கடையநல்லூரில் பட்டா வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற விஏஓ அதிரடி கைது

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சேர்ந்தமரம் பகுதியைச் சேர்ந்த மதன் என்பவர் தனது நிலத்திற்கு பட்டா வேண்டி இ-சேவை மையம் மூலம் விண்ணப்பம் செய்துள்ளார். பட்டா வழங்குவதற்கு நீண்ட நாள் காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விண்ணப்பதாரரான மதன் என்பவர். கிராம நிர்வாக அதிகாரியான மாடசாமியிடம். பட்டா குறித்தான விண்ணப்பத்தின் காலதாமதம் விளக்கம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு அந்த கிராம நிர்வாக அதிகாரி மாடசாமி பட்டா வழங்க வேண்டும் என்றால் ரூபாய். 10 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து. பட்டா விண்ணப்பதாரரான மதன் என்பவர் லஞ்சப் பணம் தர விருப்பம் இல்லாத நிலையில் இது தொடர்பாக தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அறிவுறுத்தலின்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை மதனிடம் கொடுத்து அனுப்பினர். பின்னார் மதன் கிராம நிர்வாக அதிகாரியான மாடசாமியை தொடர்பு கொண்டு பணம் கொடுப்பதாக கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் மாடசாமி ,மதனை கடையநல்லூர் பேருந்து நிலையம் அருகே வரவழைத்து லஞ்சப் பணத்தை வாங்கியபோது. அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கிராம நிர்வாக அதிகாரியான மாடசாமியை கையும் களவுமாக பிடித்து கைதுசெய்து வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.