லண்டன்,
இந்தியா உலக கோப்பையை விட்டு வெளியேறியது, ஆனால் அணி இங்கிலாந்தை விட்டு வெளியேறவில்லை. ஏனெனில் விராட் கோலி மற்றும் அணியினர் ஐ.சி.சி. உலக கோப்பை 2019 இறுதிப்போட்டி வரை இங்கிலாந்தில் தங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
கடந்த புதன்கிழமை நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததையொட்டி அரையிறுதியிலிருந்து இந்தியா திடீரென வெளியேறியது கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை உடைத்ததோடு மட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட் அணியின் லாஜிஸ்டிக் மேலாளருக்கு ஒரு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
கோலி, டோனி மற்றும் பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் ஞாயிற்றுக்கிழமை வரை மான்செஸ்டரில் சிக்கித் தவிப்பார்கள். சரியான நேரத்தில் இந்திய தரப்புக்கான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்ய பி.சி.சி.ஐ. தவறிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் நேற்று வியாழக்கிழமை மான்செஸ்டரில் உள்ள தாங்கள் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து வெளியேறினர், ஆனால் ஞாயிற்றுக்கிழமை வரை அவர்கள் அந்த நகரத்தில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலானவர்கள் ஜூலை 14 வரை மான்செஸ்டரில் இருப்பார்கள், பின்னர் அங்கிருந்து புறப்படுவார்கள்.
டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என பி.சி.சி.ஐ.யின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஒரு சில வீரர்கள் இந்தியாவுக்கு திரும்பத் தயாராக இருக்கிறார்கள், இன்னும் சிலர் இரண்டு வார இடைவெளிக்கு பின் திரும்பி வருவார்கள் அல்லது வெவ்வேறு இடங்களுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 3 முதல் மேற்கிந்திய தீவுகளில் டெஸ்ட் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் சுற்றுப்பயணத்திற்கு இந்தியா தயாராக உள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் மூன்று 20 ஓவர் போட்டிகள் (ஆகஸ்ட் 3 முதல் 8 வரை) உள்ளன. அவற்றில் இரண்டு அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 8 முதல் 14 வரை ஒருநாள் தொடரும், ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 3 வரை 2 டெஸ்ட் போட்டிகளும் நடைபெறும்.