* அரிசி, சமையல் எண்ணெய், பிஸ்கட், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு சென்னை பெருநகர மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது
சென்னை,டிசம்பர் 21, 2023:வரலாறு காணாத கன மழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் 1000 பேருக்கு நிவாரண உதவிகளை சென்னை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி வழங்கியது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பேரிடர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை சென்னை பெருநகர மாநகராட்சியிடம் பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி வழங்கியது.
இதற்கான நிகழ்ச்சியில் பேசிய சென்னை, பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியின் இயக்குனர் சபரி நாயர் கூறுகையில், கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு உதவிட அனைவரும் ஒருங்கிணையுமாறு இந்தத் தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன். இந்த நேரத்தில் அவர்களுக்கு தேவையான அடிப்படைத் உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு சுமார் 1000 பேருக்கு தேவையான உணவு பொருட்களை எங்கள் பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி சார்பில் வழங்கி இருக்கிறோம். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களின் நிலையை உணர்ந்து, சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள உதவிகளை வழங்குவதில் இன்றியமையாத இந்த நிவாரண நடவடிக்கைகளுக்கு தாராளமாக மற்றவர்களும் பங்களிக்குமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிவாரண பொருட்கள் அனைத்தும் பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி சார்பில் சென்னை பெருமாநகராட்சியிடம் ரிப்பன் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் இந்த மனிதநேய உதவிகளை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.