நாயகி அக்ஷதா தந்தையை இழந்து தனது தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். நாயகியை இளைஞர் ஒருவர் காதலித்து ஏமாற்றி விடுகிறார். இதனால் கருவுற்ற அக்ஷதா, கருவை கலைக்க மருத்துவர் நேகா சக்சேனாவை நாடுகிறார். ஆனால் அவரோ இங்கு கருக்கலைப்பு செய்தால் பிரச்சனையாகிவிடும் என கூறி அக்ஷதாவை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்.
கருக்கலைப்பு செய்வதற்காக சென்னை வரும் அக்ஷதாவை, மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி கூட்டிச்செல்லும் ஆட்டோ டிரைவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிடுகின்றார். அப்போது மயக்கமடையும் அக்ஷதாவை, இறந்துவிட்டதாக கருதி அங்கேயே விட்டு சென்றுவிடுகின்றனர்.
போலீஸ் அதிகாரியான ஆர்.கே.சுரேஷ் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கிறார். பின்னர் ஆர்.கே .சுரேஷ் அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மைகளைத் தேடிச்செல்கிறார். இறுதியில் ஆர்.கே.சுரேஷ் அவர்களை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் ஆர்.கே.சுரேஷ், மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். இரண்டாம் பாதியில் வந்தாலும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். பெண்களுக்கு எதிரான குற்றத்தை கண்டறிவதற்காக அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் படத்தின் வேகத்தை கூட்டுகிறது.
நாயகி அக்ஷதா ஸ்ரீதர் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். அதேபோல் டாக்டராக வரும் நேகா சாக்சேனாவும், தாயாக வரும் சர்மிளாவும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஆட்டோ டிரைவராக வரும் வினோத் கிருஷ்ணன் கொடூர வில்லனாக மிரட்டுகிறார்
நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளும் கொடுமைகளும் அதிகரித்துவரும் நிலையில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது. பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் உண்மைகள் வெளியே தெரியாமலேயே புதைக்கப்படுகின்றன. பொள்ளாச்சி, தெலுங்கானா போன்ற சம்பவங்களை மையமாக வைத்து இந்த ‘வன்முறை’ படம் எடுத்துள்ளார் இயக்குனர் மஞ்சித் திவாகர்.