ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் இனி யாரையும் கைது செய்ய வேண்டாம் என்று திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த மாதம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து சிபிஐ காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு வந்தது. சிபிஐ காவல் முடிவடையும் நிலையில் சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க வேண்டாம் என சிதம்பரம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு செப்டம்பர் 19-ம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சிறையில் இருந்தவாறு தனது குடும்பத்தார் மூலம் டுவிட்டர் பக்கத்தில் அவர் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் சிலர் என்னை பார்த்து இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை முன்மொழிந்த அரசு அதிகாரிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. அப்படி இருக்கும் போது கடைசியாக கையெழுத்து போட்ட நீங்கள் மட்டும் எவ்வாறு கைது செய்யப்பட்டீர்கள்? எனக் கேட்கின்றனர். ஆனால், மக்களின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.
எந்த அதிகாரியும் எந்த தவறையும் செய்யவில்லை. யாரும் கைது செய்யப்பட வேண்டும் என நான் விரும்பவில்லை’ என்று அந்த பதிவில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.