விட்னஸ் திரை விமர்சனம் !!

விட்னஸ் திரை விமர்சனம் !!

கல்லூரி மாணவர் பார்த்திபன் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் போது விசவாயு தாக்கி உயிரிழந்து விடுகிறார். துப்புரவுப் பணியாளரான அவரது அம்மா ரோகிணி, சட்டவிரோதமாக தனது மகனை அந்த பணியில் ஈடுபடுத்தி கொன்றவர்களுக்கு சட்ட ரீதியாக தண்டனை பெற்றுக்கொடுக்க முடிவு செய்கிறார். அவருக்கு உதவியாக தொழிற்சங்க தலைவர் மற்றும் ஷ்ரத்த ஸ்ரீகாந்த் துணை நிற்க, அவர்களது சட்ட போராட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை எதார்த்தமான முறையில் சொல்லியிருப்பது தான் ‘விட்னஸ்’.

நாயகி ஷர்த்தா ஸ்ரீநாத் மிக யதார்த்தமாக நடித்து கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறார். தன்னை சீண்டுபவர்களுக்கு பதிலடி கொடுத்தும் கைதட்டல் பெறுகிறார். தாய் கதாபாத்திரத்தில் வரும் ரோகிணி மகனை இழந்து தவிப்பது, உழைப்புக்கேற்ற ஊதியம் கேட்டு போராடுவது என்று நடிப்பில் பல இடங்களில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தி கேரக்டருக்கு அழகு சேர்த்துள்ளார். வக்கீலாக வரும் சண்முகராஜன் கோர்ட்டில் பேசும் வசனங்கள் ஈர்க்கின்றன. நீச்சல் பயிற்சியாளராக வரும் தமிழரசன் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சிறப்பான நடிப்பை வழங்கி உள்ளார். அநீதியை எதிர்த்து போராடுபவராக வரும் ஜி. செல்வா, அவருடைய மனைவியாக வரும் சுபத்ரா ராபர்ட், அரசு அதிகாரியாக வரும் அழகம் பெருமாள், மாமாவாக வரும் வினோத் சாகர், குடியிருப்பு சங்க தலைவராக வரும் ஸ்ரீநாத் என அனைவரும் திரைக்கதைக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். ரமேஷ் தமிழ் மணி பின்னணி இசை காட்சிகளோடு ஒன்றி இருக்கிறது. ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதை பிறகு வேகம் எடுக்கிறது. ஒரு சமூக அவலத்தை வணிகத்தனம் இல்லாமல் அழுத்தமான கதை, கதாபாத்திரங்களோடு மனதை தொடும்படி படமாக்கியுள்ள இயக்குனர் தீபக்கை பாராட்டலாம்.

மக்களின் போராட்டம் அல்லது சட்ட ரீதியிலான போராட்டம், எதுவாக இருந்தாலும் அரசு எந்திரத்தை எதிர்த்தால் இறுதியில் தீர்ப்பு என்பது அவர்கள் பக்கம் தான் இருக்கும். காரணம் நீதித்துறையே அரசு எந்திரத்தின் ஒரு பாகமாகவே செயல்படுகிறது என்பதை மிக தெளிவாக சொல்லியிருக்கும் இப்படம், குப்பைகளை அகற்றி சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்கும் துப்புறவுத்தொழிலாளிகளின் அவல நிலையை மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறது.

மனித கழிவுகளை மனிதன் சுத்தம் செய்வதற்கு அரசு தடை விதித்தாலும், இன்னமும் நம் நாட்டின் பல பகுதிகளில் அந்த அவலங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதோடு, அதன் மூலம் பல அப்பாவி மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருவதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது முத்துவேல் மற்றும் ஜேபி சாணக்யாவின் திரைக்கதை.

எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் தீபக், சாமாணிய மக்களின் வாழ்க்கையை சினிமாத்தனம் இல்லாமல் சாதாரணமாக நகர்த்தி சென்றாலும், கதை சொல்லும் கருத்து மக்கள் மனதில் மிக ஆழமாக பதியும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.