ராஜ் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி
கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் என முன்களப் பணியாளர்களில் எவ்வித சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பும் இல்லாமல் இரவும் பகலுமாக பத்திரிகையாளர்கள் விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்- ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 200-ஐ நெருங்கியுள்ளது.
இந்த நிலையில் இன்றைய (27-06-2020) பொழுது கண்ணீருடன் விடிந்தது. தமிழன் தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சிகளில் பணியாற்றி ராஜ் தொலைக்காட்சியில் செய்தி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்த அருமைச் சகோதரர் திரு. E.வேல்முருகன் (வயது 41 )கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேல்முருகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் செய்தி தீராத வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டு இன்னுயிர் நீத்த ராஜ் தொலைக்காட்சி செய்தி ஒளிப்பதிவாளர் திரு. E.வேல்முருகனின் மனைவி திருமதி.சண்முகசுந்தரி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். 12 வயதில் ஜீவா என்ற மகன் இருக்கிறார்.
சுமார் 20 ஆண்டு காலம் ஊடகத்துறையில் ஒளிப்பதிவாளாராகப் பணியாற்றிய திரு. E.வேல்முருகனின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. திரு. E.வேல்முருகனை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவரது துயரத்திலும் பங்கேற்கிறோம்.
இந்தத் துயரமான சூழலில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு பத்திரிகையாளர்கள் சார்பில் முக்கியமான கோரிக்கைகளை வேண்டுகோளாக வைக்கின்றோம்.
1.கொரோனா விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டு மறைந்த ஒளிப்பதிவாளர் திரு. E.வேல்முருகனின் குடும்பத்திற்கு கருணைத் தொகையாக ரூ.50 லட்சம் வழங்கிட வேண்டுகிறோம்.
2.மறைந்த ஒளிப்பதிவாளர் திரு. E.வேல்முருகனின் மனைவி திருமதி.சண்முகசுந்தரி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு நிரந்தர அரசுப் பணி வழங்கிட வேண்டுகின்றோம்.
இறுதியாக தமிழகத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வுப் பணியில் இரவும் பகலுமாக ஈடுபட்டு வரும் பத்திரிகையாளர்களுக்கு உடனடியாக காப்பீட்டுத் திட்டம் ஒன்றை உருவாக்கித் தரவும் வேண்டுகின்றோம்.
நம் சகோதரரை இழந்து தவிக்கும் பத்திரிகை ஊடக நண்பர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்போம். இனி ஒரு இழப்பை தாங்கும் சக்தி நமக்கில்லை.