இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை காண கிரிகெட் ரசிகர்கள் பாய், தலையணையுடன் சென்னை மெரினா, பெசன்ட் நகர் பீச்சிற்கு படையெடுத்துள்ளனர்.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது ஆவலை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பொது இடங்களில் ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை மெரினா கடற்கரை மட்டும் பெசன்ட் நகர் கடற்கரையில் இறுதிப்போட்டியைக் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக, பெசன்ட் நகர் மற்றும் சென்னை மெரினா கடற்கரையில், விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே உள்ள பகுதியில், 18 அடி உயரம், 32 அடி அகலம் கொண்ட மிகப்பெரிய எல்இடி திரை இதற்காக அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 110 மீட்டர் தூரத்திலிருந்து வரை ரசிகர்கள் அமர்ந்து பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் போட்டியின்போது, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், பெசன்ட் நகர் கடற்கரையிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த போட்டியைக் காண சென்னை ரசிகர்கள் பாய், தலையணையுடன் மெரினாவுக்கும், பெசன்ட் நகருக்கும் படையெடுத்துள்ளனர். இதன் காரணமாக இரு இடங்களிலும் மக்கள் வெள்ளம் போல திரண்டுள்ளனர்.