காரி திரை விமர்சனம்

காரி திரை விமர்சனம்

காரி திரைப்படத்தில் சசிகுமார், அறிமுக நாயகி பார்வதி, ஆடுகளம் நரேன், கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிப்பில், புதுமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கியுள்ள திரைப்படம் காரி. சர்தார் திரைப்படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
நம்பிக்கை இருந்தால் எதுவும் நடக்கும், காரணம் இல்லாமல் இங்கு எதுவும் நடப்பதில்லை என்ற ஒற்றை வரி கதைக்கு பின்னால், ஏராளமான சம்பவங்களையும், சின்ன சின்ன கருத்துக்களையும் இணைத்து காரி திரைப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் இரண்டு கிராமங்களுக்கிடையே கோயிலை யாருக்கு நிர்வகிப்பது என்ற போட்டி வருகிறது. அதை ஜல்லிக்கட்டு நடத்தி முடிவு செய்வது என தீர்மானிக்கின்றனர். ஆனால் பல வருடங்களுக்கு முன் ஊரை விட்டு சென்ற சசிகுமாரின் குடும்பம் வந்தால்தான் அந்த ஜல்லிக்கட்டை நடத்த முடியும். அவர் வந்தாரா? கோயில் யாருக்கு சென்றது? இதற்கிடையே சின்ன அரசியல் என காட்சிகளை அடுத்தடுத்து நகர்த்தியுள்ளார் இயக்குனர் ஹேமந்த்.

படத்தின் தொடக்கத்தில் ராமநாதபுரம் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தை அரசாங்கம் குப்பை கொட்டுவதற்கான இடமாக தேர்வு செய்கிறது, இதற்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மறுபுறம் சென்னையில் சசிகுமார் மற்றும் அவரது அப்பா நரேன் ரேஸ் குதிரைகளை பராமரித்து வருகின்றனர். இன்னொரு புறம் பிரபலமான விலங்குகளை விலைக்கு வாங்கி அதனை ருசித்து சாப்பிடுகிறார் கார்ப்பரேட் வில்லன். இந்த மூன்று கதையும் ஒரு இடத்தில் சேர்கிறது, பின்பு என்ன ஆனது என்பதே காரி படத்தின் கதை. சசிகுமாருக்கு என்று எழுதப்பட்ட கதையாக காரி படம் உள்ளது, நீண்ட நாட்களுக்கு பிறகு தனது நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்த சசிகுமார்க்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை கச்சிதமாகவும் பயன்படுத்தி உள்ளார். நகைச்சுவைக்கு இடமில்லாத இந்த கதாபாத்திரத்தில் எமோஷனை அள்ளிக் கொடுத்துள்ளார்.

காரி படத்தில் எமோஷனல் காட்சிகள் நன்றாக ஒர்க் ஆகி இருந்தது, குறிப்பாக காளை மாடை வைத்து வரும் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக இருந்தது. கிளைமாக்ஸ்ல் வரும் ஜல்லிக்கட்டு சம்பந்தமான சீன்களும் சிறப்பாக படமாக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் வெளியான பேட்டைக்காலி வெப் சீரிசை அதிகம் நினைவு படுத்தியது காரி. கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருந்த இந்த கதையில் பார்வதி அருண் சிறப்பாகவே நடித்திருந்தார், அவருடைய அப்பாவாக பாலாஜி சக்திவேல் அந்த கதாபாத்திரத்திலேயே வாழ்ந்துள்ளார்.

மண்வாசம் மாறாத அழகான கிராமத்து கதையை சிறப்பாகவே கையாண்டு உள்ளார் இயக்குனர் ஹேமந்த். இமானின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது. கேமரா ஒர்க், எடிட்டிங் என அனைத்தும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. வசனங்கள் காரி படத்தில் புதுமையாகவும் சிறப்பாகவும் எழுதப்பட்டிருந்தது.

admin