திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்
உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. முதல் பிரம்மோற்சவமான வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில் இரண்டாவது பிரம்மோற்சவமான நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது.
9 நாட்கள் பிரம்மோற்சவம்


மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இதுபோன்று ஒரே ஆண்டில் இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறும். 9 நாட்கஙள் நடை பெறும் இந்த பிரம்மோற்சவம் வரும் 23ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. பிரம்மோற்சவ நாட்களில் காலை மாலை என இரண்டு வேலையும் மலையப்ப சாமி ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.
அந்த வகையில் இன்று நவராத்திரி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை நடைபெறுகிறது. வழக்கமாக இரவு 7 மணிக்கு மேல்தான் கருட சேவை நடைபெறும். ஆனால் பக்தர்களின் வசதிக்காக இம்முறை சூரிய அஸ்தமனம் முடிந்ததும் கருட சேவையை தொடங்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்து. இதற்கு கோவில் நிர்வாகமும் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து இன்று மாலை 6.30 மணிக்கு கருட சேவை தொடங்க உள்ளது.
தங்க கருட சேவை தரிசனம் செய்வதற்காக திருமலையில் காலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்கள் திருமலைக்கு வர வசதியாக கீழ் திருப்பதியில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. மாடவீதிகளில் முன்னதாகவே இடம் பிடித்து பக்தர்கள் காத்திருக்கின்றனர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால் உள்ளிட்டவற்றை வழங்க தேவஸ்தான நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.