தலைக்கூத்தல் திரை விமர்சனம்

தலைக்கூத்தல் திரை விமர்சனம்

ஒய் நாட் ஸ்டுடியோஸ் எஸ். சஷிகாந்த் தயாரிப்பில், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தலைக்கூத்தல். கோமா நிலையில் படுக்கையில் இருக்கும் தன் தந்தை முத்து (கலைச் செல்வன்), ஒரு நாள் கண் விழிப்பார் என்ற உறுதியான நம்பிக்கையுடன் அவரைக் கண்போல் காத்துப் பராமரிக்கிறார் மகன் பழனி (சமுத்திரக்கனி). ஆனால், அவர் மனைவி (வசுந்தரா), மாமனார், மைத்துனர் ஆகியோர் பழனியின் நம்பிக்கை கண்மூடித்தனமானது என அழுத்தம் கொடுக்கின்றனர். ‘தலைக்கூத்தல்’ முறையில் அவரைக் கருணைக் கொலை செய்ய வற்புறுத்துகிறார்கள். அதற்கு இணங்காத பழனியின் குடும்பச் சூழ்நிலை, கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க, அவர் என்ன முடிவு எடுத்தார் என்பதும் தன் அப்பா உயிரை பிடித்து வைத்திருக்க காரணம் , தான் இளம் வயதில் காதலித்த பெண்ணை சாவதற்குள் எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்ற இவரின் கடைசி ஆசையும் நிறைவேறியதா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை….

கட்டிட தொழிலாளியான சமுத்திரகனி விபத்தால் தந்தை கலைச்செல்வன் சுயநினைவு இழந்து எழுந்து நடமாட முடியாத நிலையில் இருக்க, அவரை கவனித்துக் கொள்ள தன் தொழிலை விட்டு விட்டு தனியார் ஏடிஎம் வங்கியில் காவலாளியாக வேலை செய்து கொண்டு மனைவி வசுந்தரா மற்றும் மகளுடன் வாழ்கிறார். தந்தையின் மருத்தவ செலவிற்கு கடன் வாங்கி வட்டி கட்ட முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் சமுத்திரகனிக்கு மனைவி வசுந்தரா தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து குடும்பத்தை நடத்துகிறார். உடல்நலம்குன்றியிருக்கும் தந்தையை தலைக்கூத்தல் முறையில் கொலை செய்துமாறு மனைவி வசுந்தராவும், அவளுடைய குடும்பத்தாரும் சமுத்திரகனியை நிர்பந்திக்கிறார்கள். இதற்கு துளியும் உடன்படாமல் சமுத்திரகனி பிடிவாதம் பிடித்து தந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறார். கடன் கொடுத்தவர் வீட்டின் பத்திரத்தை வைத்து விற்க முயல இதனால் சமுத்திரகனிக்கும், வசுந்தராவிற்கும் சண்டை ஏற்பட்டு, தன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விடுகிறார் வசுந்தரா.

சமுத்திரக்கனி. தந்தைக்கு பாசமான மகனாக, மனைவி அவமானப்படுத்துவதை தாங்கும் அமைதியான கணவனாக, மகளை அரவணைக்கும் அன்பான தந்தையாக வாழ்ந்து விருதுக்குரிய நடிப்பை கொடுத்து இருக்கிறார். வசுந்தரா யதார்த்தத்தை கண்முன் நிறுத்துகிறார். கணவனை அவசரப்பட்டு அடிப்பதும் பிறகு கையை பிசைந்து நிற்பதும் கணவனின் அடிக்கு பயந்து ஓடுவதும் ரகளை. பிளாஷ்பேக்கில் வரும் கதிர் கெட்டப், ஹேர் ஸ்டைல், நடிப்பு என எல்லா விதத்திலும் ஆச்சரியப்படுத்துகிறார். அவருடைய காதலியாக வரும் கத்தா நந்தி சிறிது நேரமே வந்தாலும் மனதில் ஒட்டிக் கொள்கிறார். ஆடுகளம் முருகதாஸ், வையாபுரி ஆகியோரின் வேடங்கள் கவனிக்க வைக்கிறது.

படம் முழுக்க படுத்துக்கொண்டே மனதை உருக்குகிறார் கலைச் செல்வன் மனதை வருடும் மென்மையான இசையை கொடுத்திருக்கிறார் இசை அமைப்பாளர் கண்ணன் நாராயணன். கிராமத்து அழகை மிக அழகாக படம் பிடித்திருக்கிறார் மார்டின் டான் ராஜ். குறைவான கதாபாத்திரத்தை கொண்டு மனதை தொடும் அழுத்தமான திரைபபடத்தினை கொடுத்துள்ளார் இயக்குனர் ஜெய்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.கிராமத்து நடைமுறைகளை நம் கண் முன்னே நிறுத்தி அனைத்து காட்சிக்கோணங்களையும் திறம்பட கொடுத்து அசத்தியுள்ளாhர் ஒளிப்பதிவாளர் மார்ட்டின் டான்ராஜ்.

admin