இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘நான் சிரித்தால்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதில், ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு பேசுகையில், “நாங்கள் ‘நான் சிரித்தால்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை நான் படம் பார்க்கவில்லை. ஆதியைப் பார்க்கும்போது எனக்கு சுந்தர்.சி-யை பார்ப்பது போலவே இருக்கும். ஆனால், அவர்களுடைய விடாமுயற்சி, கடினஉழைப்பு, அர்ப்பணிப்பு போன்றவற்றை பார்க்கும்போது நானும், ஆதியின் மனைவியும் பிரமித்துப் போகிறோம்.” என்றார்.
‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி பேசுகையில், “இப்படத்தில் நான் சிரித்திருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் ‘காந்தி’. எங்கெங்கெல்லாம் சிரிக்கக் கூடாதோ அங்கெல்லாம் சிரிப்பேன். இப்படம் எனக்கு சிறப்பான படம். அவ்னி மூவிஸ் நிறுவனம், சுந்தர்.சி கூட்டணியில் இது எனக்கு மூன்றாவது படம். ஆனால், எங்களது மூன்று படங்களுக்கும் மூன்று இயக்குநர்கள். என்னுடைய கனவுகளை இயக்குநர் சுந்தர்.சி நனவாக்கினார். இதற்கு முன் வெளியான இரண்டு படங்கள் வெற்றி பெற்றதற்கு இயக்குநர் சுந்தர்.சி எனக்கு கொடுத்த சுதந்திரம் தான் காரணம். அதே வகையில் இப்படமும் வெற்றிபெறும்.
ஆரம்ப காலகட்டத்தில் ராப் பாடகராகத்தான் வந்தேன். நான் சுதந்திர பாடகராக வந்தபோது யாரும் அங்கீகரிக்கவில்லை. ஆனால், இப்போது தென் தமிழகத்தில் ‘ஹிப் ஹாப்’ பெயர் தனி மனிதனின் பெயராக அடையாளம் காணப்பட்டிருக்கிறது.. சென்னையில் தெருவோரங்களில் ‘வாட்டர் பாட்டில்’ என்ற குழுவுடன் இணைந்தோம். அதன்பிறகு ரேடியோவில் ‘வாடிபுள்ள வாடி’ பாடல் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைப் பார்த்து இயக்குநர் சுந்தர்.சி என்னை அழைத்தார். பாடலுக்கு வாய்ப்பு கொடுக்க நினைத்த அவரிடம் ஒரு படம் கொடுங்கள் என்று கேட்டேன். அப்படித்தான் எனது சினிமா பயணம் தொடங்கியது.” என்றார்.
இயக்குநர் சுந்தர்.சி பேசுகையில், “இப்படம் என்னுடைய தயாரிப்பில் ஆதி நாயகனாக நடிக்கும் மூன்றாவது படம். சிறு பையனாக வந்து தன்னுடைய நல்ல குணத்தால் ரசிகர்களின் மனதை வென்றிருக்கிறார். எனக்கும் அவருக்கும் அதிக வயது வித்தியாசம் இருந்தாலும் ஆதியை என்னுடைய சகோதரராகவே கருதுகிறேன். ‘மீசைய முறுக்கு’ நட்பை மையப்படுத்தும் படம், ‘நட்பே துணை’ விளையாட்டை மையப்படுத்தும் படம். ஆனால், ஆதியிடம் இருக்கும் நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்த விரும்பினேன். அதன் முயற்சிதான் ‘நான் சிரித்தால்’ திரைப்படம்” என்றார்.
படத்தின் இயக்குநர் ராணா பேசுகையில், ”எனது பெற்றோர்கள், ரஜினிகாந்த் மற்றும் என்னுடைய இயக்குநர் ஷங்கர் இவர்கள் மூவருக்கும் நன்றி. ரஜினிகாந்த் என்னுடையை ‘கெக்க பெக்க’ குறும்படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டினார். அவரின் பாராட்டுத்தான் 20 நிமிட குறும்படம் 2.20 மணி நேரமாக மாறியது. இயக்குநர் ஷங்கர் செய்யும் பணியில் 5 சதவீதம் செய்தாலே நான் வெற்றிப் பெற்று விடுவேன்.
உலக நாடுகளில் அழுத்தத்தில் இருக்கக்கூடிய முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா இருக்கிறது. நமக்கிருக்கும் அழுத்தம், தோல்வி, சோகம், கவலைகள், பிரச்னைகள் போன்றவற்றை தள்ளி வைத்து சிரித்தால் எப்படி இருக்கும்? என்பதே இப்படம். ஆகையால், அனைவரும் திரையரங்குகளில் வந்து படத்தைப் பாருங்கள்.” என்றார்.
வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தை ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் டி.முருகானந்தம் வெளியிடுகிறார்.