கன்னடத்தின் முதல் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் எனும் பெருமையுடன் வந்திருக்கும் படம் விஜயானந்த்.
விஆர்எல் பிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் ஆனந்த் சங்கேஷ்வர் தயாரித்திருக்கும் விஜயானந்த் திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷிகா சர்மா.பிரமாண்ட பட்ஜெட்டில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் நிஹால் ராஜ்புத், ஸ்ரீஅனந்த் நாக், பிரகாஷ் பெலவாடி, வி ரவிச்சந்திரன், அனிஷ் குருவில்லா, வினயா பிரசாத், சிரி பிரஹலாத், பாரத் போபண்ணா, நிஹால், ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைன் ஷெட்டி, அர்ச்சனா கோட்டிகே ஆகியோர் நடித்துள்ளனர்.
அப்பா வழியாகக் கற்றுக்கொண்ட அச்சகத் தொழிலை நம்பிக்கொண்டிருக்காமல், லாரி வாங்கி, அதைத் தானே ஓட்டி ‘லாஜிஸ்டிக்’ தொழிலில் வெற்றிபெற்ற முன்னோடித் தொழிலதிபர் கர்நாடகாவைச் சேர்ந்த விஜய் சங்கேஸ்வர். ஒருலாரியுடன் தொடங்கி, அதை ஐயாயிரமாக வளர்த்தெடுத்து தனியொரு தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய அவரது தொழில் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள்தான் இதன் கதை.
காலால் பெடல் மிதித்து அச்சிடும் ஒரேயொரு இயந்திரத்தை வைத்துக்கொண்டு தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் விஜய் சங்கேஸ்வரின் அப்பா. அவரை சாமர்த்தியமாகச் சம்மதிக்க வைக்கும் விஜய், ‘விக்டோரியா’ என்கிற தானியியங்கி அச்சு இயந்திரத்தை ரூ.80 ஆயிரம் கடனுக்கு வாங்கி வந்து தொழிலை மேலும் லாபகரமாக மாற்றும் தொடக்கக் காட்சியுடன் ஈர்க்கிறது படம்.
அப்பாவின் எதிர்ப்பை மீறி, லாரி போக்குவரத்துத் தொழிலில் குதிக்கும் விஜய், வாடிக்கையாளர்களைப் பிடிக்க கோகாக் சந்தையில் தனது ஒற்றை லாரியுடன் பல நாட்கள் காத்திருப்பது, அங்குள்ள மார்கெட்டில் ஏற்கெனவே கோலோச்சும் ஆட்களுடன் மல்லுக்கட்டி முதல் சவாரியைப் பிடிப்பது எனதொழில் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் எடுக்கும் துணிச்சலான முடிவுகளும் எதிர்கொள்ளும் கஷ்டங்களும் என நகரும் கதையில்,
விஜய் சங்கேஸ்வராக நடித்திருக்கும் நிஹால், அவர் அப்பா பி.ஜி.சங்கேஸ்வராக நடித்திருக்கும் ஆனந்த் நாக் ஆகியோருடன் துணைக் கதாபாத்திரங்களில் வருபவர்களும் அளவாக நடித்து ஈர்க்கிறார்கள். ஒளிப்பதிவு, இசை போன்ற தொழில்நுட்ப அம்சங்களிலும் குறையில்லை. தொழிலில் வெல்வதற்குத் துணிவு, தன்னம்பிக்கை, நேர்மை போதும் என்பதை சொல்லும் படத்தில் விஜயானந்த் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் முக்கிய சுயசரிதைப் படமாகக் கொடுத்திருக்கிறார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசையமைப்பாளர்: கோபி சுந்தர் சி, ஒளிப்பதிவு: கீர்த்தன் பூஜாரி,எடிட்டர்: ஹேமந்த் குமார் டி, பாடல்கள்-விஜய் பிரகாஷ், கீர்த்தினா வைத்தியநாதன், சண்டை- ரவி வர்மா, நடனம் -இம்ரான் சர்தாரியா, ஒப்பனை-பிரகாஷ் கோகக், உடை-ரிஷிகா சர்மா, மக்கள் தொடர்பு : யுவராஜ்