நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வாகன ஓட்டுநராக நாகை மாவட்டம் எருக்கூர் அருகே இருக்கும் தில்லை பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த அன்பு என்கிற அன்புசெழியன் பணியாற்றி வந்தார். பொதுக்கூட்டங்களுக்கு செல்லும் போது கட்சி நிகழ்வுகள் சம்பந்தமாக வெளிமாவட்டங்களுக்கு செல்லும்போதும் சீமானின் காரை அன்பு செழியன் தான் ஓட்டி செல்வார். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட அன்புச் செழியன், சிகிச்சை பலனின்றி திடீரென மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அன்புச்செழியன் மரணமடைந்த செய்தி அறிந்த சீமான் அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக தில்லைப்பட்டினம் கிராமத்திற்கு சென்றார். அவருடன் நாம் தமிழர் கட்சியினரும் ஏராளமானோர் சென்றார். அன்புச்செழியன் வீட்டிற்கு சென்ற சீமான், அங்கு அவரது உடலைப்பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். அவரை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர். இறுதி சடங்கில் அன்புவின் சடலத்தை முதல் ஆளாக சீமான் தூக்கிவந்தார்.
இதுகுறித்து சீமான் கார் ஓட்டுநர் மறைவிற்கு நாம் தமிழர் கட்சி சார்பாக இரங்கல் குறிப்பு வெளியிடப் பட்டுள்ளது. அதில், சீமானிற்கு வெறும் வாகன ஓட்டுனராக மட்டுமல்லாது அவரது குறிப்பறிந்து தேவைகளை பூர்த்தி செய்கிற ஒரு தம்பியாக இருந்துள்ளார். அவரது உயிர்க்காப்பாளனாக, எப்பொழுதும் புன்னகை மாறாது தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்த தம்பியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறப்பட்டிருந்தது.