Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • என் இனத்திற்கு என்று வரலாறே கிடையாது” ; ‘சல்லியர்கள்’ பட நிகழ்வில் சீமான் ஆதங்கம்*

என் இனத்திற்கு என்று வரலாறே கிடையாது” ; ‘சல்லியர்கள்’ பட நிகழ்வில் சீமான் ஆதங்கம்*

admin December 25, 2023

*”வரலாறு எப்போதும் பொய் பேசாது.. பேசக்கூடாது..” ; ‘சல்லியர்கள்’ பட நிகழ்வில் சீமானின் அறச்சீற்றம்*

*”தேன்கூட்டை தொடுவது போன்ற கவனத்துடன் ‘சல்லியர்கள்’ படத்தை எடுத்துள்ளனர்” ; சீமான் பாராட்டு*

*”’சல்லியர்கள்’ படம் பார்ப்பது நாவலை படிப்பது போன்ற உணர்வை கொடுத்தது” ; இயக்குநர் பொன்ராம்*

*“ஒரு இன அழிப்பை பற்றி படமெடுத்து தணிக்கை அதிகாரிகளிடம் சான்றிதழ் பெற்ற முதல் படம் ‘சல்லியர்கள்’; கருணாஸ் பெருமிதம்*

*”தன் மகனுக்கு வைத்துவிட்டு போகும் சொத்து பற்றி வெளிப்படையாக ‘சல்லியர்கள்’ பட விழாவில் பேசிய கருணாஸ்*

*“ஒரு பேயை போல நடித்துள்ளளார்” ; ‘சல்லியர்கள்’ பட நாயகிக்கு இயக்குநர் வ.கவுதமன் பாராட்டு*

*“தமிழர்கள் முன்னிலையில் என்னை ஒரு குற்றவாளியாக நிறுத்த முயற்சி நடக்கிறது” ; ‘சல்லியர்கள்’ நிகழ்வில் இயக்குநர் வ.கவுதமன் அதிர்ச்சி தகவல்*

*”வெளிநாட்டு போர்க்கள பட தமிழ் ரசிகர்களின் ஏக்கத்தை ‘சல்லியர்கள்’ தீர்த்து வைக்கும்” ; நடிகர் திருமுருகன்*

*”கன்னத்தில் முத்தமிட்டால் படம் போலத்தான் ‘சல்லியர்கள்’ படமும்” ; தயாரிப்பாளர் தேனப்பன் பாராட்டு*

ICW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது.

சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு கருணாஸ் மகன் நடிகர் கென் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்தப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், சிவா கிலாரி, இயக்குநர்கள் வ.கவுதமன், பொன்ராம் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் *கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது,* “சல்லியர்கள் சாமானியர்கள் அல்ல.. சகாப்தம், சரித்திரம் படைக்கப் போகிறார்கள்..” என்று கூறினார்

*தயாரிப்பாளர் சிவா கிலாரி பேசும்போது,* “எனக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தான் தெரிந்தாலும் இங்கே அண்ணன் சீமான் அமர்ந்திருப்பதால் கொஞ்சம் பயமாக இருக்கிறது. அதனால் தமிழில் தான் பேச போகிறேன். என் முதல் படம் ‘விசித்திரன்’. இரண்டாவது படம் ‘போகும் இடம் தூரம் இல்லை’. அதில் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் தயாரிப்பது எளிதான காரியம் அல்ல. படம் பற்றி கொஞ்சம் பாசிட்டிவாக எழுதினால் திரையரங்குகளுக்கு கூட்டம் வரும். திரையரங்குகளை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம்” என்று கூறினார்.

*இயக்குநர் பொன்ராம் பேசும்போது,* “இந்த விழாவிற்கு என்னை அழைப்பதற்காகவே படத்தை போட்டு காட்டினார்கள். அற்புதமான படைப்பு இந்த சல்லியர்கள். இந்த படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகைக்கு எத்தனை நாள் பயிற்சி கொடுத்தார்கள் என தெரியவில்லை, அந்த அளவிற்கு மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு மண்ணை சார்ந்த உணர்வுபூர்வமான படம் இது. படம் என்று சொல்வதை விட ஒரு நாவலை படிப்பது போன்ற உணர்வை கொடுத்தது. போர் காட்சிகளும் முறையான பயிற்சி கொடுத்து படமாக்கப்பட்டது போல் தெரிகிறது” என்று கூறினார்.

*தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன் பேசும்போது,* :இயக்குநர் கிட்டு தனது முதல் படமான மேதகு படத்தையும் சிறப்பாக எடுத்திருந்தார். ஓடிடியில் மிகப்பெரிய அளவில் ஹிட்டான படம் அது. இந்த படத்தையும் நான் பார்த்தேன். நல்ல தரமான படைப்பாக வந்திருக்கிறது. இதை ஒரு இலங்கை படம் என பாராமல் கன்னத்தில் முத்தமிட்டால் படம் போல ஒரு காதல் படமாக பாருங்கள். ஒரு இசையமைப்பாளராக கருணாஸின் மகன் கென் இன்னும் பக்குவப்பட்டவராக இருக்கிறார். அருமையாக இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்” என்று கூறினார்.

*இயக்குநர் வ.கவுதமன் பேசும்போது,* “சல்லியர்கள் திரைப்படமாவதற்கு முன்பே கிட்டு என்னிடம் இந்த கதையை கூறினார். ஒருவகையில் என்னுடைய மகன் தமிழ் கவுதமன் இந்த படத்தின் நாயகனாக நடிப்பதாக இருந்தது. ஆனால் இன்னொரு படத்தில் நடிப்பதற்கான வேறு தோற்றத்தில் இருந்ததால் உடனடியாக இதற்கு மாற முடியவில்லை. கதையாக கேட்கும் போது எனக்குள் ஒரு சிலிர்ப்பையும் படமாக பார்த்தபோது, குறிப்பாக இரண்டாம் பகுதியை பார்த்து முடித்தபோது எனக்கும் இயக்குநர் பொன்ராமுக்கும் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பெண் ஒரு பேயை போல நடித்துள்ளளார். திரையில் இன்று இருக்கும் எந்த ஒரு பெரிய நடிகையும் அந்த நடிப்பை வழங்கியிருக்க முடியுமா என தெரியவில்லை. நடிப்பால் நம் மனதை உறைய வைத்து விட்டார்.

பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே என பாரதியார் சொன்ன அந்த வார்த்தைகள் தமிழர்களுக்கு மட்டுமே பொருத்தம். அந்த கருத்தை தான் இந்த படம் சொல்லுகிறது. போராட்டத்தில் காயம்பட்டவர்களை காப்பாற்றும் மருத்துவர்களை கூட அழிக்க வேண்டும் என எதிரி நினைக்கிறான்.. அதுதான் இந்த படத்தின் கருப்பொருள்.. காப்பாற்றுபவன் கடவுளுக்கு சமமானவன். அந்த கடவுளையே அழிக்க நினைக்கிறான் எதிரியான சிங்களவன் ஆனால் அவனையும் காப்பாற்ற நினைக்கும் இனம் தான் நம் தமிழினம். மேதகு பிரபாகரனால் வளர்க்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அது சாத்தியம். இந்த படைப்பை தமிழினம் உச்சி முகர்ந்து கொண்டாட வேண்டும்

பேசாப்பொருளை பேசுவது தான் படைப்புக்கு பேரழகு. அதை இந்த படம் பேசுகிறது. 15 வருடங்களுக்கு முன்பே ‘சந்தனக்காடு’ தொடர் மூலமாக வீரப்பன் வாழ்க்கையை எந்த சமரசமும் இன்றி அரசுகளின் அச்சுறுத்தலை எல்லாம் எதிர்கொண்டு நிஜத்தை மட்டுமே துணிச்சலாக கூறியிருந்தேன். அது இன்றும் பேசப்படுகிறது. அதே சமயம் இன்று வீரப்பனை பற்றி பல பொய்யும் புனைக் கதைகளும் சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் இன்றும் கூட அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு கொடுக்க இங்கு யாருக்கும் தோன்றவில்லை. வீரம் செறிந்த ஈழப் போராட்டத்தை ஒரு படமாக எடுப்பதற்கு முன்னோட்டமாகவே சந்தனக்காடு தொடரை எடுத்தேன். சந்தனக்காடு போலவே இந்த உலகத்தை முழுக்க அதிர வைக்க இன்னும் படைப்புகள் ஒரு நாள் வரும். அதை செய்யாமல் நான் ஓயமாட்டேன்.

இன்றைய சூழலில் ஒரு குறிப்பிட்ட சதவீத தமிழர்கள் முன்னிலையில் என்னை ஒரு குற்றவாளியாக நிறுத்தும் ஒரு முயற்சி நடந்து கொண்டிருக்கிறது எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. சண்டை போட்டவன், கொன்று குவித்த சிங்களவன் இன்றும் ஒற்றுமையாக இருக்கிறான்.. ஆனால் சிதறி ஓடிய நம் கூட்டம் இன்னும் தங்களுக்குள் பகை வளர்த்து பிரிந்தே கிடக்கிறது. பொய்யை உண்மையாக்குகிற ஒரு சூழலை இனி தமிழினம் அனுமதிக்க கூடாது” என்று கூறினார்.

*நடிகர் திருமுருகன் பேசும்போது,* “நிறைய படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் எனது மனதுக்கு நிறைவான படம். தம்பி கிட்டு ஆரம்பத்தில் எடுத்த குறும்படத்தில் நான் தான் நடித்தேன். ஆனால் மேதகு படத்தில் நடிக்க முடியவில்லை. கிட்டு தமிழ் சமூகத்திற்கு ஒரு முக்கியமான படைப்பாளி. மேதகு படத்தை விட சல்லியர்கள் மிகப்பெரிய வெற்றி பெறும். சல்லியர்கள் யுத்த களத்தில் நடக்கின்ற ஒரு படம். ஆனால் பார்வையாளர்களை பொருத்தவரை அது ஒரு ஹீரோ வில்லன் படம் தான். முழு பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படம். ஒரு அரக்க கூட்டத்திற்கும் அறத்துடன் நிற்கும் கூட்டத்திற்கும் இடையில் நடக்கிற கதை இது. வெகு ஜன ரசிகராக நீங்கள் இருந்தால் 100% இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். தமிழ் உணர்வாளர்களாக இருந்தால் ஆயிரம் முறை உங்களுக்கு பிடிக்கும். இந்த படைப்பை மிகப்பெரிய அளவில் கொண்டு வந்ததற்கு காரணம் கருணாஸ் அண்ணன் தான். இந்த படம் அவருக்கு நிச்சயம் பெரிய வெற்றியை கொடுக்கும். யுத்த களத்தை மையப்படுத்திய வெளிநாட்டு படங்களை பார்க்கும் நம்மவர்களுக்கு ஏன் நம்மூரில் இப்படி ஒரு படம் வருவதில்லை என்கிற ஏக்கம் இருக்கும். அப்படி நம் ஊரில் போர்க்களத்தை மையப்படுத்தி வந்த படங்களில் இந்தப் படம் தான் ஆகச்சிறந்த படமாக இருக்கும்” என்று கூறினார்.

நார்வே நாட்டில் *நார்வே திரைப்பட திருவிழாவை பல வருடங்களாக நடத்தி வரும் வசீகரன் பேசும்போது,* “அகிம்சை ஏந்தி போராடிய எங்கள் இனம் ஆயுதம் ஏந்தி போராடிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இன்று அறிவாயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம். கடந்த 14 ஆண்டுகளில் எம் இனம் விழுந்து கிடந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சினிமா என்னும் ஊடகத்தின் ஊடாக சரியான திரைப்படங்கள் வரவேண்டும் என்ற 10 நோக்கங்களில் ஒரு நோக்கத்திற்காக நார்வே திரைப்பட விழா 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து தமிழர்களின் கலை, பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் மற்றும் வலிகளை பேசுகின்ற திரைப்படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தமிழர்களின் அடையாளம் என்றால் அந்த சினிமா எப்படி இருக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக அப்படிப்பட்ட படங்களை தான் கடந்த 14 வருடங்களாக நாங்கள் தேர்வு செய்து வருகிறோம். அந்த வகையில் தம்பி கிட்டு மேதகு திரைப்படத்தை கலைக்கூத்து வழியாக அழகான கதை நகர்த்தல் மூலம் சொல்லி இருந்தார். தமிழகமாக இருந்தாலும் தமிழீழமாக இருந்தாலும் போதை வஸ்து, வன்முறை கலாச்சாரம் இவற்றை விதைக்கும் விதமாகத்தான் படங்கள் வருகின்றன என்பது வருத்தமாக இருக்கிறது, சல்லியர்கள் போன்ற படங்கள் தமிழகத்திலும் சரி, வெளிநாட்டிலும் சரி வெளியாவதற்கு நிறைய போராட வேண்டி இருக்கிறது. அதையெல்லாம் தாண்டி இந்த படத்தை வெளிக்கொண்டு வருவோம்” என்று கூறினார்.

*நடிகர் சேது கருணாஸ் பேசும்போது,* “இந்த படத்தை எடுக்க வேண்டும் என கிட்டு முடிவு செய்தபோது என்னிடம் பரமக்குடியை சேர்ந்த இராவணனை அழைத்து வந்தார். பெரிய வசதி வாய்ப்புகள் எல்லாம் இல்லாதவர். ஆனால் இந்த படம் எடுப்பதற்கு முன்பணமாக 10 லட்சம் ரூபாய் கொடுத்து துவக்கி வைத்தவர் இவர்தான். இப்படி சாதாரண கிராமத்தில் இருக்கும் ஒருவருக்கே இந்த உணர்வு இருக்கும்போது, சினிமாவில் இருக்கும் எனக்கு இந்த மொழியால், இனத்தால் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஏதாவது செய்யக்கூடாதா என்கிற வெறி ஏற்பட்டது. தமிழர்களின் மறைக்கப்பட்ட வரலாறுகளை எடுத்துச் சொல்லுங்கள். அதற்கு நான் உங்களுடன் உறுதுணையாக நிற்கிறேன் என்று சொல்லி ஒரு உத்வேகத்தை கொடுத்து இந்த நிமிடம் வரை எனக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய தம்பி கரிகாலனுக்கு இந்த நேரத்தில் நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கிட்டு இயக்கிய ‘மேதகு’ படத்தை பார்த்து விட்டுத்தான் இந்த படம் பண்ணும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இதையும் சரியாக பண்ணியிருக்கிறார். அவர் என்ன கேட்டாரோ ஒரு தயாரிப்பாளராக அதை சிறப்பாக நான் செய்து கொடுத்திருக்கிறேன். அவரும் இந்த படத்திற்கு நேர்மையாக, உண்மையாக உழைத்திருக்கிறார், பிப்ரவரி மாதத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறோம். தமிழ் சினிமாவில் ஒரு பிரச்சனைக்குரிய, ஒரு இன அழிப்பை பற்றிய வரலாற்று பதிவாக பண்ண வேண்டும் என்று சொல்லி, அதை படமாக எடுத்து தணிக்கை அதிகாரிகளிடம் சான்றிதழ் பெற்ற முதல் படம் எனக்குத் தெரிந்து இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

இந்த படத்தை எடுத்ததற்கு இன்னொரு காரணம் என்னவென்றால், என்னுடைய மகன் கென் தான். இந்த படத்திற்கு அவன் தான் இசையமைத்திருக்கிறான். ஆனால் என் பையன் என்னிடம் கேட்ட கேள்வி என்னவென்றால் இவ்வளவு வறண்ட, இவ்வளவு சீரியஸான, இந்த மாதிரியான ஒரு படத்தை இப்போ கஷ்டப்படுகிற நேரத்தில் எதற்காக காசு செலவு பண்ணி எடுக்கிறீர்கள் என்று கேட்டான். காதலிக்கும்போது கூட மண், இனம், மொழி என்று தான் பேசுகிறார்கள், இதையெல்லாம் யார் இந்த காலத்தில் ஏற்றுக்கொள்வார்கள் என்றான்.

அவனிடம் இது நடந்த காலகட்டம் அப்போது.. போராளிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.. நானும் நிறைய பேரை பார்த்திருக்கிறேன்.. ஆனால் அந்த காதலில் கூட அவர்களிடம் ஒழுக்கமும் அறமும் இருந்தது. அது உங்களுக்கு புரியவில்லை. 21 வயது பையன் உனக்கே புரியவில்லை என்றால் அடுத்த தலைமுறைக்கு இது சுத்தமாக தெரியாமல் போய்விடுமே என்பதற்காகத்தான் இந்த படத்தை எடுத்தேன்.. அப்பா உனக்காக காசு பணம் நிறைய சேர்த்து வைக்கவில்லை என வருத்தப்படாதே.. எதிர்காலத்தில் நடிகராகவோ, ஏதோ ஒரு இடத்தை பிடித்து விடுவாய். அப்படியே ஆனாலும் கூட வரக்கூடிய காலங்களில் நடிகர் கருணாஸின் பையன், எம்எல்ஏ கருணாஸின் பையன் என்று சொல்வதை விட சல்லியர்கள் என ஒரு படத்தை எடுத்தானே அவனுடைய பிள்ளை என்கிற ஒரு அடையாளத்தை உனக்கு நான் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதற்காத்தான் இந்த படத்தை எடுத்தேன். இதுதான் நான் உனக்கு கொடுக்கும் சொத்து என்றேன். உண்மையிலேயே அந்த உணர்வில் தான் இந்த படத்தை எடுத்திருக்கிறேன். எல்லோரும் நமக்கென்ன என்று போய்விட்டால் வேறு யார் தான் செய்வது? நம் தமிழகம், நம்ம ஊர்.. இந்த ஊரில் எல்லோரும் வாழலாம்.. ஆனால் நம்மை ஆள்பவன் தமிழனாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

*நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசும்போது,* “சல்லியர்கள் என்பதை ஒரு படம் என்று சொல்வது அவ்வளவு பொருத்தமாக இருக்காது. அது ஒரு ஆவணம்.. வேரை இழந்த மரமும் வரலாற்றை மறந்துவிட்ட இனமும் வாழாது.. தன் இன வரலாறு தெரியாத எந்த இனமும் எழுச்சி பெற முடியாது.. என் இனத்திற்கு என்று வரலாறே கிடையாது.. ஏனென்றால் வரலாற்றை படைப்பவனுக்கு வரலாற்றை எழுத நேரம் கிடைக்காது. தமிழர் இன வரலாறை நீங்கள் பார்த்துக் கொண்டே வந்தால் எதிரிகளால் வீழ்த்தப்பட்டதே கிடையாது. உடன்பிறந்த ரத்த சொந்தங்களின் துரோகங்களால் தான் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள் இறுதியாக எங்கள் தலைவர் உட்பட.

கற்றறிவை விட பட்டறிவு மேலானது. அதனால் தான் என் தலைவர் மேதகு பிரபாகரன் எல்லாவற்றையும் ஆவணப்படுத்தினார். ஆனால் இறுதிப் போரில் அவற்றில் பாதிக்கு மேல் சிதைந்து அழிந்து விட்டது. அவருக்கு ஒரு பேரார்வம் இருந்தது. சிண்ட்லர்ஸ் லிஸ்ட் ,போல பிரேவ் ஹார்ட் போல, டென் கமான்மெண்ட்ஸ் போல நம்முடைய விடுதலைப் போராட்ட வரலாறும் படமாக வர வேண்டும் என்று பெரிய அளவில் ஆர்வப்பட்டார். அதற்காகத்தான் அவர் ஆணிவேர் படத்தை தயாரித்தார். தலைவரின் படத்தை போஸ்டர்களில் அடித்து ஒட்டினாலே இங்குள்ள போலீசார் கிழித்தெறிகின்றனர். இங்குள்ள அரசியல் சூழல் அப்படி இருக்கிறது. இதை மாற்ற வேண்டும். அதன் பின்னர் தம்பி கவுதமன் சொன்னது போல அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும்.

விழித்துக்கொண்ட வீர மறவர்களின் வரலாறுதான் தமிழர்களுடைய வீர காவிய வரலாறு. அதில் ஒரு துளி தான் இந்த ‘சல்லியர்கள்’ படம். மருத்துவம் என்பதே மகத்துவம். தன் உயிரை எடுக்க வந்த ஒருவனுக்கும் உயிரைக் கொடுக்கின்ற அறம் சார்ந்த மறவர்கள் நம் தமிழர்கள் என்பதை இந்த படம் உணர்த்துகிறது. இந்த படம் இன்னும் பிரம்மாண்டமாக கூட எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த உணர்வை சிதைக்காமல் நமக்குள் கடத்தி விட்டார் கிட்டு. அதில் பிரம்மாண்டம் எதுவும் தேவைப்படவில்லை.

என் தம்பி இயக்குநர் கிட்டுவிடம் குறும்படம் எடுக்கும் காலத்தில் இருந்தே படைப்பாற்றல், எழுத்தாற்றல் நிறைய இருக்கிறது. படத்தில் வசனங்கள் நன்றாகவே இருக்கிறது. காட்சி அமைப்புகளில் எதுவும் பொய் சொல்லி விட முடியாது. இலக்கியம் பொய் பேசும்.. புராணம் பொய் பேசும்.. ஆனால் வரலாறு எப்போதும் பொய் பேசாது.. பேசக்கூடாது. பகைவனாக இருந்தாலும் அன்பு காட்டுங்கள் என்பதை தான் இந்த படம் பேசுகிறது. மருத்துவ பெண் நந்தினியாக நடித்துள்ளவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். புதிதாக வந்துள்ளவர் என்று சொல்லவே முடியாது. அந்த நாட்டில், அந்த காட்டில் என்ன முகத்தைப் பார்த்தேனோ, அதேபோன்ற ஒரு முகம்.. அதேபோன்ற ஒரு போராளியின் முகம்தான் மகேந்திரன்.. கருணாஸ் நடித்துள்ள அந்தப்பகுதி இந்த படத்தின் இதயம் போன்றது.

இதை ஒரு படம் என்று சொல்லாமல் ஒரு வரலாற்று பதிவு என்று தான் உலக தமிழ் சொந்தங்கள் வரவேற்க வேண்டும். நம் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும். வரலாறு தான் எல்லா தேசிய இனங்களுக்கும் வழிகாட்டி இருக்கிறது. நம் குழந்தைகளுக்கு இரண்டு மணி நேரம் நாம் காட்டுகின்ற ஒரு பாடமாக இதை செய்ய வேண்டும்.

அயோத்தி போன்ற படங்களுக்கு நாங்கள் குரல் கொடுப்பது அதை மக்கள் சாதாரணமாக கடந்து போய் விடக்கூடாது என்பதற்காகத்தான். அதனால் இந்த படத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். சமீபத்தில் வெளியான சித்தா படம் சிறப்பாக இருந்தது. பார்க்கிங் படம் கூட நன்றாக இருந்தது என என்னிடம் கூறி பார்க்க சொன்னார்கள்.. வெள்ளத்தில் சிக்கிக் கிடந்த எங்களால் எப்படி படம் பார்க்க முடியும் ? எங்களது படமே பெரிய படமாக போய்விட்டது.

இந்த நாட்டை ஐந்து ஆறு முறை ஆண்ட நிர்வாக தலைவர்களைப் போல என் தலைவனுக்கு ஒரு ஐந்து ஆண்டுகள் மட்டும் இருந்திருந்தால் உலகத்தில் தலை சிறந்த வல்லாதிக்க நாடாக எங்கள் தமிழ் ஈழ நாட்டை கொண்டு போய் சேர்த்திருப்பார். ஆனால் கடைசி வரை அவர் போர்க்களத்தில் போராளி தலைவனாகவே நிற்க வேண்டியதாக போய்விட்டது. விடுதலைப் போராட்ட வீரர்களை பெருமைப்படுத்துவது போன்று, எங்களது மருத்துவ பிள்ளைகளை பெருமைப்படுத்துவது போன்று ஒரு தேன்கூட்டை தொடுவது போன்று கவனமாக இந்த பதிவை கையாண்டு இருக்கிறார்கள் கருணாஸும் இயக்குநர் கிட்டுவும்..” என்று கூறினார்.

*தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்*

தயாரிப்பு ; சேது கருணாஸ் & கரிகாலன்

இணை தயாரிப்பு ; சாத்தனூர் சிவா

இயக்கம் ; கிட்டு

ஒளிப்பதிவு ; சிபி சதாசிவம்

இசை , கென்-ஈஸ்வர்

படத்தொகுப்பு ; சி,எம் இளங்கோவன்

கலை இயக்குனர் ; முஜிபூர் ரஹ்மான்

ஆக்சன் ; எஸ்.ஆர்.சரவணன்

விஎப்எக்ஸ் ; விக்னேஷ்

மக்கள் தொடர்பு ; A.ஜான்

Post navigation

Previous இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த மார்கழியில் மக்களிசை 23.12.23 KGF -ல் உள்ள நகராட்சி மைதானம், ராபர்ட்சன்பேட்டையில் முதல் நிகழ்ச்சியாக கோலாகலமாக துவங்கியது .
Next Alp Music Logo Unveiled by Justin Samuel James, MD & CEO and Malcolm, COO of the company at Sholinganallur, Chennai.

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

India’s First-Ever Pan India Reality Show ‘Big Pitchure’ Launched — 
  • News

India’s First-Ever Pan India Reality Show ‘Big Pitchure’ Launched — 

April 17, 2026
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “மீசைய முறுக்கு-2” படத்தின் இரண்டாவது சிங்கிள் “பப்பாளி பழமே” பாடல் வெளியானது.*
  • News

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “மீசைய முறுக்கு-2” படத்தின் இரண்டாவது சிங்கிள் “பப்பாளி பழமே” பாடல் வெளியானது.*

April 16, 2026
Pappaali Pazhamey second single from Meesaya Murukku 2 strikes a chord yet again* 
  • News

Pappaali Pazhamey second single from Meesaya Murukku 2 strikes a chord yet again* 

April 16, 2026
*Yeri Vanthom Ayyappa 1st single from Yogi Babu’s next release Sannidhanam (P.O), strikes a spiritual chord*
  • News

*Yeri Vanthom Ayyappa 1st single from Yogi Babu’s next release Sannidhanam (P.O), strikes a spiritual chord*

April 16, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.