புகையிலையால் பாதித்த நுரையீரலுக்கு…நுரையீரலை பலப்படுத்தும் டிரிங்க்!
இயற்கை வைத்தியம், ஹெல்த் ஸ்பெஷல்!
பகிர்வு
புகையிலையால் பாதித்த நுரையீரலுக்கு…
உயிர்வாழ ஆதாரமான ஆக்ஸிஜனைத் தந்து, உடலில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றும் உயிர்த் தொழிற்சாலை நுரையீரல். ஒரு நாளைக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை இந்த சுவாசித்தல் பணி நடந்து கொண்டே இருக்கிறது.
தூசு நிறைந்த காற்றைச் சுவாசிக்கும்போது, நம்முடைய நுரையீரலில் உள்ள மெல்லிய முடி போன்ற அமைப்பு, தூசுகளை வடிகட்டி நுரையீரலுக்கு அனுப்புகிறது. ரோமம் போன்ற நுண்ணிழைகளால் ஆன இதற்கு, ‘சில்லியா’ (Cilia) என்று பெயர். புகைப்பழக்கம், புகையிலையைச் சுவைப்பது போன்ற காரணங்களால், ‘சில்லியா’ உதிர்ந்து அதன் எண்ணிக்கை குறையும். இதனால், நுரையீரலில் நஞ்சு சேர்ந்துகொண்டே போகும். புகையிலையால் உண்டாகும் நஞ்சை, சில்லியாவால் சுத்தம் செய்ய முடியாமல் போக, நுரையீரல் பாதிக்கத் தொடங்கும்.
ஒரு நாளைக்கு ஐந்து பாக்கெட் சிகரெட் வீதம், ஒருவர் தொடர்ந்து ஐந்து வருடங்கள் பிடித்தால், அவருக்கு நுரையீரல் புற்றுநோய் வர 50 சதவிகிதம் வாய்ப்புகள் உண்டு. அவர், உடனடியாக சிகரெட்டை நிறுத்தினால் சில்லியாவின் எண்ணிக்கைகள் அதிகரித்து, நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்க முடியும். மேலும், பாதிக்கப்பட்ட நுரையீரலைச் சில எளிய உணவு, மூலிகைகள் மூலம் சரிப்படுத்த முடியும்.
அகத்திக் கீரையின் பூவும் முள்ளங்கியும் நுரையீரலுக்கான சிறந்த உணவு. அகத்திப் பூ, உடலில் இருக்கும் நிக்கோட்டினின் அளவைக் குறைக்க உதவும். உடலில் உள்ள நஞ்சை வெளியேற்றிவிடும். மேலும், கண் சிவந்து போதல், கண்களில் நீர் வழிதல், அலர்ஜி காரணமாகக் கண்களில் பிரச்னை, சூரிய வெப்பம், தூசு, புகையால் ஏற்படும் கண் எரிச்சல், கண் அழுத்தம் (Glucoma), கண் அரிப்பு ஆகிய பிரச்னைகளுக்கு அகத்திப் பூ கலந்த நீரால் கண்களைக் கழுவினால், மேற்சொன்ன பிரச்னைகள் அனைத்தும் குணமாகும்.
முள்ளங்கியில் உள்ள ராபனைன் (Raphanine) என்ற ரசாயனம் புற்றுநோயை நீக்கக்கூடியது. ராபனைனை எலிக்குக் கொடுத்துப் பரிசோதனை செய்ததில், எலியின் நுரையீரலில் உள்ள கட்டிகளின் வளர்ச்சி வெகுவாகக் குறைந்தன. எம்பிசெமா (Emphysema) என்ற நுரையீரல் பாதிப்புப் பிரச்னையும் முள்ளங்கி சாற்றால் குணமாகிறது. நிமோனியா, புகையிலையால் வந்த புற்றுநோய் போன்றவைக்கு, இந்தச் சாறு அருமருந்து. தொடர்ந்து குடித்துவந்தால் மூச்சுக் குழாய் சுருக்க நோய் (Chronic obstructive pulmonary disease) குணமாகத் தொடங்கும். நுரையீரல் பலப்படும். நுரையீரல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னைகளின் வீரியமும் வெகுவாகக் குறையும்.
இதனுடன், பத்மாசனம், சித்தாசனம் (யோக முத்திரை), பிராணயாமம் போன்றவற்றை செய்துவந்தால், இயற்கையாகவே நுரையீரல் பலப்படும். பாதிக்கப்பட்ட நுரையீரல்கூட புத்துயிர் பெறும்.
முள்ளங்கி சாற்றின் பலன்கள்
முள்ளங்கி சிறுநீர்ப் பெருக்கியாகச் செயல்படுகிறது. கழிவுகளை வெளியேற்றக்கூடியது. சிறுநீரகக் கற்களை கரையவைக்கும். கல் அடைப்பு, கால் வலி, அதிகாலை முக வீக்கம் போன்ற பிரச்னைகளுக்குச் சிறந்த மருந்து. மாத்திரைகளைவிட 100 மடங்கு குணமாக்கும் திறன் முள்ளங்கிச் சாறுக்கு உண்டு. உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு முள்ளங்கி சாறு சிறந்த வாய்ப்பு. உடலில் அடிவயிறு, கை, கால் போன்ற இடங்களில் படியும் கொழுப்பைக் (Adipose tissue) கரைக்கும். கெட்ட கொழுப்பை முற்றிலுமாக நீக்கி, மீண்டும் கொழுப்புப் படியாமல் தடுக்கும்.
நுரையீரலை பலப்படுத்தும் டிரிங்க்!
தேவையானவை:
அகத்திப் பூ – 5,
முள்ளங்கி – 1,
தண்ணீர் – தேவையான அளவு.
செய்முறை:
ஐந்து அகத்தி பூக்களைச் சுத்தம்செய்து, 200 மி.லி நீரில் போட்டு மூடிவைத்து, பாதியாகச் சுண்டவிட வேண்டும். இந்த டிகாக்ஷனை 50 மி.லி எடுத்து, அதனுடன் சம அளவு முள்ளங்கி சாறு கலந்து, 45 நாட்களுக்குக் குடித்துவந்தால், பாதித்த நுரையீரல் சரியாகும். இதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அருந்தலாம்.