வாய் பேச இயலாத ஹீரோ அருள்நிதி சிவில் என்ஜினீயர். அவருடைய அப்பா பாரதிராஜா கட்டிட சூப்பர்வைசராக இருக்கிறார். அருள்நிதியின் முறைப் பெண் ஆத்மிகா. பில்டிங் வேலை நடக்கும் இடத்தில் ஏற்படும் விபத்தில் பாரதிராஜாவுக்கு தலையில் அடிபடுகிறது. அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பற்ற குடும்பம் போராடுகிறது.
அங்கு லிஃப்ட் ஆபரேட்டர் ஆறுமுகத்துடன் (அஷ்ரஃப்) திருவுக்கு மோதல் ஏற்படுகிறது. ஆறுமுகமும் அங்கு பணியாற்றும் சிலரும் இரவுநேரங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களைச் செய்கிறார்கள். அவர்களுடனான மோதலால், மாரிமுத்துவுக்கும் அவர் குடும்பத்துக்கும் வரும் துன்பங்களில் இருந்து திரு எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை.
அப்பாவாக வரும் பாரதிராஜா நோயாளியாக, மகன் மீது பாசத்தைக் கொட்டுபவராக தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார். ஆஸ்பத்திரி கழிவறையில் வழுக்கி விழும் காட்சி பதற வைக்கிறது. அக்காவாக வரும் சுபத்ரா, அவருடைய மகளாக வரும் பேபி மோனிகா ஆகிய இருவருடைய முகத்தில் துளியும் சினிமாத்தனம் இல்லை. அவ்வளவு தேர்ந்த நடிப்பு. லிப்ட் மேனாக வரும் அஷ்ரப், வார்ட் பாயாக வரும் ஜீவா, வாட்ச்மேனாக வரும் ஹரி, பிணவறை உதவியாளராக வரும் மகேந்திரன் ஆகியோர் எந்த நேரமும் முகத்தில் வில்லத்தனத்தை தேக்கி வைத்து படம் பார்ப்பவர்களை அச்சத்திலேயே வைத்திருப்பதில் அவர்களின் நடிப்பு திறமை பளிச்சிடுகிறது ஆஸ்பத்திரி ஊழியர்களின் கொலை, கொள்ளை அட்டூழியங்களை நிர்வாகம் அறியாமல் இருப்பது, போலீஸ் துறையின் கவனத்துக்கு வராதது போன்றவை திரைக்கதையின் பலகீனம். சாம் சி.எஸ். இசையில் வைரமுத்து எழுதியுள்ள ‘வா தாரகையே’ பாடல் புத்தம் புது தென்றலாக மனதை லேசாக்குகிறது. ‘அப்பா என் அப்பா’ பாடல் கல் மனதையும் கரையச் செய்யும் ரகம். தந்தையர் தியாகத்தின் தேசிய கீதமாகவும் ஒலிக்கிறது. பின்னணி இசை படத்தை தாங்கி பிடிக்கிறது.
https://www.dailythanthi.com/Cinema/Review/cinema-review-thiruvin-kural-943787