ஜுராசிக் உலகின் இறுதி அத்தியாயமாகவும் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரசிக்க நிறையவே உள்ளது. தொடக்கத்தில் பொறுமையாக நகரும் திரைக்கதை, இடைவேளைக்கு முன் சூடுபிடிக்கிறது.
குறிப்பாக டைனோசர்கள் துரத்த டூவிலரில் கிறிஸ்பிராட் நிகழ்த்தும் சாகசங்கள், மறுபுறம் அவரது மனைவி பிரைஸின் சேஸிங், லோகஸ்ட்களின் படையெடுப்பு, டைனோசரின் கடத்தல் என இடைவேளைக்கு முன்பு விறுவிறுப்பு தொற்றிக்கொண்டு, இரண்டாம் பாதியை பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.
இரண்டாம் பாதியில் கதை சொல்லவேண்டிய நிர்பந்தமும், விறுவிறுப்பான காட்சிகளையும் கோர்த்திருக்கிறார் இயக்குநர் கொலின் ட்ரெவோரோ. ஆனால், இறுதிப் பாகம் என கூறப்பட்டதால், வழக்கமான காட்சிகளிலிருந்து விலகி சர்ப்ரைஸ் காட்சிகள் நிறைந்திருக்கும் என எதிர்பார்த்திருந்த ஜுராசிக் உலக ரசிகர்களுக்கு இப்படம் சற்று ஏமாற்றம் தான்.
இந்தப் பாகத்தில் வழக்கத்திற்கு மாறாக சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தை கருவாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் டைனோசர்களை முதன்படுத்துவதிலிருந்து திசைதிரும்பியிருக்கும் கவனத்தால், பல்வேறு எதிர்பார்ப்பை சுமந்து வந்த ரசிகர்களுக்கு அதிருப்திதான்.
தவிர, விஎஃப்எக்ஸ், பின்னணி இசை படத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. குறிப்பாக டைனோசருக்கு பயந்து ஓடி, தண்ணீருக்கு அடியில் பிரைஸ் டல்லாஸ் மூழ்கி ஒளிந்திருக்கும் காட்சி படமாக்கப்பட்டிருக்கும் விதம் உண்மையில் பாராட்ட வைக்கிறது.
ஒளிப்பதிவும், விஎஃப்எக்ஸும் அந்தக் காட்சிக்கான தரத்தை கூட்டியிருக்கும். படத்தில் ஒட்டுமொத்த தொழில்நுட்ப குழுவின் உழைப்பும் அபாராமானது. படத்தின் இறுதிக்காட்சியில் ‘என் குட்டிய என்கிட்டையே வந்து கொடுத்துட்ட’ என்பது போல தாய் டைனோசர் கிறிஸ் பிராட்டை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு நகர்ந்து செல்லும் காட்சி நெகிழவைக்கிறது.
இறுதியில் வரும், ‘இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல… எல்லா உயிரினங்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த உலகத்துல நம்மளும் ஒரு பகுதிதான்’ என்ற வசனம் படத்திலிருந்து வெளியே வந்தபிறகும் மனதில் தேங்கிவிடுகிறது.
மற்றபடி, படத்தின் தமிழ் டப்பிங் சிறப்பாகவே வந்திருக்கிறது. சில இடங்களில் டைமிங் காமெடிகளும் பொருந்திப்போகிறது. படத்தின் தீவிர ரசிகர்களை தவிர்த்து, புதிதாக பார்ப்பவர்களுக்கு நல்ல திரை விருந்தாக படம் அமையும் என்பதில் மாற்றமில்லை.
மொத்தமாக படம் ஜுராசிக் வேர்ல்டு ரசிகர்களைத் தாண்டி, பொதுவான பார்வையாளர்களுக்கு ஏமாற்றம் கொடுக்காத படைப்பாக வெளியாகியிருக்கிறது.