இயக்குநர் அமீர் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
இயக்குநர் அமீருக்கு இன்று பிறந்த நாளாகும். அதனால் தனது பிறந்த நாளையொட்டி தனது அடுத்தப் படத் தயாரிப்புப் பற்றிய செய்தியை அமீர் இன்றைக்கு வெளியிட்டுள்ளார்.
இந்தப் புதிய படத்தை அமீரின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான அமீர் ஃபிலிம் கார்ப்பரேசன் நிறுவனமும். JSM பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.
இந்தப் படத்தில் கதையின் நாயகர்களாக அமீர் மற்றும் ஆர்யாவின் தம்பியான சத்யாவும் நடிக்கின்றனர். நாயகியாக சஞ்சிதா ஷெட்டி மற்றும் வின்சென்ட் அசோகன், தீனா, சரண் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
‘மெளனம் பேசியதே’, ‘ராம்’, ‘பருத்தி வீரன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்திற்கும் ராம்ஜிதான் ஒளிப்பதிவு செய்கிறார்.
இசை – யுவன் ஷங்கர் ராஜா, பாடல்கள் – சினேகன், கலை இயக்கம் – வீரமணி, படத் தொகுப்பு – அஹமது, மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.
‘அதர்மம்’, ‘பகைவன்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ரமேஷ் கிருஷ்ணன் இந்தப் புதிய படத்தை இயக்குகிறார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையில், சினேகனின் பாடல் வரிகளில் ஒரு பாடல் பதிவு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இன்னும் சில தினங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.