிக்க, பிபின் டீமிடம் இருந்து மொட்டை ராஜேந்திரன் டீம் அந்த பணத்தை கொள்ளையடிக்கிறது. ஆனால், அந்த பணம் எதேட்சையாக சந்தானத்தின் கையில் கிடைக்கிறது. பணத்தோடு பயணிக்கும் சந்தானத்தின் நண்பர்கள் போலீசிடம் இருந்து தப்பிக்க, விபரீதமான விளையாட்டால் கொலை செய்யப்பட்ட குடும்பம் வசித்த அந்த பங்களாவில் பணத்தை மறைத்து வைக்கிறார்கள்.
இதற்கிடையே, தனது பணம் யாரிடம் இருக்கிறது, என்பதை தெரிந்துக்கொள்ளும் பெப்ஸி விஜயன், நாயகி சுரபியை வைத்து சந்தானத்தை மிரட்டுகிறார், அவர் பணத்தை திருப்பி கொடுப்பதற்காக, அந்த பங்களாவில் இருக்கும் பணத்தை எடுக்க செல்ல, அங்கிருக்கும் பேய்களிடம் அந்த மரண விளையாட்டை விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். சந்தானம் மற்றும் அவரது நண்பர்களுடன், பணத்தை தேடி வரும் பெப்ஸி விஜயன், பிபின், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட அனைவரும் அந்த பேய் வீட்டில் சிக்கிக்கொண்டு விளையாட்டில் பங்கேற்க இறுதியில் அவர்கள் விளையாட்டில் வெற்றி பெற்று உயிருடன் வந்தார்களாஎன்பதை காமெடியாக சொல்வது தான் ‘டிடி ரிட்டன்ஸ்’.
தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவும், ரோஹித் ஆப்ரஹாமின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.இயக்குநர் ஏ.பிரேம் ஆனந்த், சிரிப்பு சரவெடியாக படத்தை இயக்கியிருக்கிறார். ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் அரசியல்வாதிகளையும், திரை பிரபலங்களையும் நடுநடுவே நக்கலடிக்கவும் செய்திருக்கிறார்