Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2025
  • DNA’ படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா
  • News

DNA’ படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா

admin June 26, 2025

DNA' படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழாDNA' படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழாமுஃபாசா: தி லயன் கிங்' திரைப்படம்DNA' படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் S. அம்பேத்குமார் வழங்க, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி – நிமிஷா சஜயன் முன்னணி வேடத்தில் நடித்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ஊடாக கடந்த இருபதாம் தேதியன்று வெளியான ‘DNA’ திரைப்படம் – விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி பயணிக்கிறது.

இதை தொடர்ந்து படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் நன்றி அறிவிப்பு விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பட தொகுப்பாளர் சபு ஜோசப் பேசுகையில், ” இந்த ஒரு தருணத்திற்காக நாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கஷ்டப்பட்டு உழைத்தோம். இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான நான்கு படங்களுக்கும் நான் தான் படத் தொகுப்பாளராக பணியாற்றினேன். இதற்கு முன்னரான படங்களில் பணியாற்றும்போது வணிகரீதியான வெற்றியை பெறும் படைப்பை வழங்க வேண்டும் என இயக்குநர் என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். அவருடைய கனவு இந்த டி என் ஏ படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

ஒளிப்பதிவாளர் பார்த்திபன் பேசுகையில், ” இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘ஒரு நாள் கூத்து’ படத்திலிருந்து அவரை பின் தொடர்கிறேன் அவர் இயக்கத்தில் வெளியான ‘ஃபர்கானா ‘படத்தின் படப்பிடிப்பின் போது இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எங்கள் இருவருக்கும் இடையே நல்லதொரு புரிதலும், நட்பும் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து’ டிஎன்ஏ ‘ படத்திற்கான வாய்ப்பை வழங்கினார் அவர் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கின்றேன் என நினைக்கிறேன்.

இந்தப் படத்தில் பணியாற்றியதற்காக அனைவரும் பாராட்டுகிறார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் பணியாற்றிய ‘பேச்சி’ எனும் முதல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்தப் படத்தின் உணர்வை சிதைக்காமல் ஒளிப்பதிவு செய்திருப்பதாக நம்புகிறேன். இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. ” என்றார்.

இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா பேசுகையில், ” இது என்னுடைய இருபது ஆண்டுகால கனவு பயணம். இந்த தருணத்திற்காக மகிழ்ச்சியுடன் காத்திருந்தேன்.‌ இதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த கதையில் இடம்பெறும் விசயங்கள் அனைத்தும் உண்மையானவை தான். கடந்த பதினைந்து ஆண்டு கால இதழியல் துறையில் பணியாற்றிய அனுபவம் தான் இந்த கதையை எழுதுவதற்கு உதவியாக இருந்தது. ‘ புனைவுகளில் உண்மைத் தன்மை அதிகம் இருந்தால்.. அந்த புனைவு வெற்றி பெறும்’ என என்னுடைய குரு சொல்லி இருக்கிறார். அந்த வகையில் இந்த கதையில் 90 சதவீதம் உண்மைத் தன்மை இருக்கிறது. பத்து சதவீதம் தான் கற்பனை கலந்திருக்கிறது.

இந்தப் படத்தில் இடம்பெறும் பாட்டி கதாபாத்திரத்தில் சாத்தூர் ஜெயலட்சுமி என்பவர் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரமும் என்னுடைய வாழ்வில் சந்தித்த பெண்மணியை முன்னுதாரணமாக கொண்டு எழுதினேன். எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை – கோஷா ஆஸ்பத்திரி – ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் – என உண்மை சம்பவங்களை தழுவித்தான் இப்படத்தின் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு அமைந்திருக்கும். இப்படத்தின் வெற்றிக்கு இத்தகைய உண்மைக்கு நெருக்கமான விசயங்களும் காரணம் என கருதுகிறேன். இதனால் எழுத்தாளர்களையும், அனுபவம் மிக்க பத்திரிக்கையாளர்களையும் இயக்குநர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

இயக்குநர் நெல்சன் தான் என்னை தேடி கண்டுபிடித்து எழுத அழைப்பு விடுத்தார்.

நான் மனதிற்கு நெருக்கமாக உணர்ந்து எழுதிய பல காட்சிகளை திரையில் அற்புதமான நடிப்பால் அதர்வாவும் , நிமிஷாவும் வெளிப்படுத்தி இருந்தார்கள். இதற்காக அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை ஏதேனும் ஒரு கதாபாத்திரம் ..மற்றொரு கதாபாத்திரத்திற்கு உதவும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருப்போம். இந்த உதவி செய்யும் மனப்பான்மை எப்போது வணிகத்தனம் மிக்கதாக மாறுகிறதோ..! அங்கு குற்ற சம்பவம் நிகழ்கிறது.

இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது. கடந்த தசாப்தங்களில் வாகனத்தில் பயணிக்கும் போது ‘லிஃப்ட் ‘ கேட்பார்கள். இன்று ‘லிஃப்ட்’ என்பது ‘பைக் டாக்சி’யாக மாறிவிட்டது.

உதவி என்பது ஆத்மார்த்தமாகவும் , நேர்மையாகவும் இருக்க வேண்டும்.‌ இந்த மனிதநேயத்தை முன்னிறுத்திய இந்த திரைப்படம் ரசிகர்களிடம் சரியான முறையில் சென்றடைந்திருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு துணையாக நின்ற ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

நடிகர் போஸ் வெங்கட் பேசுகையில், ” கேரளாவில் ஒரு படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றால்.. அங்கு ஐந்து கேரவன் இருந்தால், அதில் ஒரு கேரவன் ரைட்டர்ஸ் -காக இருக்கும். அந்த அளவில் கதாசிரியர்களுக்கு அங்கு மதிப்பு இருக்கிறது. அந்த வகையில் இந்தப் படத்தில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றிய அதிஷாவை மேடையேற்றி, பாராட்டு தெரிவித்ததற்காக இயக்குநர் நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.‌ இது ஆரோக்கியமான பயணம். என்னை பொறுத்தவரை கதாசிரியர் – வசனகர்த்தா என்பது தனி பிரிவு. அந்த பிரிவு வலிமையாக இருந்தால் ..எந்த படமும் தோற்காது. இது என்னுடைய கருத்து.

இந்தப் படத்தில் நடித்த வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் , உடன் பணியாற்றிய அனைத்து நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசுகையில், ” தமிழ் சினிமாவின் தற்போதைய சூழலில் ஒரு படத்தின் வெற்றி என்பது ஒரு இயக்குநர் நல்ல படத்தை இயக்குவதில் மட்டுமில்லை. அந்தத் திரைப்படம் சரியான தேதியில் வெளியாக வேண்டும். இது இயக்குநர்களின் கைகளில் கிடையாது. அந்தத் திரைப்படத்திற்கு சரியான விளம்பரம் கிடைக்கப் பெற வேண்டும். அதுவும் இயக்குநர்களின் கைகளில் கிடையாது. அந்தத் திரைப்படம் விநியோகஸ்தர்களின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் . அதுவும் அந்த இயக்குநரின் கைகளில் கிடையாது. அதனைத் தொடர்ந்து அந்தப் படத்திற்காக போஸ்டர் ஒட்டுவது முதல் விளம்பரப்படுத்துவது வரை உழைப்புதான் வெற்றியை தீர்மானிக்கிறது. அந்த வகையில் ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் பலர் ஒன்று கூட வேண்டியதிருக்கிறது. பலரின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்க வேண்டும். அந்த வகையில் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றிக்கு பின்னணியில் உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படம் உருவாகுவதற்கு காரணமாக இருந்த இரண்டு, மூன்று இதயங்களுக்கு இந்த தருணத்தில் என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனந்துக்கும், திவ்யாவுக்கும் இடையேயான கதை 2009 ஆம் ஆண்டிலிருந்து என்னிடம் இருக்கிறது. ஆனந்தும், திவ்யாவும் பெயர்தான் வேறு வேறு. ஆனால் இந்த கதாபாத்திரங்களை நான் என்னுடைய வாழ்வில் சந்தித்திருக்கிறேன். அவர்களின் வலியை இதில் பதிவு செய்திருக்கிறேன். இவர்களின் வாழ்வில் திருமணம் என்பது நடைபெறுமா? என என்னுடைய மனதில் எழுந்த கேள்விதான் இந்தப் படத்தின் கதையை எழுத தூண்டியது. இதன் மூலம் ஒரு வலிமையான கதை… ஒரு வலிமையான உணர்வுடன் இணைந்து சொல்லும்போது அதற்கு வெற்றி கிடைக்கிறது. இதனை இன்னும் நான் பத்து ஆண்டுகள் கழித்த பின்னர் சொன்னாலும் வெற்றியைப் பெறும். அதற்கான வரவேற்பும் , அன்பும் மக்கள் அளிப்பார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.

அந்த உண்மையான ஆனந்திற்கும், அந்த உண்மையான திவ்யாவிற்கும் இந்த திரைப்படத்தின் வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.

இந்த படத்தில் தான் முதன்முதலாக என்னுடைய கதையை தயாரிப்பாளர் அம்பேத்குமார் ..என் முன்னிலையில் மற்றவரிடம் நான் எப்படி சொன்னேனோ…எப்படி சொல்வேனோ.. அதேபோல் சொன்னார். அவருடைய கதை சொல்லும் திறமையை கண்டு வியந்தேன். அப்போது என் கதை பிடித்திருக்கிறது. புரிந்திருக்கிறது.. என்ற சந்தோஷமும் மனதில் எழுந்தது. அந்தத் தருணம் என்னால் மறக்க இயலாது.

இந்தப் படம் உருவானதற்கு காரணமாக இருந்த சுரேஷ் சந்திரா, சந்தோஷ், ஒளிப்பதிவாளர் பார்த்திபன், படத் தொகுப்பாளர் சபு ஜோசப், எழுத்தாளர் அதிஷா, இசையமைப்பாளர்கள், பின்னணி இசையமைத்த ஜிப்ரான், ஒலி கலவை பொறியாளர் தபஸ் நாயக், இணை இயக்குநர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், விஜி சந்திரசேகர், போஸ் வெங்கட், இயக்குநர் சுப்பிரமணிய சிவா, இயக்குநர் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், அதர்வா முரளி, நிமிஷா சஜயன் என நடிகர் , நடிகைகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய சூழலில் ஒரு திரைப்படத்தை காண மக்களையும், ரசிகர்களையும் திரையரங்கத்திற்கு வரவழைக்க வேண்டும் என்றால்.. பல தரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் இருக்கிறது. இதன் மூலம் நிறைய நல்ல சினிமாக்கள் வரவேண்டும் . ஆரோக்கியமான சினிமா சூழல் உருவாக வேண்டும் என்ற இலக்குடன் தான் பயணிக்கிறோம்.

சினிமா மூலம் மக்களும் பயனடைய வேண்டும். அதில் பணியாற்றிய கலைஞர்களும் பயனடைய வேண்டும். அந்த வகையில் ஒரு திரைப்படத்தின் விமர்சனமும் , பார்வையும் அமைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் படைப்பாளிகளும் , விமர்சகர்களும் கைக்குலுக்கி , ஆரோக்கியமான சினிமா சூழலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்பது குறித்து மனம் திறந்து விவாதிக்க விரும்புகிறேன். என்னுடைய திரை பயணத்தில் தொடர்ந்து ஆதரித்து வரும் ஊடகத்தினருக்கும் , ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகை நிமிஷா சஜயன் பேசுகையில், ” பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாகும் போது இந்த படம் ஹிட் ஆகுமா? ஹிட்டாகாதா? என்ற பதட்டம் இருந்து கொண்டிருக்கும். ஆனால் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி திரையிட்ட பிறகு கிடைத்த விமர்சனத்தால் படம் வெளியான தருணத்தில் நான் எந்த வித பதட்டமும் இல்லாமல் நிம்மதியாக உறங்கினேன்.
இருந்தாலும் இரண்டு மணி அளவில் இயக்குநர் நெல்சன் போன் செய்து படம் வெற்றி என சொன்ன போது மகிழ்ச்சி அடைந்தேன். இதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் என்னுடைய நடிப்பு சிறந்ததாக இருக்கிறது என்று பாராட்டினால்.. அது இயக்குநரைத் தான் சாரும். அவர் சொல்லிக் கொடுத்ததை தான் நான் செய்திருக்கிறேன்.‌ நான் எப்போதும் போல் இயக்குநரின் கலைஞராகத்தான் இருக்க விரும்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து திவ்யா கதாபாத்திரத்தை அளித்ததற்காக நன்றி.

ஒவ்வொரு படத்தில் இருந்தும் ஏதேனும் ஒரு விசயத்தை கற்றுக் கொள்கிறேன். இந்த படத்தில் நான் இரண்டு விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். ஒன்று இயக்குநர். மற்றொன்று அதர்வா.

படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய போது மனதிற்கு நெருக்கமாக இருந்த படங்களில் இதுவும் ஒன்று.‌ சக நடிகரான அதர்வா மிகுந்த திறமைசாலி. அர்ப்பணிப்பு உள்ளவர். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் சொன்னதை கச்சிதமாக செய்தார். அவருடைய ஒத்துழைப்பு மறக்க முடியாது. அவரின் ஆதரவு இல்லை என்றால் திவ்யா இல்லை.

இந்தப் படத்தில் பிறந்து நாற்பது நாட்களான குழந்தையை நடிப்பதற்காக மனமுவந்து வழங்கிய அந்தக் குழந்தையின் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும் , ஊடகத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகர் அதர்வா முரளி பேசுகையில், ” ‌ டி என் ஏ படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு விழாவில் கலந்து கொண்ட உணர்வே மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தப் படத்திற்காக உழைத்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் இந்த ஒரு தருணத்திற்காக தான்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல படத்தில் நடிக்கிறோம் என்ற உணர்வுடன் தான் கலந்து கொண்டேன். இந்தப் படம் எந்த அளவிற்கு வெற்றி பெறும்… எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் … யாருக்கு பிடிக்கும்… என்றெல்லாம் யோசிக்கவில்லை.

படப்பிடிப்பு நிறைவடையும்போது நல்ல படத்தில் நடித்து விட்டோம் என்ற உணர்வு தான் ஏற்பட்டது. இந்த படத்திற்கான பத்திரிக்கையாளர்கள் காட்சி திரையிட்ட போது..‌ படம் நிறைவடைந்த பிறகு சில நிமிடங்கள் கழித்து அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்பை தெரிவித்த போது.. உண்மையில் நெகிழ்ச்சி அடைந்தேன். ஊடகத்தினர் அனைவரும் ஊக்கமளிக்கும் வகையில் பாராட்டு தெரிவித்தனர். அது எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தது. ‘வேர்ட் ஆஃப் மவுத்’ என்று சொல்வதை இந்தப் படத்தின் வெற்றி மூலம் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.

படம் வெளியான பிறகு ரசிகர்களின் வரவேற்பை நேரில் காண்பதற்காக திரையரங்கத்திற்கு சென்றோம். அப்போது வயதான பெண்மணி ஒருவர் என்னை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு படத்தை பாராட்டினார். இந்த படத்தின் வெற்றி எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது எனச் சொன்னார். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தின் வெற்றியை அவர்கள் தங்களின் வெற்றியாக கொண்டாடினார்கள். இதை காணும் போது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது.

இந்தத் தருணத்தில் உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக என்னை நான் உணர்கிறேன்.

இயக்குநர் நெல்சன் என்னை சந்தித்து இப்படத்தை பற்றி சொன்னபோது, ‘உங்களுடைய திரையுலக பயணத்தில் நல்லதொரு திரைப்படத்தை அளிப்பேன்’ என நம்பிக்கையுடன் சொன்னார். அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றி இருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர்- ஒளிப்பதிவாளர் -இசையமைப்பாளர்கள் – பின்னணி இசையமைப்பாளர் – என தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர், நடிகைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Post navigation

Previous ஏழு திரைப்படம் – ஒரு பிரபஞ்சம் – எல்லையற்ற புராணக் கதைகள் – கொண்ட ‘மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது
Next Nagabandham extravagant set becomes talk of the town*

Related Stories

*ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!*
  • News

*ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!*

April 18, 2026
சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்*
  • News

சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்*

April 18, 2026
KRIA Hosts World IP Day 2026 Event on ‘IP & Sports’ in Chennai*
  • News

KRIA Hosts World IP Day 2026 Event on ‘IP & Sports’ in Chennai*

April 18, 2026

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

*ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!*
  • News

*ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!*

April 18, 2026
ரூம் பாய் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

ரூம் பாய் திரை விமர்சனம்

April 18, 2026
சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்*
  • News

சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்*

April 18, 2026
KRIA Hosts World IP Day 2026 Event on ‘IP & Sports’ in Chennai*
  • News

KRIA Hosts World IP Day 2026 Event on ‘IP & Sports’ in Chennai*

April 18, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.