சென்னை:
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் என்பது இல்லை இல்லை, பற்றாக்குறை தான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். கவிஞர் கண்ணதாசனின் 93வது பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தண்ணீர் தட்டுப்பாட்டை சீர் செய்ய முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர்.
குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் என்பது இல்லை, குடிநீர் பற்றாக்குறை இருக்கலாம். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எதிர்க்கட்சிகள் தண்ணீர் விஷயத்தை பெரிதாக்கி போராட்டம் நடத்துகிறது. ஜோலார்பேட்டை நீர் தண்ணீர் வரக்கூடாது என்பது சென்னை மக்களுக்கு செய்யும் துரோகம். எனவே, ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை பொறுத்தவரை, எந்த பகுதி மக்களுக்கும் பாதிப்பில்லாமல் நிறைவேற்றப்படும். ஜிஎஸ்டி வரி வருவாய் வகையில், மத்திய அரசு 6,000 கோடி ரூபாய் தரவேண்டியுள்ளது. அதைப் பெறுவதற்காக அழுத்தம் தரப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.