’ராஜாமகள்’ திரை விமர்சனம்-indiastarsnow.com
ஆடுகளம் முருகதாஸ்தான் சொந்தமாக செல்போன் பழுது பார்க்கும் கடை வைத்து கீழ்த்தட்டு நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவரது மகள் (பிரிதிக்ஷா) மீதான அன்பில் என்ன கேட்டாலும் வாங்கித் தரும் குணத்துடன் இருக்கிறார்.
ஆனால் அவரது மனைவி வெலீனா இயல்பான சிந்தை கொண்டவர். மகளுக்கு எதார்த்த வாழ்க்கையைப் புரிய வைக்க வேண்டும் என்று முருகதாசிடம் வலியுறுத்தினாலும் அவர் கேட்பதாக இல்லை. மாறாக மனைவியை அடக்குகிறார்.
இதற்கிடையே, பள்ளியில் படிக்கும் மாணவனின் பிறந்தநாளுக்காக அவனது வீட்டுக்கு போகும் சிறுமி பிரதிக்ஷா, ஆடம்பரமான அந்த வீட்டை போல் தனக்கும் ஒரு வீடு வாங்கி கொடுக்க வேண்டும் என்று தனது தந்தையிடம் கேட்கிறார். தனது மகள் விரும்பியதை இல்லை என்று சொல்லி ஏமாற்ற மனம் இல்லாத முருகதாஸ், வீடு வாங்கி கொடுப்பதாக உறுதியளிக்கிறார்.
காமெடி வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்த ஆடுகளம் முருகதாஸ், முதல் முறையாக கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். என்ன தான் ஏழ்மையான வாழ்க்கையாக இருந்தாலும், பிள்ளைகள் ஆசைப்பட்டதை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்ற சராசரி தந்தையாக நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கும் முருகதாஸ், ஒரு கட்டத்தில் தன்னால் முடியாது என்பதை மகளுக்கு புரிய வைக்காமல், பொய்க்கு மேல் பொய்யாக சொல்லும் காட்சிகளில் அவர் மீது கடும்கோபம் வர வைக்கிறார்.
சிறுமி பிரதிக்ஷா நடிப்புதான். பிடிவாதம் பிடிப்பது, சந்தோஷம் கொள்வது, நண்பனிடம் சவால் விடுவது என்று நடிப்பின் சாயலே தெரியாமல் இயல்பாக இருக்கிறது பிரதிக்ஷாவின் நடிப்பு.
அதேபோல் பள்ளியில் பிரதிக்ஷாவின் வீடு வாங்கும் ஆசைக்கு காரணமாக அவளை உசுப்பேற்றும் அந்த குண்டுப் பையனும் அற்புதமாக நடித்திருக்கிறான். பிரதிக்ஷாவின் அப்பா அவளிடம் பொய்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதை முதலில் கண்டுபிடிப்பவன் அவன்தான்.
பிரதிக்ஷாவின் அம்மாவாகவும், முருகதாஸின் மனைவியாகவும் நடித்திருக்கும் வெலீனாவின் நடிப்பும் கச்சிதமாக இருக்கிறது. அழுது வடியாமல் அதே சமயம் எதையும் இயல்பாக ஏற்றுக் கொள்ளும் பாங்குடன் நடந்து கொள்வதுடன் முருகதாஸின் பிள்ளைப் பாசம் புரிந்து ஒரு சிறிய வீடாவது வாங்கிவிடலாம் என்று அவருடன் கைகோர்த்து நிற்பது நன்று.