ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் முதல் இந்திய நடிகர், ரூ.300 கோடிக்கு மேல் வியாபாரம் கொண்ட இந்திய சினிமா நடிகர், என்று பல பெருமைகளை கொண்டிருக்கும் ரஜினிகாந்தின், சமீபத்திய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும், வியாபார ரீதியாக தோல்விகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ரஜினிகாந்தின் திரைப்படங்களை விநியோகம் செய்பவர்கள் நஷ்ட்டத்தை சந்திப்பதாக கூறப்படுகிறது.
‘லிங்கா’ படத்தின் மூலம் விஸ்வரூபம் எடுத்த இந்த பிரச்சினை தற்போது ‘தர்பார்’ படத்திலும் வந்து நிற்கிறது. தொடர் விடுமுறை நாட்களில் வெளியான ‘தர்பார்’ படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், படம் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருந்தது. அதே சமயம், தயாரிப்பு தரப்பு எதிர்ப்பார்த்த வசூல் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ‘தர்பார்’ படம் தமிழகத்திலும் நஷ்ட்டத்தை சந்தித்திருப்பதாகவும், அதனால் பெரும் நஷ்ட்டத்தை சந்தித்த விநியோகஸ்தர்கள், தங்களுக்கு இழப்பீடு கோரி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினிகாந்த் மற்றும் படத்தை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் ஆகியோரிடம் முறையிட்டனர். ஆனால், இதில் யாருமே இழப்பீடு வழங்க முன்வரவில்லையாம்.
குறிப்பாக, லைகா நிறுவனம் தாங்கள் படம் தயாரித்ததே நஷ்ட்டத்தில் தான். ரஜினிகாந்துக்கு மட்டும் சுமார் ரூ.109 கோடி சம்பளம் வழங்கியதாகவும், இதனால் தங்களால் எதுவும் செய்ய முடியாது, என்று கூறிவிட்டதாக தகவல் வெளியானது.
இதனால், விநியோகஸ்தர்கள் ரஜினிகாந்தை சந்திக்க முயற்சித்தார்கள். ஆனால், அதில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்து சென்னை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டினார்கள். அந்த போஸ்டரும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால், அடுத்து என்ன செய்வது என்று விநியோகஸ்தர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
தர்பார் படத்தில் ரஜினி வாங்கிய அதிகப்படியான சம்பளத்தால் தான், தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்ட்டம் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் தான் அவர்களால் விநியோகஸ்தர்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.
இந்த நிலையில், ‘தர்பார்’ படத்திற்கு ஏற்பட்ட நிலை ரஜினி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 168 வது படத்திற்கும் ஏற்பட்டு விடுமோ, என்று அப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் அச்சமடைந்ததோடு, ரஜினியிடம் சம்பளம் தொடர்பாக பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
தற்போது சன் பிக்சர்ஸ் ரஜினிகாந்துக்கு வழங்க இருக்கும் சம்பளத் தொகையில், சற்று குறைத்துக் கொள்ள வேண்டும், என்று கலாநிதிமாறன் தரப்பு ரஜினி தரப்புக்கு கோரிக்கை வைத்திருக்கிறது. படம் தொடங்கும் போது சம்பளம் விஷயத்தில் கரார் காட்டிய ரஜினிகாந்த், தர்பார் பிரச்சினையால் தற்போது சம்பள விஷயத்தில் அடிபணிந்துவிட்டாராம். இதனால், கலாநிதிமாறன் மகிழ்ச்சியடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், இது குறித்து தான் கோடம்பாக்கத்திலும், சினிமா நிருபர்கள் வட்டாரத்திலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.